CSK vs GT: சிங்கம் ஒன்று புறப்பட்டதே.. இறுதிப் போட்டியில் கெத்தாக நுழைந்த சிஎஸ்கே

author img

By

Published : May 23, 2023, 7:16 PM IST

Updated : May 24, 2023, 6:45 AM IST

CSK vs GT: சிங்கம் ஒன்று புறப்பட்டதே.. இறுதிப் போட்டிக்கு கெத்தாக நுழைந்த சிஎஸ்கே

ஐபிஎல் தொடரில் குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிரான முதலாவது தகுதிச்சுற்று ஆட்டத்தில், 15 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற சென்னை அணி, நேரடியாக இறுதிச் சுற்றுக்குத் தகுதி பெற்றுள்ளது.

சென்னை: 16வது ஐபிஎல் கிரிக்கெட் போட்டியின் லீக் ஆட்டங்கள் முடிவடைந்து, முதலாவது தகுதிச்சுற்று நேற்று (மே 23) நடைபெற்றது. சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்ஏ சிதம்பரம் ஸ்டேடியத்தில் வைத்து நடைபெற்ற இந்தப் போட்டியில் முதலில் டாஸ் வென்ற குஜராத் டைட்டன்ஸ் அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா பந்து வீச்சை தேர்வு செய்தார்.

இதனால் பேட்டிங்கில் களம் இறங்கிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் துவக்க ஆட்டக்காரர் ருத்துராஜ் கெய்க்வாட் அதிரடியாக விளையாடி 1 சிக்ஸ் மற்றும் 7 பவுண்டரி உடன் 60 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டம் இழந்தார். அதேநேரம், கான்வே 40 ரன்களிலும், மற்ற வீரர்கள் சொற்ப ரன்களிலும் ஆட்டம் இழந்தனர்.

இருப்பினும், மிகவும் விறுவிறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 172 ரன்கள் எடுத்தது. இந்த இன்னிங்ஸில் குஜராத் டைட்டன்ஸ் அணியின் மோகித் ஷர்மா மற்றும் ஷமி ஆகிய வீரர்கள் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.

இதனையடுத்து 173 என்ற வெற்றி இலக்குடன் அடுத்த இன்னிங்ஸை தொடங்கிய குஜராத் டைட்டன்ஸ் அணியின் சுப்மன் கில் மட்டும் 42 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டம் இழந்தார். அணியின் மற்ற வீரர்கள் அடுத்தடுத்த விக்கெட்டுகளை சொற்ப ரன்களில் பறி கொடுத்தனர்.

இதனால், 20 ஓவர்கள் முடிவில் குஜராத் டைட்டன்ஸ் அணி, சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் அபார பந்து வீச்சில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 157 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, குஜராத் டைட்டன்ஸ் அணியை 15 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி த்ரில் வெற்றி பெற்றது.

அதேபோல், இந்த இன்னிங்ஸில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தீபக் சஹார், மகேஷ் தீக்‌ஷனா, ரவீந்திர ஜடேஜா மற்றும் மதீஷா பதிரானா ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தி அணியின் வெற்றிக்கு மிகவும் பக்க பலமாக இருந்தனர். இந்த வெற்றியின் மூலம் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நேரடியாக இறுதிச் சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளது.

இந்த முதலாவது தகுதிச் சுற்றில் வெற்றி பெற்று நேரடியாக இறுதிப் போட்டிக்குள் நுழைந்துள்ள சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 10வது முறையாக ஐபிஎல் போட்டிகளின் இறுதிப் போட்டியில் நுழைகிறது. அதிலும், 10 முறையும் மகேந்திர சிங் தோனியே அணியின் கேப்டனாக இருந்து உள்ளார்.

மேலும், இன்று (மே 24) நடைபெற உள்ள எலிமினேட்டர் போட்டி மற்றும் நாளை மறுநாள் நடைபெற உள்ள 2வது தகுதிச்சுற்று போட்டி ஆகியவற்றின் அடிப்படையில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி யாருடன் இறுதி ஆட்டத்தை எதிர் கொள்கிறது என்பது தெரிய வரும். அதேநேரம், 5வது முறையாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஐபிஎல் கோப்பையை வெல்லுமா என்ற எதிர்பார்ப்பும் ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.

இதையும் படிங்க: IPL கிரிக்கெட்டில் அதிக சதங்கள் - கிறிஸ் கெயிலின் ‘சத சாதனையை’ முறியடித்த ‘கிங்’ கோலி!

Last Updated :May 24, 2023, 6:45 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.