’கரோனா சூழலில் குழந்தைகள் பிரச்சினைகளை பொருட்படுத்தாத உலக நாடுகள்’ - கைலாஷ் சத்யார்த்தி வேதனை!

author img

By

Published : Jun 4, 2021, 12:01 AM IST

கைலாஷ் சத்யார்த்தி

”புலம்பெயர் தொழிலாளர்களின் குழந்தைகள், வசதி இல்லாத குழந்தைகளுக்காக அரசாங்கம் மட்டுமல்ல, சமூக அமைப்புகளும், கார்ப்பரேட் நிறுவனங்கள் உதவ முன்வர வேண்டும். மதத் தலைவர்களும், மத நிறுவனங்களும் தங்கள் பக்தர்களிடமிருந்து பழைய அலைபேசிகளை வாங்கி ஏழைக் குழந்தைகளுக்கு கொடுக்க வேண்டும். அவற்றை குழந்தைகள் தங்கள் ஆன்லைன் வகுப்புகளுக்காக பயன்படுத்திக் கொள்ள முடியும்”

இந்திய மண்ணின் மைந்தரும் குழந்தைகள் உரிமை ஆர்வலருமான கைலாஷ் சத்யார்த்தி, கடந்த 2014ஆம் ஆண்டு பாகிஸ்தான் கல்வி ஆர்வலர் மலாலாவோடு அமைதிக்கான நோபல் பரிசைப் பகிர்ந்து வென்றார். இந்தியாவில் மட்டுமல்லாது, உலகம் முழுவதுமுள்ள குழந்தைகளுக்காக ஆரோக்கியமான குழந்தைப்பருவத்தை உருவாக்க இவர் தொடர்ந்து பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார்.

டெல்லியைச் சேர்ந்த குழந்தைகள் உரிமை ஆர்வலரான கைலாஷ் சத்யார்த்தி, இதுவரை 90 ஆயிரம் குழந்தைத் தொழிலாளர்களை உலகெங்கிலும் மீட்டெடுத்துள்ளார். இந்தியாவை பிறப்பிடமாகக் கொண்டதோடு மட்டுமின்றி, இந்தியாவிலேயே வாழ்ந்து வரும் முதல் நோபல் பரிசு வென்ற நபர் இவர்தான்.

2015 ஆம் ஆண்டில் உலகின் மிகச்சிறந்த தலைவர்களின் பட்டியலில் இடம் பிடித்த கைலாஷ் சத்யார்த்தி, 2025ஆம் ஆண்டுக்குள் குழந்தைத் தொழிலாளர்களை ஒழிப்பதை இலக்காகக் கொண்டு, அதற்கான பிரச்சாரத்தையும் தொய்வின்றி மேற்கொண்டு வருகிறார். சமீபத்தில் உலக சுகாதார அமைப்பால் ஏற்பாடு செய்யப்பட்ட உலக சுகாதார சபையின் முக்கியப் பேச்சாளராக பங்கேற்ற இவர், உலகெங்கிலும் உள்ள குழந்தைகளுக்கென பணிக்குழு ஒன்றைக் கோரியுள்ளார்.

கரோனா காலத்தில் பள்ளிக்குச் செல்ல முடியாமல் பலவித பாதிப்புகளை குழந்தைகள் சந்தித்து வரும் இச்சூழலில் நமது ஈடிவி பாரத் ஊடகத்துக்கு கைலாஷ் சத்யார்த்தி பிரத்யேகப் பேட்டி ஒன்றை அளித்துள்ளார். அவருடனான நேர்காணல் பின்வருமாறு:

கேள்வி: சமீபத்தில் உலக சுகாதார அமைப்பு (WHO) ஏற்பாடு செய்திருந்த உலக சுகாதார சபையில் ஒரு முக்கிய பேச்சாளராக உரையாற்ற நீங்கள் அழைக்கப்பட்டீர்கள். குழந்தைகளுக்காக நீங்கள் என்னென்ன திட்டங்களையும் யோசனைகளையும் அங்கு முன்வைத்தீர்கள்?

