தமிழ் திரை உலகின் முன்னணி நட்சத்திரமாக விளங்குபவர் நடிகர் அஜித். இவர் நடிப்பு மட்டுமின்றி பைக் ரேஸ்,கார் ரேஸ் சாகசத்தில் ஈடுபடுவது, ஃபோட்டோகிராபி, ஆளில்லா சிறிய ரக விமானம் தயாரித்தல், கல்லூரி மாணவர்களுக்கு ட்ரோன் பயிற்சி அளிப்பது போன்ற செயல்களில் ஆர்வமாக செயல்பட்டு வருகிறார் என்பது அனைவரும் அறிந்ததே.
அந்த வகையில் இவர் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக சென்னை ரைஃபிள் கிளப்பில் துப்பாக்கி சுடும் பயிற்சி பெற்று வருகிறார். எழும்பூர் பழைய காவல் ஆணையர் அலுவலகத்தில் உள்ள சென்னை ரைஃபிள் கிளப் உறுப்பினரான இவர், அவ்வபோது துப்பாக்கி சுடும் பயிற்சிக்காக அங்குவந்து பயிற்சியை முடித்துவிட்டு செல்வார்.
கடந்த வாரம் நடிகர் அஜித் வாடகை காரில் பழைய காவல் ஆணையரக அலுவலகத்திலுள்ள ரைபிள் கிளப் செல்வதற்கு பதிலாக வழிமாறி புதிய காவல் ஆணையர் அலுவலகத்திற்கு வந்தார். இவரை கண்ட காவலர்கள், புகாரளிக்க வந்த பொதுமக்கள் பலர் ஒன்று கூடி புகைப்படம் எடுத்துக்கொண்டனர். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படம் சமூக வலைதளத்தில் வைரலானது.
இந்த நிலையில் நடிகர் அஜித் மீண்டும் துப்பாக்கி சுடும் பயிற்சி மேற்கொள்வதற்காக இன்று (பிப்.23) காலை பழைய காவல் ஆணையரக அலுவலகத்திற்கு வாடகை காரில் வந்தார். அப்போது அங்கு உதவி ஆய்வாளர் தேர்வுக்கான நேர்முக தேர்வில் கலந்து கொள்ள வந்த நபர்கள் அஜித்தை பார்ப்பதற்காக ஒன்று கூடினர். சுமார் 3 மணி நேரமாக துப்பாக்கி சுடும் பயிற்சியை அஜித் மேற்கொண்டார். அதன் பின் வெளியே வந்த அவர் அங்கிருந்தவர்களுக்கு கையசைத்து காரில் ஏறிச் சென்றார். அஜித்துடன் செல்ஃபி எடுக்கமுடியாததால் அங்கு நீண்டநேரம் காத்திருந்தவர்கள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.
இதையும் படிங்க: ஷார்ட் ஹேர் ஸ்டைல்...பிளாக் டி-சர்ட் என மாஸாக வந்த அஜித்!