தீவிரமான இயற்கை சீற்றம்: அபாயத்தில் இமயமலையை சுற்றியுள்ள மாநிலங்கள்!

author img

By

Published : Feb 15, 2021, 5:05 PM IST

இயற்கை பேரழிவு

சுற்றுச்சூழல் ரீதியாக மென்மையான இமாலய மலைத்தொடர்ப் பகுதிகள் நமக்கு ஆகப்பெரிய இயற்கை வளம். அதுதான் இமாலய, மற்றும் துணை இமாலய மலைத்தொடர்களில் இருக்கும் உயிர்களுக்கும், பருவநிலைக்கும் ஆதாரமாக இருக்கிறது. அந்த இயற்கை வளத்தைப் பாதுகாக்கும் திட்டம் காலத்தின் தேவை.

இமயமலைச் சறுக்குப் பனிப்பாலங்களில் ஏற்படும் பனிக்கட்டி இழப்பு 2000-2016 காலக்கட்டத்தில் இரட்டிப்பாகி விட்டது என்று இமயமலைப் பனிப்பாலங்கள் பற்றிய ஓர் ஆராய்ச்சி சொல்கிறது. ஜேஎம் மெளரர், ஜேஎம் ஷாஃபெர், எஸ் ரூப்பர், ஏ கோர்லி ஆகிய ஆராய்ச்சியாளர்கள் செய்த ஆராய்ச்சி அது. கொலம்பியா பல்கலைக்கழகத்தைச் சார்ந்த பூமி மற்றும் சுற்றுச்சூழல் விஞ்ஞானங்கள் துறையிலும், லாமாண்ட்-டோஹெர்டி பூமி அவதானிப்புக் கூடத்திலும், உடா பல்கலைக்கழகத்தைச் சார்ந்த புவியியல் துறையிலும் அவர்கள் பணிபுரிந்துவருகிறார்கள்.

இமயமலைப் பனிப்பாலங்களில் ஏற்படும் பனிக்கட்டி இழப்பைப் பற்றி 1975-2000, 2000-2016 காலக்கட்டங்களில் அவர்கள் ஆய்வு நடத்தினர். இந்தக் கடுமையான சுற்றுச்சூழல் நிகழ்வுக்கு அவர்கள் வளிமண்டலம் வெப்பமாகுதல், மனிதர்கள் பனியின் மீதுகொட்டிய கருப்புக் கார்பன்களின் (கரிப்பொருட்களின்) குவியலால் ஏற்பட்ட அல்பீடோ விளைவு (எதிரொளித் திறன்) மற்றும் மழைப்பொழிவில், பனிப்பொழிவில் ஏற்பட்ட மாற்றங்கள் ஆகிய உந்துகாரணிகளைக் குறிப்பிடுகிறார்கள்.

அதிகரிக்கும் பனிக்கட்டி இழப்பிற்கான சுற்றுச்சூழல் காரணிகளின் அடிப்படையிலே இந்த அறிவுப்பூர்வமான ஆராய்ச்சி நடத்தப்பட்டது. அதைப்போல நடத்தப்பட்ட மற்ற ஆராய்ச்சிகள், மாசு ஏற்படக் காரணமாக இருந்த மற்ற மானுட மூலங்களையும், இமாலய மலைத்தொடர்கள் ஒட்டி திட்டமிடாமல் நிகழ்ந்த வளர்ச்சியையும், சுற்றுலாத்துறை முன்னேற்றம் சம்பந்தமாக அதிகரிக்கும் வளர்ச்சிப் பணிகளையும் ஆராய்ந்து, உத்தரகாண்டில் சமீபத்தில் நிகழ்ந்த அழிவுநிகழ்வு போன்ற பல அவலங்களைக் குறித்து எச்சரிக்கை செய்கின்றன.

