'தேள்' எனக்கு வித்தியாசமான அனுபவம் - நடிகர் பிரபுதேவா

author img

By

Published : Nov 18, 2021, 8:03 AM IST

Theal

'தேள்' திரைப்படம் எனக்கு வித்தியாசமான அனுபவமாக இருந்தது. இப்படத்தின் முழு டப்பிங்கையும் அரை நாளில் முடித்துவிட்டேன் என நடிகர் பிரபுதேவா தெரிவித்துள்ளார்.

ஹரிகுமார் இயக்கத்தில் பிரபு தேவா நடிப்பில் உருவாகியுள்ள படம் தேள். இப்படத்தில் பிரபு தேவாவுடன் நடிகைகள் சம்யுக்தா, ஈஸ்வரி ராவ் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் சார்பில் கே.இ. ஞானவேல் ராஜா தயாரித்துள்ள இப்படத்திற்கு சத்யா இசையமைத்துள்ளார். இப்படத்தின் செய்தியாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது.

இதில் நடிகர் பிரபுதேவா, நடிகை சம்யுக்தா, இசையமைப்பாளர் சத்யா, இயக்குநர் ஹரிகுமார் உள்ளிட்ட படக்குழுவினர் கலந்துகொண்டனர். இந்த நிகழ்ச்சியில் பிரபுதேவா பேசுகையில், "இயக்குநர் ஹரிகுமார் மிகச்சிறப்பான பணியினைச் செய்துள்ளார். இயல்பைவிடவும் பலமடங்கு அற்புதமான உழைப்பைத் தந்துள்ளார்.

ஹரியும் நானும் பல ஆண்டுகளாக நெருங்கிய நண்பர்கள். இருவரும் உதவி நடன இயக்குனர்களாகப் பணியாற்றி இருக்கிறோம். இப்போது அவர் மீண்டும் புதிய தளத்தில் தன் திறமையை நிரூபிக்கவுள்ளார்.

இப்படத்தின் டப்பிங் பணி மிக சுவாரஸ்யமானதாக அமைந்தது. முழு டப்பிங்கையும் அரை நாளில் முடித்துவிட்டேன். உண்மையாகவே இந்தத் திரைப்படம் எனக்கு வித்தியாசமான அனுபவமாக இருந்தது. இந்தப் படத்தில் எனக்கு நடன காட்சியே இல்லை. மேலும் நான் இடது கை பழக்கம் கொண்டவனாக முதல் முறையாக நடித்திருக்கிறேன்.

Theal
தேள் படக்குழுவினர்

நான் என் வழக்கமான நடிப்பை நடிக்கிறேனா என என்னை சோதனை செய்துகொண்டே இருப்பார் இயக்குநர். நான் அம்மாதிரி நடித்தால் உடனே அதை மாற்றுவார். ஈஸ்வரி ராவ் தமிழில் மிகச்சிறந்த நடிகைகளுள் ஒருவராகத் திகழ்கிறார்.

சம்யுக்தா மிக பப்ளியான அழகான நாயகியாக மிளிர்கிறார். அவரது நடிப்பு இப்படத்தில் மிக முக்கிய அம்சமாக இருக்கும். இப்படம் மிக அழுத்தமான படைப்பாக, அனைவருக்கும் பிடிக்கும் படைப்பாக இருக்கும்" என்றார்.

தொடர்ந்து சம்யுக்தா பேசுகையில், "இந்தப் படத்தின் பாடல் ஒன்று படமாக்கிக் கொண்டிருந்தபோது மைசூருவில் எனக்கு விபத்து ஏற்பட்டது. பிரபுதேவா அவரது பிஸியான நேரத்திலும் என்னை ஓய்வெடுக்கச் சொல்லி, ஒரு மாதம் கழித்து படப்பிடிப்பில் கலந்துகொண்டார்.

இப்போது வரையிலும் நான் எட்டு படங்களில் நடித்திருக்கிறேன். ஆனால் ஒரு படத்திலும் எனக்கு டான்ஸ் இல்லை. பிரபு தேவாவுடன் நடனம் ஆடாமல் வேறெந்த படத்திலும் நடனமாடக் கூடாது என உறுதி எடுத்துள்ளேன். விரைவில் அவருடன் நடனமாடும் வாய்ப்பு கிடைக்கும் என்று நம்புகிறேன்.

இந்தப் படத்தில் நடித்தது மிக உற்சாகமான அனுபவமாக இருந்தது. என்னை இப்படத்திற்குத் தேர்ந்தெடுத்ததற்கு இயக்குநருக்கும், தயாரிப்பாளருக்கும் இந்நேரத்தில் நன்றி சொல்லிக்கொள்கிறேன்" எனத் தெரிவித்தார்.

இசையமைப்பாளர் சத்யா பேசுகையில், "பிரபுதேவா படத்திற்கு இசையமைப்பது எனக்கு கிடைத்த ஆசிர்வாதம். இப்படத்தின் பின்னணி இசைக்காக தான் என்னை இப்படத்தில் தேர்ந்தெடுத்தார் இயக்குநர் ஹரிகுமார்.