பதில்: நான் ஒரு இந்தியனாகவும், சமூக சேவையாளனாகவும் இருப்பது எனக்கு மிகவும் பெருமை அளிக்கிறது. ஏனெனில் நான் உலக சுகாதார அமைப்பின் பொது சபையில் மாநிலத் தலைவர், பிரதமர் அல்லது ஜனாதிபதிக்கு மாற்றாக அழைக்கப்பட்டேன். இது எனக்குக் கிடைத்த பெருமை. இதிலிருந்து உலகம், மிகவும் பரிதாபகரமான, நசுக்கப்பட்ட, பின்னுக்குத் தள்ளப்பட்ட குழந்தைகளின் குரலைக் கேட்க விரும்புகிறது என்பதை நான் புரிந்து கொண்டேன். அந்தக் குரல்கள் என்னால் வெளிவந்திருக்கலாம். கோடிக்கணக்கான குழந்தைகள் கல்வியை இழந்து பள்ளிக்கு செல்ல இயலாமல் உள்ளனர். மில்லியன் கணக்கான குழந்தைகள் இன்னும் பள்ளிக்கு வெளியே உள்ளனர். இச்சூழலில் நான் அங்கு சில அடிப்படை பிரச்சினைகள் குறித்து கேள்விகளை எழுப்பி உள்ளேன்.

உலகம் முழுவதும் இது போன்ற குழந்தைகள், குழந்தைத் தொழிலாளர்கள், பாலியல் துன்புறுத்தல்கள், பாலியல் தொழிலில் ஈடுபடுத்தப்படுதல் உள்ளிட்ட சூழல்களுக்குத் தள்ளப்படுகின்றனர். இந்தக் காரணங்களால் குழந்தைளின் உடல்நிலை, கல்வி ஆகியவற்றை நாம் தனித்துப் பார்க்க முடியாது. எனவே உலக நாடுகள் ஒன்றிணைந்து இது குறித்து உற்று நோக்கி குழந்தைகளை பலதரப்பட்ட இன்னல்களில் இருந்தும் பாதுகாக்க வேண்டும்.

WHO, UNICEF அல்லது UNESCO என குழந்தைகளின் நலனுக்காக செயல்படும் அனைத்து ஐநா நிறுவனங்களும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என்று நான் முன்மொழிந்தேன். இதற்காக, ஐக்கிய நாடுகள் சபையில் ஒரு உயர்மட்டக் குழு உருவாக்கப்பட வேண்டும், இக்குழுவின் மூலம் கரோனா சூழல் குழந்தைகள் மீது ஏற்படுத்தும் தாக்கத்தைக் குறைக்க முயல வேண்டும். இந்தக் கரோனா சூழல் பன்முக விளைவுகளை ஏற்படுத்தியுள்ளது.

இத்தகைய கடுமையான பிரச்சினைகளை கையாளும் பணியை சுகாதார அமைப்புகளால் மட்டுமே செய்ய முடியாது, ஆனால் அனைத்து நாடுகளின் கல்வி அமைச்சகங்களும் இதற்காக செயல்பட வேண்டும். இதற்காக ஒவ்வொரு நாட்டிலும் ஒரு சிறப்பு பணிக்குழு உருவாக்கப்பட வேண்டும். இக்குழு குழந்தைகள் மீது கரோனா சூழல் ஏற்படுத்தும் விளைவுகள் குறித்து அரசுகளுக்கு எடுத்துரைக்க வேண்டும்.

கேள்வி: கரோனா பெருந்தொற்றால் உலகம் முழுவதும் குழந்தைகள் தான் அதிக அளவில் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆனால் அரசுகள் இவர்களின் நலனுக்காக அரசு எடுத்த தனிப்பட்ட நடவடிக்கைகள் எதுவும் தென்படவில்லையே? இது குறித்து நாம் செய்ய வேண்டியது என்ன?

பதில்: குழந்தைகளுக்கு நமது அரசியல், சமூக, பொருளாதார மற்றும் கலாச்சார செயல்பாடுகளில் முன்னுரிமை அளிக்காதது மிகப்பெரும் தவறு. இதுவே அதிக குழந்தைகள் கல்வியை இழப்பதற்கான காரணமாகவும் அமைகிறது. கல்வி, சுகாதாரம், பாதுகாப்பு குறித்த பட்ஜெட்களில், உலக நாடுகள் இவற்றை கணக்கில் கொள்வதில்லை. சட்டங்களில் கூட இவை குறித்து இல்லை. நாங்கள் எப்போதும் முன்னுரிமை குறித்து பேசுகிறோம். அதனால்தான் இக்குழந்தைகளுக்கான நியாயமான பங்கை ஒதுக்குமாறு கேட்கிறோம்.