உதாரணமாக, ஆண்டுதோறும் லட்சக்கணக்கான மக்கள் இந்த மலைகளுக்கு மதச்சுற்றுலாக்காக விஜயம் செய்கின்றனர். அமர்நாத் யாத்ரா, பத்ரிநாத், கேதார்நாத் யாத்ராக்கள், கைலாஸ் மானசரோவர் யாத்ரா, சர்டம் யாத்ரா போன்ற ஆன்மீகச் சுற்றுலாக்கள் நடக்கின்றன. பெருத்து வரும் யாத்ரீகர்களின் கூட்டத்தின் வசதிக்காக பல்வேறு சுற்றுலா உட்கட்டமைப்புகள் கட்டுப்பாடுகள் இல்லாமல் கட்டமைக்கப்பட்டு விட்டன. கட்டுப்படுத்த முடியாத மோட்டார் வாகனப் போக்குவரத்து அந்தப் பகுதியின் காற்றுமாசினை அதிகரித்து மெல்லிய சுற்றுச்சூழல் அமைப்பைக் குலைக்கும் மானுடக் காரணி கொண்ட மாசுக்கு தன்பங்கை அளிக்கிறது. பொருளாதாரக் காரணங்களுக்காக வளர்ச்சி என்பது முன்னுரிமை என்றால், காட்டை அழித்தல் அதன் உடனடியான பின்விளைவு. இமாலாய மாநிலங்களில் இருக்கும் பல சதுரகிலோமீட்டர் பரப்பளவு கொண்ட காடுகள் சுற்றுலா வளர்ச்சிக்காகவும், தொடர்ந்து கொண்டுசெல்ல முடியாத நீர்மின்சக்தித் திட்டங்களுக்காகவும் அழிக்கப்பட்டு விட்டன. இந்தக் காடுகள்தான் கார்பனை உள்வாங்கி அழிக்கும் இயற்கை அரண். காடுகளை அழித்தபின்பு இமயத்தின் பரந்துபட்ட பனிப்பாலப் பகுதிகள் எல்லாம் கருப்புக் கார்பன் தங்குமிடம் ஆகிவிட்டன.

அதிகரிக்கும் பனிக்கட்டி இழப்பு வெடித்துவரும் வெள்ளத்தின் அபாயத்தை அதிகரிக்கிறது. நிலையற்ற சறுக்குப் பனிப்பாலங்கள் உருகி உருவாகும் ஏரிகள் விரிவடைவதால் வெள்ளப்பெருக்கு அதிகரிக்கிறது. உத்தரகாண்ட் துயரநிகழ்வுக்கு சந்தேகிக்கப்பட்ட காரணங்களில் இதுவும் ஒன்று. உலக பருவநிலை மாற்றம் சுற்றுச்சூழல் ரீதியாக மென்மையான பகுதிகளில் அழிவை உண்டாக்குகின்ற அதே வேளை, அவிஞ்ஞானமான, தொடர்ந்து செல்ல இயலாத தன்மை வாய்ந்த வளர்ச்சிப்பணிகளை மனிதன் செய்வதும் அழிவையே உண்டாக்குகிறது. 2000 முதல் 2016 வரையிலான காலக்கட்டத்தில் நிலவிய இமாலாயத்தின் வளிமண்டல வெப்பநிலை, 1975-2000 காலக்கட்டத்து வெப்பநிலையோடு ஒப்பிட்டுப் பார்த்தால், 0.4 டிகிரி செல்ஷியஸிலிருந்து 1.4 டிகிரி செல்ஷியஸ் வரை அதிகமாகவே சூடாகிவிட்டது என்று ஆராய்ச்சிகள் சொல்கின்றன. அதனால் பனிக்கட்டிகள் படுவேகமாகவே உருகி சன்னமாகிவிட்டன.

இந்த விசயத்தில் பாதுகாப்புத் திட்டம் ஒன்று அவசரமாகத் தேவைப்படுகிறது. சுற்றுச்சூழல் ரீதியாக மென்மையான இமாலய மலைத்தொடர்ப் பகுதிகள் ஆகப்பெரிய இயற்கை வளம் நமக்கு. அதுதான் இமாலய, மற்றும் உபஇமாலய மலைத்தொடர்களில் இருக்கும் உயிர்களுக்கும், பருவநிலைக்கும் ஆதாரமாக இருக்கிறது. அந்த இயற்கை வளத்தைப் பாதுகாக்கும் திட்டம் காலத்தின் தேவை. மேலும் முழு இந்திய உபகண்டத்தின் நீர்வளயியலும் இமாலயத்தின் சறுக்குப் பனிப்பாலங்களின் ஆரோக்கியத்தைப் பொறுத்தே இருக்கிறது. இந்திய அரசாங்கம் பாதுகாப்பான இமாலயம் என்னும் திட்டத்தைக் கொண்டு வந்திருந்தாலும், அந்தப் பகுதி மக்களின் உயிரைக் காப்பதற்கும், பொருளாதார, சுற்றுச்சூழல் சாத்தியத்துடன் கூடிய வளர்ச்சியைக் காப்பதற்கும் பெரிதாக அது ஒன்றும் செய்யவில்லை.

