சையத் முஷ்டாக் அலி கோப்பை: கர்நாடகத்தை பழிதீர்த்து தமிழ்நாடு சாம்பியன்!

author img

By

Published : Nov 22, 2021, 6:21 PM IST

SMAT

சையத் முஷ்டாக் அலி டி20 தொடரில் கர்நாடக அணியை தமிழ்நாடு அணி நான்கு விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி மூன்றாவது முறையாக சாம்பியன் ஷிப்பை வென்றது.

உள்ளூர் டி20 தொடரான சையத் முஷ்டாக் அலி டி20 தொடரின் போட்டிகள் நாட்டின் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வந்தன. இந்தப் போட்டியின் கால் இறுதியில் தமிழ்நாடு அணி கேரளத்தை வீழ்த்தி அரையிறுதி போட்டிக்குள் நுழைந்தது.

அரையிறுதியில் ஹைதராபாத் அணியை தோற்கடித்து இறுதி போட்டிக்கு தமிழ்நாடு அணி முன்னேறியது. இன்று (நவ. 22) இறுதி போட்டி டெல்லியில் உள்ள அருண் ஜெட்லீ மைதானத்தில் நடைப்பெற்றது. இறுதி போட்டியில் கர்நாடகம் - தமிழ்நாடு அணி மோதியது.

டாஸ் வென்ற தமிழ்நாடு பந்து வீச்சைத் தேர்வு செய்தது. தமிழ்நாடு சுழற்பந்து வீச்சாளர்கள் சிறப்பாகப் பந்து வீசினர். இன்றைய ஆட்டத்தில் சாய் கிஷோர் நான்கு ஓவர்களில் 12 ரன்கள் கொடுத்து மூன்று விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

கர்நாடக அணி 20 ஓவர்களில் ஏழு விக்கெட் இழப்புக்கு 151 ரன்கள் எடுத்தது. கர்நாடக அணி 32 ரன்களுக்கு மூன்று விக்கெட்டுகளை இழந்தது. அதன்பின் வந்த அபினவ் மனோகர் 46 ரன்களும் பிரவீன் துபே 33 ரன்களும் எடுத்தனர்.

அதன் பின் பேட்டிங் செய்த தமிழ்நாடு அணியின் தொடக்க வீரர் ஹரி நிஷாந்த் 12 பந்துகளில் 23 ரன்கள் எடுத்து அதிரடி தொடக்கத்தை கொடுத்தார்.

ஹரி நிஷாந்தை தொடர்ந்து பேட்டிங் செய்த ஜெகதீசன் 41 ரன்களும் சாய் சுதர்சன் 9 ரன்களும், தமிழ்நாடு அணியின் கேப்டன் விஜய் சங்கர் 18 ரன்களும் எடுத்திருந்தனர்.

இவர்கள் சிறிது இடைவெளியில் ஆட்டமிழக்க தமிழ்நாடு அணிக்கு 28 பந்துகளில் 57 ரன்கள் தேவைப்பட்டது. இந்த நிலையில், ஷாருக் கான் களமிறங்கினார். 17,18 ஆகிய ஓவர்களில் தமிழ்நாடு அணி ரன்களை எடுக்க திணறியது. இதனால் கடைசி இரு ஓவர்களில் 30 ரன்கள் தேவைப்பட்டன. கடைசி ஏழு பந்துகளில் 22 ரன்கள் தேவைப்பட்டன.

அப்போது ஷாருக் கான் ஒரு சிக்ஸர் அடிக்கவே கடைசி ஓவரில், தமிழ்நாடு அணி வெற்றி பெற 16 ரன்கள் தேவைப்பட்டது. கடைசி ஓவரை பிரதீக் ஜெயின் வீசினார். அப்போது முதல் பந்தை சாய் கிஷோர் ஒரு பவுண்டரி அடித்தார். அதைத் தொடர்ந்து ஜெயின் இரண்டு வைட் பந்துகளை வீசனார்.

இதனால் கடைசிப் பந்தில் 5 ரன்கள் எடுத்தால் தமிழ்நாடு அணி வெற்றி பெறும் பரபரப்பான சூழ்நிலைக்கு வந்தது. அப்போது பேட்டிங் செய்த ஷாருக் கான் சிக்ஸர் அடித்து தமிழ்நாடு அணியை வெற்றி பெறச்செய்தார். இதன் மூலம் ஷாருக் கான் ஆட்ட நாயகன் விருதை பெற்றார்.

தமிழ்நாடு அணி 20ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 153 ரன்கள் எடுத்து சையத் முஷ்டாக் அலி கோப்பையை தக்கவைத்துக்கொண்டது.

2019-2020 ஆண்டில் இறுதிப்போட்டிக்கு முன்னேறிய தமிழ்நாடு அப்போது கர்நாடகாவிடம் தோல்வியை தழுவியது. அந்த தோல்விக்கு பதிலடிக்கொடுக்கும் விதமாக இம்முறை தமிழ்நாடு அணி கர்நாடக அணியை தோற்கடித்துள்ளதாக ரசிகர்கள் சமூகவலைதளங்களில் கருத்து பதிவிட்டுள்ளனர்.

முன்னதாக தமிழ்நாடு அணி 2006-2007, 2020-2021 என இரு முறை சையத் முஷ்டாக் அலி தொடரை வென்றது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: கர்நாடகாவிடம் வீழ்ந்த தமிழ்நாடு!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.