உலகெங்கிலும் இருந்து 80 நோபல் பரிசு பெற்றவர்கள், மாநிலத் தலைவர்கள், முன்னாள் மாநிலத் தலைவர்கள், ஐக்கிய நாடுகள் சபையின் பல தலைவர்கள் எனப் பலரையும் ஒன்றிணைக்க நான் முன்முயற்சி எடுத்து, சென்ற ஆண்டு, மார்ச் மாதம் இந்த பிரச்சாரத்தைத் தொடங்கினேன். குழந்தைகளுக்கு அவர்களின் நியாயமான பங்கைப் பெற வேண்டும் என்று நாங்கள் சொல்லிக்கொண்டே இருந்தோம். எனவே, நாங்கள் இந்தப் பிரச்சாரத்தைத் தொடங்கினோம்.

கேள்வி: இந்தியாவில் கரோனா சூழல் எவ்வாறு குழந்தைகளை பாதித்துள்ளது? இது குழந்தைத் தொழிலாளர்கள் எண்ணிக்கையை மேலும் அதிகரிக்குமா?

பதில்: கரோனா சூழல் இந்தியக் குழந்தைகளை கடுமையாக பாதித்துள்ளது. லட்சக்கணக்கான குழந்தைகள் பள்ளிகளுக்குச் செல்ல முடியாமல் தவித்து வருகின்றனர். சத்துணவு, மதிய உணவுகளை தான் பல குழந்தைகள் சார்ந்து இருந்தனர். இந்தக் கரோனா சூழலில் குழந்தைகள் இவற்றைப் பெறமுடியாமல் தவிப்பது கவலைக்குரிய ஒன்று.

கேள்வி: குழந்தைகள் மீதான பாலியல் வன்முறையும் இந்தக் கரோனா காலக்கட்டத்தில் அதிகரித்திருப்பதாக சமீபத்திய அறிக்கைகள் தெரிவிக்கின்றனவே? இவற்றின் பின்னால் இருக்கும் காரணம் என்ன?

பதில்: இத்தகைய செய்திகள், நமது நாடு மட்டுமல்லாமல் பல வளர்ந்த உலக நாடுகளில் இருந்தும் வருவது அவமானத்திற்குரிய ஒன்று. இது மிகவும் கவலைக்குரிய விஷயம். தனி நபர் மட்டுமல்லாது, ஒட்டு மொத்த சமூகத்தின் மனநிலையையும் இது பாதிக்கும். குழந்தைகளின் வாழ்க்கை இதனால் சின்னாபின்னமாகிறது. இது போன்ற சூழல்களில் குழந்தைகளுடன் நட்பாகப் பழக வேண்டியது பெற்றோர்களின் கடமையாகும்.

கேள்வி: ஊரடங்கின் மத்தியில், ஏராளமான புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் நகரங்களிலிருந்து தங்கள் கிராமங்களுக்கு குடிபெயர்ந்துள்ளனர். இத்தகைய சூழ்நிலையில், அவர்களின் குழந்தைகளின் கல்வி தடைப்பட்டுள்ளது. ஆன்லைன் வகுப்புகள் நடைபெறும் பெருநகரங்கள் அல்லது நகரங்களில், வசதிகள் இல்லாததால் ஏழைக் குழந்தைகள் படிப்பிலிருந்து பின்தங்கியிருக்கிறார்கள். இது குறித்து செய்ய வேண்டியது என்ன?