அந்தப் பகுதிகளில் வாழும் சொந்தமண் மக்களின் வாழ்வாதாரத்தைக் காக்க வேண்டும்; பேணிப் போற்ற வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்து கிடையாது. சுற்றுச்சூழலுக்கு உகந்தவாறு தொடரக்கூடிய சுற்றுலா அமைப்பு, இயற்கையான விவசாயம், நீர்மின்சக்தித் திட்டங்களின் மறுபொறியியலாக்கம், நஷ்ட ஈடாக செய்யும் காடுவளர்ப்புத் திட்டங்கள் ஆகியவைதான் இந்த அதிமுக்கியமான பகுதியைப் பாதுகாக்க உதவும்; உள்ளூர் மக்களின் நன்மைக்காக இயற்கை வளங்களைப் பணமாக்கும் முறைமைகளைக் கவனித்துக் கொள்ளவும் அவை உதவும்.

வளர்ச்சி என்ற பெயரில் நிகழும் பரவலான காடொழிப்புதான் நிலச்சரிவு, மற்றும் வெள்ளம் ஆகிய அபாயங்களை அதிகரித்திருக்கிறது. உத்தரகாண்ட்டில் மட்டும், கங்கை வடிகால் பகுதியில் 10,000 மெகாவாட் மின்சாரத்தை உற்பத்தி செய்யக்கூடிய 70-க்கும் மேற்பட்ட நீர்மின்சாரத் திட்டங்களை அரசு அனுமதித்திருக்கிறது. இமாலய மலைத்தொடர்ப் பகுதிகளைச் சுற்றியுள்ள பல மாநிலங்கள் அந்த மாதிரியான மின்சாரத் திட்டங்களைக் கொண்டு வருகின்றன. ஆனால் நஷ்ட ஈடாக காடுவளர்ப்புத் திட்டங்களோ அல்லது இருக்கும் நீரை மின்சார உற்பத்திக்குப் பயன்படுத்துவதால் அவசியமான அணைகளின் மறுசீரமைப்புத் திட்டங்களோ அந்த மாநில அரசுகளிடம் இல்லை. ஏற்கனவே இருக்கும் பல மின்சார உற்பத்தி நிலையங்கள் சரியான முறையில் கட்டமைப்பு செய்யப்பட்டிருக்கவில்லை என்பதால் அந்தப் பகுதியின் நீர்வளயியல் பெரிதும் பாதிக்கப்பட்டிருக்கிறது என்றெல்லாம் சொல்லப்படுகிறது.

இமாலய மலைத்தொடர்ப் பகுதிகளில் பருவநிலை மாற்றங்களின் பாதிப்பைத் தடுக்க பசுமை இல்ல வாயுக்களின் வெளிப்பாடுகளைக் கட்டுப்படுத்துவது மற்றுமொரு பெரிய நடவடிக்கை ஆகும். எல்லா இமாலய மாநிலங்களும் மானுட காரணத்தினால் விளையும் கருப்புக் கார்பன் வெளிப்பாடு நிலவும் மும்முரமான இடங்களுக்கு வெகு அருகாமையில் இருக்கின்றன. இயற்கையோடு இயைந்த முதல் மாநிலம் மேகாலயா என்று அறிவிக்கப்பட்டாலும், மற்ற மாநிலங்களால் அப்படி முற்றிலும் இயற்கை சார்ந்து மாற முடியவில்லை. காரணம் நடப்பில் இருக்கும் காடுசம்பந்தமான சட்டங்கள் பல அதைத் தடுத்துவிடுகின்றன. நிலையில்லாத இமாலயாச் சரிவுப் பகுதிகளில் குடியிருக்கும் விவசாயிகளால் இயற்கை விவசாயப் பயிர்களை வளர்க்க முடியவில்லை. காரணம் கடுமையான காடுசம்பந்தமான சட்டங்கள். இயற்கை விவசாயத்தை ஊக்குவித்தால் இமாலயச் சரிவுகளின் நிலைத்த தன்மைக்கு அது பெரிதும் உதவும்; மேலும் மக்கள் தங்கள் வருமானத்திற்காகச் சார்ந்திருக்கும் காடுகளின் மீதான அழுத்தமும் குறையும்.

