LEEDS TEST: இன்னிங்ஸ் தோல்வியடைந்தது இந்தியா; தொடர் சமநிலை!

author img

By

Published : Aug 28, 2021, 7:01 PM IST

ind vs eng, england won, leeds test, root

லீட்ஸ் மூன்றாவது டெஸ்ட் போட்டியில், இங்கிலாந்து அணி இன்னிங்ஸ் மற்றும் 76 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணியை வீழ்த்தி தொடரை 1-1 என்ற கணக்கில் சமநிலைப்படுத்தியுள்ளது.

லீட்ஸ்: இந்தியா-இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டி, இங்கிலாந்து லீட்ஸ் நகரின் ஹெடிங்லி மைதானத்தில் கடந்த ஆகஸ்ட் 25ஆம் தேதி தொடங்கியது.

இப்போட்டியில், டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி முதலில் பேட்டிங்கைத் தேர்வு செய்தார். இதன்படி, முதல் இன்னிங்ஸில் இந்தியா 78 ரன்களும், இங்கிலாந்து 432 ரன்களும் எடுத்தன.

இதனால், இந்தியாவைவிட இங்கிலாந்து 354 ரன்கள் முன்னிலைப் பெற்றது. இதையடுத்து, இரண்டாவது இன்னிங்ஸைத் தொடங்கிய இந்திய அணி நேற்றைய (ஆக. 27) ஆட்டநேர முடிவில் இரண்டு விக்கெட்டுகள் இழப்பிற்கு 215 ரன்கள் எடுத்து, 139 ரன்கள் பின்தங்கியிருந்தது.

நான்காம் நாள் ஆட்டம்

இந்நிலையில், புஜாரா 91 ரன்களுடனும், கேப்டன் விராட் கோலி 45 ரன்களுடனும் இன்றைய (ஆக. 28) ஆட்டத்தைத் தொடங்கினர். நேற்று இருவரும் சிறப்பாக விளையாடிய நிலையில், இன்று அதே ஆட்டத்தை தொடர்வார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது.

pujara, kholi, leeds test, 3rd test, கோலி, புஜாரா
புஜாரா - கோலி

ஆனால், ஆட்டம் தொடங்கிய நான்காவது ஓவரிலேயே (ராபின்சன் பந்துவீச்சில்) புஜாரா 91 ரன்களில் எல்.பி.டபிள்யூ முறையில் அவுட்டாகி வெளியேறி, சதத்தை தவறவிட்டார்.

கோலி அவுட்

இதையடுத்து, ரஹானே உடன் ஜோடி சேர்ந்த கோலி, நிதானமாக விளையாடிக் கொண்டிருந்தார். ராபின்சன் வீசிய 90ஆவது ஓவரின் முதல் பந்தில் பவுண்டரி விளாசி, இந்தத் தொடரில் தனது முதல் அரை சதத்தை பதிவு செய்தார். அதே போல், 5ஆவது பந்திலும் பவுண்டரி அடித்தார். இதனால், ராபின்சன் தனது பந்தை குட் - லெந்தில், நான்காம் ஸ்டம்ப் லைனில் வீசினார்.

உடலுக்கு நெருக்கமாக வந்த அந்த பந்தை கோலி விளையாட முயற்சிக்க, பந்து சிலிப்பில் இருந்த ரூட்டிடம் தஞ்சம் புகுந்தது. இதனால், கோலி 8 பவுண்டரிகளுடன் 55 ரன்களில் வெளியேறி ஏமாற்றமளித்தார்.

வீழ்ந்தது இந்தியா

இதன்பின்னர், தலைவன் எவ்வழியோ நாங்களும் அவ்வழியே என்ற பாணியில், துணை கேப்டன் ரஹானே 10, பந்த் 1, ஷமி 6, இஷாந்த் 2 ஆகியோர் அடுத்தடுத்து விக்கெட்டை இழந்து பெவிலியன் திரும்பினர்.

கடைசி நேரத்தில் போராடிக் கொண்டிருந்த ஜடேஜா, 5 பவுண்டரிகள், 1 சிக்ஸர் என 30 ரன்களுக்கு ஓவர்டன் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். அவரைத் தொடர்ந்து சிராஜ் டக் அவுட்டாக, இந்திய அணி 278 ரன்களுக்கு ஆல்-அவுட்டானது.

இதன்மூலம், இங்கிலாந்து அணி இன்னிங்ஸ் மற்றும் 76 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இங்கிலாந்து பந்துவீச்சு தரப்பில் ராபின்சன் 5 விக்கெட்டுகளையும், ஓவர்டன் 3 விக்கெட்டுகளையும், மொயின் அலி, ஆண்டர்சன் ஆகியோர் தலா 1 விக்கெட்டையும் கைப்பற்றினர்.

இந்த டெஸ்ட் போட்டியை வென்றதன் மூலம், ரூட் தலைமையில் இங்கிலாந்து அணி 27 போட்டிகளில் வெற்றியடைந்துள்ளது. இதன்மூலம், அதிக டெஸ்ட் போட்டிகளை வென்ற இங்கிலாந்து கேப்டன் என்ற பெருமையை ரூட் பெற்றுள்ளார்.

அடுத்த போட்டி

இத்தொடரின் முதல் போட்டி மழையால் டிராவானதைத் தொடர்ந்து, இரண்டாவது போட்டியான லார்ட்ஸ் டெஸ்டில் இந்தியா 151 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதையடுத்து, மூன்றாவது போட்டியை இங்கிலாந்து வென்றதால் இத்தொடர் 1-1 என்ற கணக்கில் சமநிலைப் பெற்றுள்ளது.

இந்தத் தொடரின் நான்காவது டெஸ்ட் போட்டி லண்டன் நகரத்தின் ஓவல் மைதானத்தில் வரும் செப்டம்பர் 2ஆம் தேதி தொடங்குகிறது.

இதையும் படிங்க: என்னை ஊனமுற்றவராக நான் உணர்ந்ததே இல்லை - பவினாபென் படேல்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.