ஜடேஜா Vs சிஎஸ்கே நிர்வாகம் - அணியில் இடமில்லாததால் விலகினாரா - ரசிகர்கள் அதிர்ச்சி!

author img

By

Published : May 12, 2022, 5:21 PM IST

ஜடேஜா

காயம் காரணமாக ஆல் ரவுண்டர் ஜடேஜா நடப்பு ஐபிஎல் தொடரில் இருந்து விலகி இருக்கும் நிலையில் , அவரை சிஎஸ்கே நிர்வாகம் இன்ஸ்டாகிராமில் பின் தொடர்வதை நிறுத்தி இருப்பது ரசிகர்களிடையே விவாதத்தை எழுப்பியுள்ளது.

தலைகீழான தொடக்கம்: நடப்பு ஐபிஎல் தொடருக்கான வீரர்கள் ஏலத்திற்கு முன்பாக நடந்த வீரர்கள் தக்க வைப்பில் தோனி ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சி காத்திருந்தது. சென்னை அணி நிர்வாகம் 4 முறை ஐபிஎல் சாம்பியன், 2 முறை CL சாம்பியன் பட்டங்களை வென்று தந்த தோனியை முதல் வீரராக 16 கோடி ரூபாய்க்கு தக்க வைக்காமல் ஜடேஜாவை தக்க வைத்தது.

தோனி விளையாட போவது இன்னும் ஒரு சில ஆண்டுகள் தான்; அதனால் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டு இருக்கலாம் எனக் கூறப்பட்டது. தோனி 2ஆவது வீரராக 12 கோடி ரூபாய்க்கு தக்க வைக்கப்பட்டார். என்ன தான் காரணங்கள் சொன்னாலும் , தோனியால் கட்டமைக்கப்பட்ட அணியில் அவரையே 2ஆவது வீரராக தக்க வைத்தது தவறு என அணி நிர்வாகத்தை ரசிகர்கள் கடிந்து கொண்டனர்.

கேப்டன் நாற்காலியில் ஜடேஜா: தொடர் ஆரம்பிக்கும் முன் தோனி ரசிகர்களுக்கு மற்றொரு அதிர்ச்சி காத்திருந்தது. தொடர் தொடங்க 2 நாட்களே இருந்த நிலையில் இனி சென்னை அணிக்கு ஜடேஜா தான் கேப்டன் என அறிவிக்கப்பட்டது. இதிலும் பல சர்ச்சைகள் ஏற்பட்டன. ஏனென்றால், ஐபிஎல் வீரர்கள் ஏலத்தின்போது தலைமை நிர்வாக அலுவலர் காசி விஸ்வநாதன், தலைவன் தோனி சொன்ன வீரர்களையே குறி வைத்து வாங்கியதாகக் கூறியிருந்தார்.

தனது அணிக்கு இந்த பவுலர்கள் வேண்டும், பேட்ஸ்மேன்கள் வேண்டும் ஏலத்தில் வாங்குங்கள் என கேப்டன்கள் அணி நிர்வாகங்களிடம் சொல்வது வழக்கம். அப்படி இருக்கும்பட்சத்தில் தோனி தேர்வு செய்த வீரர்களை வைத்து ஜடேஜா பிளேயிங் 11ஐ தேர்வு செய்வது சிரமமாக இருக்கும் என சென்னை அணி நிர்வாகம் உணரவில்லையா என முன்னாள் வீரர்கள் கருத்து தெரிவித்துஇருந்தனர்.

தொடர் தோல்விகளால் துவண்டு போன சிஎஸ்கே: சரி தொடர் ஆரம்பித்ததும், சென்னை அணியின் வின்டேஜ் ஆட்டத்தைக் காணலாம் என்ற ஆர்வத்துடன் இருந்த ரசிகர்களுக்கு பெருத்த ஏமாற்றமே காத்திருந்தது. முதல் 8 ஆட்டங்களில் 2இல் மட்டுமே வெற்றி கண்டு, தொடரின் பாதியிலேயே பிளே ஆஃப் வாய்ப்பை இழக்கும் சூழலுக்கு தள்ளப்பட்டது.