Theal
தேள் படக்குழுவினர்

பிரபுதேவா தனது அம்மாவைக் கட்டிப்பிடிக்கும் ஒரு காட்சி வரும், அது என்னை மிகவும் பாதித்த உணர்வுப்பூர்வமான காட்சி. இப்படத்தில் பிரபுதேவா நடிப்பு மிகப்பெரும் பாராட்டை பெறும். அனைத்து நடிகர்களுமே அற்புதமான நடிப்பைத் தந்துள்ளார்கள். தங்கள் வாழ்வுடன் ரசிகர்கள் தொடர்புப்படுத்திக்கொள்ளும் படைப்பாக, மிக அழகான படமாக தேள் இருக்கும்" என்றார்.

இயக்குநர் ஹரிகுமார் பேசுகையில், "தேள் ஒரு நேரத்தில் 40 குட்டிகளைப் போடும், அவையனைத்தையும் தன் தோள் மீது வைத்து பாதுகாக்கும். ஆல்கஹால் அதன் மீது ஒரு துளி பட்டாலே இறந்துவிடும்.

தேள் கடித்தவர்களுக்கு இதய பாதிப்பு வராது என்பது அறிவியல்பூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளது. இதுபோல் பல ஒற்றுமைகள் இப்படத்தின் கதையோடு பொருந்திப் போகும்.

இப்படத்தில் வரும் அம்மா மகன் உறவு அனைவரும் எளிதில் உணர்வுப்பூர்வமாகப் புரிந்துகொள்வதாக இருக்கும். இப்படத்தில் பங்குபெற்ற நடிகர்கள் இதில் நடிக்க முதல் காரணம் பிரபுதேவா உடன் இணைந்து நடிக்க வேண்டுமென்பது தான்.

ஈஸ்வரி ராவ் மிக அற்புதமான நடிப்பைத் தந்துள்ளார். அவர் இப்படத்திற்கு மிகப்பெரிய பலமாக இருந்தார். சம்யுக்தா மிக அழகான நடிப்பைத் தந்துள்ளார்" என்றார்.

தயாரிப்பாளர் தனஞ்செயன் கூறுகையில், "தேள் படத்தை நான் ஏற்கனவே பார்த்துவிட்டேன். இந்தப் படம் இயக்குநர் ஹரிகுமார் வாழ்வில் மிக முக்கியமான படமாக இருக்கும். பிரபுதேவாவுக்கு இது மிகச் சிறந்த படமாக இருக்கும்.

Theal
தேள் படக்குழுவினர்

சூர்யாவுக்கு ஒரு 'நந்தா' போல் பிரபுதேவாவுக்கு 'தேள்' படம் அமையும். அவர் சென்டிமென்ட் காட்சிகளில் மிக அற்புதமான நடிப்பைத் தந்துள்ளார். இப்படம் வெற்றிக்கு இப்போதே வாழ்த்துகளைக் கூறுகிறேன். சம்யுக்தா வழக்கமாக அவரது நடனத்திற்குப் பெயர்பெற்றவர். ஆனால் இப்படத்தில் அவரை வேறொரு கோணத்தில் காண மகிழ்ச்சியாக இருந்தது. அவரது நடிப்பு அனைவராலும் பாராட்டப்படும்" என்றார்.

இறுதியாக தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா பேசுகையில், "ஸ்டுடியோ கிரீன் மூவிஸ் நிறுவனம் எப்போதுமே கமர்சியலாக வெற்றியடையும் வகையிலான தரமான படங்களைத் தந்துவருகிறது. சூப்பர் ஸ்டார் ரஜினிக்குப் பிறகு பள்ளிக் காலத்திலிருந்தே பிரபு தேவாவின் அதிதீவிர ரசிகன் நான்.

அவரது சகோதரர் நாகேந்திர பிரசாத்தும் நானும் பள்ளி தோழர்கள். இருவரும் அவர் படத்தை ஒன்றாகத்தான் பார்ப்போம். ஒருமுறை அவர் வீட்டுக்குச் சென்றபோது, பிரபு தேவா ரிகர்சல் செய்வதை வாய் பிளந்து பார்த்து ஆச்சர்யப்பட்டேன்.

Theal
நடிகர் பிரபுதேவா

பிரபு தேவா தன் வேலையில் கச்சிதமாக இருக்கக் கூடியவர். அவர் இடத்தில் இருந்து எனக்கு ஒரு சிறு பிரச்சினைகூட வரவில்லை. இயக்குநர் ஹரிகுமார் மிக நேர்த்தியான படைப்பைத் தந்துள்ளார்.

சிவகார்த்திகேயன் எப்படி 'டாக்டர்' படத்தில் வசனங்கள் இல்லாமல் அசத்தியுள்ளாரோ, அதேபோல் பிரபுதேவா சாரும் மற்ற நடிகர்களும் இப்படத்தில் அசத்தியுள்ளார்கள். இப்படம் பார்க்கும் அனைவரும் அவர்களின் அம்மாவை மிஸ் செய்வார்கள். இப்படம் மிகச்சிறந்த குடும்பத் திரைப்படமாக இருக்கும்" என்றார்.

இதையும் படிங்க: பா.விஜய் இயக்கத்தில் பிரபுதேவா!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.