சென்னையின் பிளே ஆஃப் கனவை நொறுக்கிய மும்பை

author img

By

Published : May 13, 2022, 7:29 AM IST

ipl-2022-match-59-chennai-super-kings-vs-mumbai-indians-highlights

ஐபிஎல் தொடரின் 59ஆவது லீக் ஆட்டத்தில் சென்னை அணி தோல்வி அடைந்ததன் மூலம், பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெறாமல் வெளியேறியது.

மும்பை: ஐபிஎல் தொடரின் 59ஆவது லீக் ஆட்டம் நேற்றிரவு (மே 12) வான்கடே மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ், மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதின. முதலில் டாஸ் வென்ற மும்பை அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.

அதன்படி, சென்னை வீரர்கள் களமிறங்கினர். ஆனால், டேவான் கான்வே சந்தித்த முதல் பந்திலேயே ஆட்டமிழந்தார். ருதுராஜ் கெய்க்வாட் 6 பந்துகளில் விக்கெட்டை பறிகொடுத்தார். இப்படி அடுத்தடுத்து சென்னையின் விக்கெட்டுகள் சரிந்தன. அந்த வகையில், 16 ஓவர்கள் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்த சென்னை அணி 97 ரன்களை மட்டுமே எடுத்தது.

இதனிடையே கேப்டன் தோனி மட்டுமே 33 பந்துகளுக்கு 36 ரன்களை எடுத்தார். மறுப்புறம் மும்பை அணியின் டேனியல் சாம்ஸ் 3 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். ஐபிஎல் வரலாற்றில் சென்னை அணி இவ்வளவு குறைந்த ரன்களை அடித்தது இதுவே முதல்முறையாகும்.

ஆகவே, 98 ரன்கள் வெற்றி இலக்குடன் மும்பை அணி களமிறங்கியது. சென்னை போலவே மும்பை பேட்டர்களும் தடுமாற்றமான ஆட்டத்தையே தொடங்கினர். அதன்படி தொடக்க வீரர்கள் இசான் கிஷன் 5 பந்துகளுக்கு 6 ரன்களுடனும், கேப்டன் ரோஹித் சர்மா 14 பந்துகளுக்கு 18 ரன்களுடனும் ஆட்டமிழந்தனர். அடுத்து, டேனியல் சாம்ஸ் ஒரே ரன்னுடன் விக்கெட்டை பறிகொடுத்தார்.

நான்காவதாக களமிறங்கிய திலக் வர்மா 34 ரன்கள் குவித்து அணியின் வெற்றிக்கு வித்திட்டார். இறுதியில் 14.5 ஓவர்களிலேயே 5 விக்கெட் இழப்பிற்கு 103 ரன்களை எடுத்து மும்பை அணி வெற்றி பெற்றது. இதன்மூலம் சென்னை அணி பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெறாமல் வெளியேறியது.

இதையும் படிங்க: ஜடேஜா Vs சிஎஸ்கே நிர்வாகம் - அணியில் இடமில்லாததால் விலகினாரா

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.