சொதப்பலான பவுலிங் அட்டாக், ரிதுராஜின் ஃபார்ம் , 14 கோடி ரூபாய்க்கு வாங்கப்பட்ட தீபக் சாஹர் விலகல் , காயம் காரணமாக ஆடம் மில்னே விலகல் என அடி மேல் அடி, வாங்கி ஆட்டம் கண்டது சிஎஸ்கே. அனைத்திற்கும் பதில் சொல்ல வேண்டிய கட்டாயத்திற்கு ஜடேஜா தள்ளப்பட்டார். இப்படி ஒரு அணியைத் தலைமை தாங்க விருப்பம் இல்லாததால் தான் தோனி கடைசி நேரத்தில் ஜடேஜாவிடம் பொறுப்பைத் தள்ளி விட்டு ஒதுங்கி கொண்டதாக ரசிகர்களே பேச ஆரம்பித்தனர்.

சுமை தாங்காமல் திணறிய ஜடேஜா: கேப்டன் பொறுப்பு ஜடேஜாவின் ஃபார்மையும் கிளீன் போல்டாக்கியது. தோனியுடன் சேர்ந்து பல ஆட்டங்களில் ஃபினீஷ் செய்து கொடுத்த ஜடேஜா இந்தத் தொடரில் ஒரு போட்டியில் கூட 35 ரன்களுக்கு மேல் அடிக்கவில்லை. பீல்டிங்கில் சென்னை அணிக்கு ரெய்னாவுக்கு பின் நம்பிக்கை நாயகனாக இருந்த ஜடேஜா, இந்தத்தொடரில் எளிதான கேட்சுகளை கூட தவற விட, அது அவருக்கும் அணிக்கும் பாதகமானது.

ஐபிஎல் தொடரில் இருந்து விலகல்: என்ன செய்வதென்று தெரியாமல், மீண்டும் தோனியிடமே கேப்டன் பொறுப்பை ஒப்படைத்தார், ஜடேஜா. பெங்களூரு அணிக்கு எதிரான ஆட்டத்தில் கேட்ச் பிடிக்க முயன்றபோது அவருக்கு காயம் ஏற்பட்டது. இதனால் அவர் ஐபிஎல் தொடரில் இருந்து விலகியுள்ளார். ஆனால், சரியான ஃபார்மில் இல்லாததாலேயே ஜடேஜா காயம் என்ற பெயரில் கழற்றி விடப்பட்டு இருக்கலாம் என ரசிகர்கள் நினைக்கின்றனர்.

இன்ஸ்டாகிராமில் அன் ஃபாலோ செய்த சிஎஸ்கே: தொடரில் இருந்து விலகி ஒரு நாள் முடிவதற்குள்ளே, ஜடேஜாவை சென்னை சூப்பர் கிங்ஸ் சமூக ஊடகப்பிரிவு இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பின் தொடர்வை நிறுத்திக் கொண்டது. இந்த விஷயம் இணையத்தில் வைரலாக முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் ஆகாஷ் சோப்ரா , இனி சென்னை அணிக்காக ஜடேஜா விளையாடுவது சந்தேகம் தான் என கொளுத்திப் போட , ரசிகர்களும் கேப்டன்ஸி செய்யாத ஜடேஜா 16 கோடி ரூபாய் பெற தகுந்தவரா, பேசாமல் அவரை ஏலத்தில் விட்டு குறைந்த தொகைக்கே வாங்குவது தான் சென்னை அணியின் யுக்தியாக இருக்கலாம் என கருத்துப் பதிவிட்டனர்.

விளக்கம் அளித்த சிஎஸ்கே தலைமை அலுவலர்: இந்த நிலையில் சென்னை அணியில் ஜடேஜாவின் எதிர்காலம் குறித்து ஊடக வெளியில் பேசியுள்ள தலைமை அலுவலர் காசி விஸ்வநாதன், இணையத்தில் என்ன நடக்கிறது என்பதை எல்லாம் நான் பார்ப்பதில்லை, ஜடேஜா நிச்சயம் சென்னை அணியில் தொடர்வார் எனக் குறிப்பிட்டார்.

இதையும் படிங்க: மிட்செல் மார்ஷ் மிரட்டல்... டெல்லி வெற்றி

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.