தொடர்ந்து நிகழும் சாத்தியமே இல்லாத சுற்றுலாத் தொழில் செழித்தோங்கி வளர்வதால், உலகிலே ஆகப்பெரிய தூய்மையான நீரின் மூலாதாரம் பிளாஸ்டிக் கழிவுகளால் மாசுபட்டுக் கிடக்கிறது. இதை மேலும் மாசாக்குவது அவிஞ்ஞான ரீதியில், கட்டுப்பாடற்று நடக்கும் கட்டுமான செயல்பாடுகள்தான். திடீர் வெள்ளத்திற்கு ஆளாகும் மலைச்சரிவுகளில் உணவகங்களும், விடுதிகளும் கட்டப்படுகின்றன. இந்தக் கட்டுமான நடவடிக்கைகள் ஏற்கனவே பலமில்லாத மலைச்சரிவுகளை மேலும் பலகீனமாக்கி விடுவதால், சரிந்துவரும் பனிப்பாறைகளும், திடீரெனத் தாக்கும் வெள்ளமும் அழிவை உண்டாக்குகின்றன.

இமய மலைப்பகுதிகள் நகரமயமாகுதலில் வேறான பெளதீக, சமூக, பொருளாதாரக் காரணிகள் இருக்கின்றன. பங்காளதேஷ், இந்தியா, நேபாளம், பாகிஸ்தான் ஆகிய நாடுகளை தன்னுள் கொண்ட ஹிந்து குஷ் இமாலயம் அதிகமாகவே நகர்மயமாகி விட்டது என்பதைச் சில ஆய்வுகள் ஆவணப்படுத்தி உள்ளன. பல பகுதிகளில் நைனிடால் போன்ற பெரிய மாநகரங்கள் செழித்து வளர்ந்து எளிதாக மாறக்கூடிய மலைச் சரிவுகளை ஆக்ரமித்து விட்டன. ஜோகன்னஸ்பர்க்கில் 2002-ல் நடந்த ’சஸ்டெயினபிள்’ மாநாட்டில் பிரச்சினைக்குரிய இந்தச் சுற்றுச்சூழல் அமைப்பைப் பாதுகாப்பது பற்றி வலியுறுத்தப்பட்டாலும், இந்தப் பகுதியில் பரவலாக நடக்கும் நகர்மயமாகும் போக்கைத் தடுத்து நிறுத்த ஒரு நடவடிக்கையும் எடுக்கப்பட வில்லை.

சுற்றுச்சூழலைப் பாதிக்காத வண்ணம் பணம் சேர்க்கும் செயல்பாடுகளை உறுதிசெய்தபின்பு, இமாலய மலைத்தொடர்ப் பகுதிகளைப் பாதுகாக்கப் போர்க்கால நடவடிக்கைகள் எடுக்கப்படாவிட்டால், அதிதீவிரமான, கடுமையான இயற்கைச் சீற்றங்களையும், மாற்றங்களையும் சந்திக்கும் அபாயத்தில் சிக்கிவிடக் கூடும் பல இமாலய மாநிலங்கள். உத்தரகாண்டில் பணிசெய்து செழுமையான அனுபவம் பெற்று ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரி அமிதாப பாண்டே, 2013 உத்தரகாண்ட் துயரநிகழ்வுக்குப் பின்பு, இமாலய மலைத்தொடர்ப் பகுதிகளைப் பாதுகாக்க உடனடியாக தலையிட வேண்டும் என்று தான் எழுதிய குறிப்பு ஒன்றை எப்படி அரசு அலட்சியப் படுத்தியது என்று எழுதியிருக்கிறார். இந்த அலட்சியத்தை மன்மோகன் சிங் அரசும், மோடி அரசும் காட்டின என்றும் அவர் சொல்கிறார். வேகவேகமாகப் பரவும் பருவநிலை மாற்றங்களின் பாதிப்புகளைத் தடுக்க பசுமை இல்ல வாயு வெளிப்பாடுகளைக் கட்டுப்படுத்துவது ஒவ்வொரு தேசத்திற்கும் உரிய கடமை. இமாலய மலைத்தொடர்ப் பகுதிகளை இன்னும் சிறப்பாகப் பாதுகாக்க வேண்டுமென்றால், அங்கு அமலில் இருக்கும் கட்டுப்பாடுகளை விமர்சனப் பார்வையோடு மறு ஆய்வு செய்வது இந்தியாவுக்கு அவசியம்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.