பதில்: இதுபோன்ற வசதி இல்லாத குழந்தைகளுக்காக அரசாங்கம் மட்டுமல்ல, சமூக அமைப்புகளும், கார்ப்பரேட் நிறுவனங்கள் உதவ முன்வர வேண்டும். மதத் தலைவர்களும், மத நிறுவனங்களும் தங்கள் பக்தர்களிடமிருந்து பழைய அலைபேசிகளை வாங்கி ஏழைக் குழந்தைகளுக்கு கொடுக்க வேண்டும். அவற்றை குழந்தைகள் தங்கள் ஆன்லைன் வகுப்புகளுக்காக பயன்படுத்திக் கொள்ள முடியும். இந்தக் குழந்தைகளுக்கு இலவச இணைய வசதிகளை வழங்குவதும் அரசாங்கத்தின் பொறுப்பாகும்.

கேள்வி: குழந்தைகளின் மன ஆரோக்கியத்தில் கரோனா சூழல் பெரும் தாக்கம் ஏற்பட்டுள்ளது. இந்தப் பிரச்சினை குறித்து அரசாங்கம் கவனிக்கிறதா? இதற்கு நீங்கள் பரிந்துரைக்கும் தீர்வு என்ன?

பதில்: குழந்தைகள் விஷயத்தில் பல பரிமாணங்களில் பாதிப்புகள் ஏற்பட்டுள்ளது குறித்து கவனிக்க வலியுறுத்தி, நான் பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதியுள்ளேன். எனவே, இந்த விஷயங்களில் நிபுணர்களாக இருப்போரைக் கொண்டு தேசிய அளவில் பணிக்குழு ஒன்றை உருவாக்க வேண்டும். குழந்தை உளவியலாளர்கள், குழந்தை மனநல மருத்துவர்கள் இந்தப் பணிக்குழுவில் சேர்க்கப்பட வேண்டும். ஊரடங்கு முடிந்ததும், கல்வி, சுகாதாரத் துறைகள் ஒன்றிணைந்து ஆசிரியர்களுக்கு உளவியல் பயிற்சி அளிக்க வேண்டும். அத்தோடு, ஊரடங்கில் தளர்வுகள் அளிக்கப்பட்ட பிறகு குழந்தைகளின் மன ஆரோக்கியத்தில் சிறப்பு கவனம் செலுத்தப்பட வேண்டும்.

கேள்வி: கரோனா தொற்று நாட்டில் சுகாதார சூழலின் அவல நிலையை அம்பலப்படுத்தியுள்ளது. ஏராளமான குழந்தைகள், வயதானவர்களுக்கு சுகாதார சேவைகளை நம்மால் வழங்க முடியவில்லை. காரணம் என்ன? இது குறித்து நாம் என்ன செய்ய வேண்டும்?

பதில்: சுகாதார அமைப்பை வலுப்படுத்தி, அதில் முதலீடுகளை அதிகரிக்க வேண்டும். பொறுப்போடு இதற்கு அணிதிரட்ட வேண்டும். இதனால்தான் ஆரோக்கியத்திற்கு அரசியலமைப்பு சட்டப்படி ’அடிப்படை உரிமை’ அந்தஸ்து வழங்கப்பட வேண்டும் என நான் அரசாங்கத்திடம் கோரியுள்ளேன். நம் நாட்டில் ஆரோக்கியத்தை அடிப்படை உரிமையாக மாற்றினால், முழு சுகாதார முறையையும் நம்மால் பலப்படுத்த முடியும்.

இது நேர்மறையான முன்முயற்சியாக மக்கள் மத்தியில் அமைந்து, விரக்தி, பயம் மற்றும் நிச்சயமற்ற தன்மையிலிருந்து விடுபட உதவும். ’ஆரோக்கியம் எனது அடிப்படை உரிமை’ என்று மக்கள் எப்படி நம்புவார்கள்? இந்த வாய்ப்பை சிலர் எவ்வாறு தவறாக பயன்படுத்திக் கொண்டுள்ளனர் என்பதைப் பாருங்கள்! மருத்துவமனைகளில் படுக்கைகள் அதிக விலைக்கு வழங்கப்பட்டன அல்லது வென்டிலேட்டர்கள் என்ற பெயரில் கொள்ளை நடந்து வருகிறது. லட்சக்கணக்கில் மக்களிடம் வசூலிக்கின்றனர். ஆரோக்கியம் அடிப்படை உரிமையாக இருந்தால், இந்த எல்லா விஷயங்களிலிருந்தும் நாம் விடுபட முடியும். நாட்டின் பொது சுகாதார உள்கட்டமைப்பு, நாட்டின் அனைத்து தரப்பினரையும் கருத்தில் கொண்டு பலப்படுத்தப்பட வேண்டும்.

