TNPL 2022: முதல் போட்டியிலேயே சூப்பர் ஓவர் - நெல்லை அணி 'த்ரில்' வெற்றி

author img

By

Published : Jun 24, 2022, 8:35 AM IST

Updated : Jun 24, 2022, 9:25 AM IST

TNPL 2022 MATCH 1 CSG vs NRK RESULT

டிஎன்பிஎல் தொடரில் சென்னை - நெல்லை அணிக்களுக்கு இடையிலான முதல் போட்டி சமனில் முடிந்ததால், அதன்பின் நடைபெற்ற சூப்பர் ஓவரில் நெல்லை அணி வெற்றி பெற்றது.

திருநெல்வேலி: 6ஆவது தமிழ்நாடு பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடர் நேற்று (ஜுன் 23) திருநெல்வேலியில் தொடங்கியது. 32 போட்டிகள் கொண்ட இந்த தொடர் ஜூலை 31ஆம் தேதி வரை நெல்லை, திண்டுக்கல், கோவை மற்றும் சேலம் ஆகிய மாநகரங்களில் நடைபெறுகிறது. இதில் மொத்தம் 8 அணிகள் போட்டியிடுகின்றன.

தொடரின் முதல் போட்டியில் நடப்பு சாம்பியன் சேப்பாக் சூப்பா் கில்லீஸ் அணி, நெல்லை ராயல் கிங்ஸ் உடன் மோதியது. திருநெல்வேலியில் உள்ள ஐசிஎல் சங்கர் நகர் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற சென்னை அணி கேப்டன் கௌசிக் காந்தி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார்.

நெல்லை பேட்டிங்: இதைத் தொடர்ந்து களமிறங்கிய நெல்லை அணிக்கு தொடக்க ஆட்டக்காரர் பிரதோஷ் ரஞ்சன் பால் 7 ரன்களில் வெளியேறி ஏமாற்றம் அளித்தார். தொடர்ந்து, பாபா அபராஜித், கேப்டன் பாபா இந்திரஜித் ஆகியோரும் சொற்ப ரன்கள் எடுத்து அடுத்தடுத்த ஓவர்களில் பெவிலியன் திரும்பினர்.

மற்றொரு தொடக்க ஆட்டக்காரரான லக்ஷ்மேஷா சூர்யபிரகாஷ், சஞ்சய் யாதவ் உடன் இணைந்து நிலைத்தடுமாறிய நெல்லை அணியை அபாரமான ஆட்டத்தின் மூலம் மீட்டனர். சூர்யபிரகாஷ் நிதானத்தையும், சஞ்சய் அதிரடியையும் கைக்கொள்ள ஸ்கோர் சீரான வேகத்தில் உயர்ந்தது. இருவரும் அரைசதம் கடந்து 133 ரன்களை சேர்த்த நிலையில், சூர்யபிரகாஷ் 62 (50) ரன்களில் ஆட்டமிழந்தார்.

சஞ்சய் யாதவ் வெறியாட்டம்: தொடர்ந்து, சஞ்சய் யாதவ் சிக்ஸர்களையும், பவுண்டரிகளையும் குவிக்க மறுமுனையில் அஜிதேஷும் அவருக்கு சற்று கைக்கொடுத்தார். இதனால், நெல்லை அணி 20 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்து 184 ரன்களை எடுத்தது. சஞ்சய் யாதவ், இறுதிவரை ஆட்டமிழக்காமல் 6 சிக்ஸர்களுடனும், 5 பவுண்டரிகளுடனும் 87 (47) ரன்களை குவித்திருந்தார். சென்னை பந்துவீச்சு தரப்பில் சந்தீப் வாரியர், மணிமாறன் சித்தார்த், சோனு யாதவ், ஹரீஷ் குமார் ஆகியோர் தலா 1 விக்கெட்டை வீழ்த்தினர்.

185 என்ற இமாலய இலக்குடன் களம் புகுந்த சென்னை அணி ஓப்பனர்கள் கௌசிக் காந்தி, நாரயணன் ஜெகதீசன் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். நாராயணன் 15 பந்துகளில் 25 ரன்களுடன், ராதாகிருஷ்ணன் 1 ரன்னுடனும் ஆட்டமிழந்தனர். அடுத்தவந்த சசிதேவ் சற்றுநேரம் தாக்குபிடித்தார்.

கௌசிக் - சோனு யாதவ் ஜோடி: சசிதேவ் 15 ரன்களில் வெளியேறிய பின், ஜோடி சேர்ந்த கௌசிக், சோனு யாதவ் ஆகியோர் நிலையான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இருவரும் இணைந்து 50 ரன்கள் சேர்த்த நிலையில் சோனு யாதவ் 34 (23) ரன்களில் ஆட்டமிழந்தார். ஆரம்பத்திலிருந்து அதிரடியாக ஆடிவந்த கேப்டன் கௌசிக் 64 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேற ஆட்டம் சற்று நெல்லை அணி பக்கம் திரும்பியது.

சூப்பர் ஓவர்: கடைசி ஓவரில் 15 ரன்கள் தேவைப்பட்ட நிலையில், ஹரீஷ் குமார் 2ஆவது பந்தில் பவுண்டரி, 4ஆவது பந்தில் சிக்ஸர்களை விளாசினார். 5ஆவது பந்து டாட் ஆக, கடைசி பந்தில் அவர் பவுண்டரி அடித்து ஆட்டத்தை சமன் செய்தார். இதனால், வெற்றியை தீர்மானிக்க சூப்பர் ஓவர் முறை கடைபிடிக்கப்பட்டது. இதன்படி, முதலில் ஆடிய சென்னை அணி 6 பந்துகளில் 9 ரன்களை எடுக்க, நெல்லை அணி வெறும் 5 பந்துகளில் இலக்கை அடைந்து தங்களின் முதல் வெற்றியை பதிவு செய்தது.

பேட்டிங்கில் 87 ரன்களும், பந்துவீச்சில் 2 விக்கெட்டைகளையும் எடுத்து நெல்லை அணிக்கு சிறப்பான பங்களிப்பை வழங்கிய சஞ்சய் யாதவ் ஆட்டநாயகனாக தேர்வானார். ஐபிஎல் தொடர் மெகா ஏலத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி சஞ்சய் யாதவை 50 லட்ச ரூபாய்க்கு எடுத்திருந்தது. ஆனால், அவருக்கு ஒரு போட்டியில் கூட விளையாட வாய்ப்பு வழங்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: ஆசிய சைக்கிளிங் சாம்பியன்ஷிப்பில் இந்திய வீரர் ரொனால்டோவுக்கு வெள்ளி!

Last Updated :Jun 24, 2022, 9:25 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.