நேற்று விஜய் இன்று தனுஷ் நாளை?

author img

By

Published : Aug 5, 2021, 1:38 PM IST

விஜய்

உச்ச நீதிமன்ற தீர்ப்பிற்கு பிறகும், இதுவரை வரி செலுத்தாத நிலையில் வழக்கை வாபஸ் பெற அனுமதிக்க முடியாது. மக்கள் வரிப்பணத்தில் போடும் சாலையை பயன்படுத்தும்போது வரியை செலுத்த வேண்டியதுதானே. உச்ச நீதிமன்ற உத்தரவு குறித்து வழக்கறிஞர்தானே மனுதாரருக்கு அறிவுறுத்தி இருக்க வேண்டும்

வெளிநாடுகளில் இருந்து வாங்கும் சொகுசு கார்களை இறக்குமதி செய்ய, கார் இறக்குமதி செய்பவர்களுக்கு சில வழிமுறைகள் உள்ளன. கார் விலை மற்றும் சுங்கவரி ஆகியவற்றை சேர்த்து வரும் தொகையில் 20 விழுக்காடு நுழைவு வரி செலுத்த வேண்டும். நுழைவு வரி தொகையை, மாநில வணிக வரித்துறையிடம் செலுத்த வேண்டும். இதில் முதல்முறையாக வரிவிலக்கு பெற்றவர் சச்சின் மட்டுமே.

இந்த சூழலில் 2012ஆம் ஆண்டு வெளிநாட்டு இறக்குமதி காருக்கு நுழைவு வரி வசூலிக்க தடை கோரி நடிகர் விஜய் உயர் நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கைத் தனி நீதிபதி எஸ்.எம். சுப்ரமணியம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

மேலும், நடிகர்கள் முறையாக உரிய நேரத்தில் வரி செலுத்த வேண்டும், அவர்கள் உண்மையான ஹீரோக்களாக இருக்க வேண்டுமே தவிர, ரீல் ஹீரோக்களாக இருக்கக் கூடாது எனவும் தெரிவித்திருந்தார். அதுமட்டுமின்றி, நடிகர் விஜய்க்கு 1 லட்சம் ரூபாய் அபராதம் விதித்த நீதிபதி, அதை முதலமைச்சர் கரோனா நிவாரண நிதிக்கு இரண்டு வாரத்தில் வழங்க வேண்டும் எனவும் உத்தரவிட்டிருந்தார்.

இந்த உத்தரவை எதிர்த்து நடிகர் விஜய் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யப்பட்டது. விசாரணையின்போது, நுழைவு வரி செலுத்த வேண்டும் என்ற உத்தரவை எதிர்க்கவில்லை, அதை மதிக்கிறோம். விஜய்யை பற்றி தீர்ப்பில் குறிப்பிட்டுள்ள விமர்சனங்களையும் ரத்து செய்ய வேண்டும் என விஜய் தரப்பில் வாதிடப்பட்டது.

தனி நீதிபதி உத்தரவுக்கு தடா:

இதனையடுத்து நடிகர் விஜய்க்கு ரூ.1 லட்சம் அபராதம் விதித்த தனி நீதிபதியின் உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்தனர். வணிக வரித்துறை வரித் தொகையை ஒரு வாரத்தில் கணக்கிட்டு சொல்ல வேண்டும். அதில் மீதமுள்ள 80 விழுக்காடு பணத்தை அடுத்த ஒரு வாரத்தில் செலுத்த வேண்டும் என உத்தரவிட்டு விசாரணை ஒத்திவைக்கப்பட்டது.

நேற்று விஜய் இன்று தனுஷ்

விஜய்க்கு அடுத்தபடியாக, நடிகர் தனுஷ் தனது இறக்குமதி செய்த காருக்கு நுழைவு வரியாக 60 லட்சம் ரூபாய் கட்டவேண்டியது இருந்தது. அதில் 30 லட்சத்து 33 ஆயிரத்தை ஏற்கனவே தனுஷ் செலுத்திவிட்டார். இதற்கிடையே வரிவிலக்கு வேண்டுமென்று 2015ல் தனுஷ் தாக்கல் செய்த வழக்கு இன்று விஜய் வழக்கை விசாரித்த நீதிபதி எஸ்.எம். சுப்ரமணியம் முன்பு விசாரணைக்கு வந்தது.

அப்போது தனுஷின் வழக்கறிஞர், மீதமுள்ள வரியை திங்கட்கிழமைக்குள் செலுத்த தயாராக இருப்பதாகவும், அதனால் வழக்கை முடித்து வைக்கும்படி கோரிக்கை வைத்தார். வழக்கை வாபஸ் பெறுவதற்காக மெமோ தாக்கல் செய்திருப்பதாக கூறினார்.

அப்போது குறுக்கிட்ட நீதிபதி, “ ரோல்ஸ் ராய்ஸ் கோஸ்ட் வாங்கும் அளவில் உள்ள தனுஷ், நுழைவு வரி செலுத்துவதை எதிர்த்த வழக்கின் மனுவில், என்ன பணி அல்லது தொழிலில் இருக்கிறார் என குறிப்பிடாதது ஏன்? என்ன வேலை என்பதை ஏன் மறைத்தார்? 2019ஆம் ஆண்டு உச்ச நீதிமன்ற உத்தரவுக்கு பிறகு, வரியை செலுத்திவிட்டு வழக்கை வாபஸ் பெற்றிருக்கலாமே. அப்படி என்றால் உங்கள் நோக்கம் என்ன.

வாபஸா நோ நோ

உச்ச நீதிமன்ற தீர்ப்பிற்கு பிறகும், இதுவரை வரி செலுத்தாத நிலையில் வழக்கை வாபஸ் பெற அனுமதிக்க முடியாது. மக்கள் வரிப்பணத்தில் போடும் சாலையை பயன்படுத்தும்போது வரியை செலுத்த வேண்டியது தானே எனவும், உச்ச நீதிமன்ற உத்தரவு குறித்து வழக்கறிஞர்தானே மனுதாரருக்கு அறிவுறுத்தி இருக்க வேண்டும்

ஒரு நாளைக்கு 50 ரூபாய்க்கு பெட்ரோல் போடும் பால்காரர் அல்லது சோப்பு வாங்கும் பொதுமக்கள் போன்ற ஏழை நடுத்தர மக்கள் கூட வரி செலுத்துவதை நீதிபதி சுட்டிக்காட்டினார். பெட்ரோலில் ஜி.எஸ்.டி. கட்ட முடியவில்லை என அவர்கள் நீதிமன்றத்தை நாடுகிறார்களா? உங்கள் தொழிலில் நீங்கள் எத்தனை கோடி வேண்டுமானாலும் சம்பாதியுங்கள், எவ்வளவு தொகைக்கு வேண்டுமானாலும் கார்

எவ்வளவு தொகைக்கு வேண்டுமானாலும் கார் வாங்குங்கள். ஆனால் அரசுக்கு செலுத்த வேண்டிய தொகையை முழுமையாக செலுத்துங்கள்” என்று சரமாரியாக கேள்வி எழுப்பினார். இதனையடுத்து நேற்று விஜய் இன்று தனுஷ் நாளை எந்த நடிகரோ என்று ரசிகர்கள் சமூக வலைதளங்களில் பதிவிட்டுவருகின்றனர்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.