கேள்வி: குழந்தைத் தொழிலாளர் குறித்து ஒவ்வொரு முறை விவாதங்கள் எழும்போதும், ”​ஏழைக் குழந்தைகள் வேலை செய்யாவிட்டால், பசிக்கொடுமையால் அவர்கள் உயிரிழக்க நேரிடும். எனவே முதலில் வறுமையை ஒழித்தால் குழந்தைத் தொழிலாளர் பிரச்னை தானாகவே முடிவடையும்” என வாதிடுகிறார்கள். இது குறித்து உங்கள் கருத்து என்ன?

பதில்: குழந்தைகள் மட்டுமே எங்கள் முன்னுரிமை இல்லை என்பதை நீங்கள் பார்க்க வேண்டும். இவர்களது பெற்றோருக்கு ஒரு ஆண்டில் நூறு நாள்கள் வரை வேலை கிடைப்பதில்லை. ஒவ்வொரு குழந்தைத் தொழிலாளியும் சில வயதுவந்தோரை வேலையில்லாமல் செய்யும் நிலையில் ஏற்படுகிறது. உலகில் பெரியவர்கள் இருக்கும்போது, ​​நீங்கள் அவர்களுக்கு வேலை வழங்க வேண்டும் என்று நான் சொல்கிறேன்.

குழந்தைகளை தொழிலில் ஈடுபடுத்துவதால், ஒருபுறம் அவர்கள் கல்வியை இழக்கிறார்கள், மறுபுறம், வயது வந்தோரின் வேலையும் பறிபோகிறது. கல்வியை இழந்த குழந்தைகளால் ஒருபோதும் தங்கள் வறுமையை முடிவுக்கு கொண்டுவர முடியாது. கல்வியறிவு, வறுமை, குழந்தைத் தொழிலாளர் என்ற முக்கோண சுழற்சி இங்கு உள்ளது. இந்தக் காரணிகள் தொடர்ந்து ஒன்றுக்கொன்று தங்களை பூர்த்தி செய்கின்றன. நாட்டில் கல்வி உரிமைச் சட்டத்தையும், குழந்தைத் தொழிலாளர்களுக்கு எதிரான சட்டத்தையும் நடைமுறைப்படுத்தினால், இந்தப் பிரச்சினைகளிலிருந்து நாம் விடுபடலாம்.

கேள்வி: உலகெங்கிலும் உள்ள குழந்தைகளின் குழந்தைப் பருவத்தை காப்பதற்காக நீங்கள் ஒரு பிரச்சாரத்தை நடத்தி வருகிறீர்கள். உங்கள் குழந்தைப்பருவத்தை எப்படி பாதுகாத்து வைத்திருக்கிறீர்கள்?

பதில்: நான் ஒருபோதும் குழந்தைப்பருவத்தை வயதுடன் தொடர்புபடுத்தவில்லை. குழந்தைப்பருவம் என்பது உண்மை, நேர்மை, வெளிப்படைத்தன்மை, மற்றவர்களை மன்னிப்பதற்கான தைரியம் மற்றும் புதிய விஷயங்களைக் கற்றுக்கொள்வது என்று நான் நம்புகிறேன். இவை அனைத்தும் தான் குழந்தைப்பருவம்.

ஒருவர் ஆணவம், பொறாமை ஆகிய குணங்கள் இல்லாமல் சமூகத்தில் நல்ல காரியங்களைச் செய்ய முடிந்தால் அதுவே உண்மையான குழந்தை பருவமாகும். நான் ஒவ்வொரு நாளும் குழந்தைகளுடன் விளையாடுகிறேன், சிரிக்கிறேன், கேலி செய்கிறேன். குழந்தைகளின் கண்களால் உலகைப் பாருங்கள் என்று சொல்கிறேன். அது மிக அழகான உணர்வு. குழந்தைகளுக்காக உங்கள் இதயங்களைப் பேண முயற்சித்தால், இந்த உலகில் தீர்க்க முடியாத பிரச்சினைகள் என எதுவுமே இல்லை.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.