வந்தியத் தேவன் பிளேபாயா? பொன்னியின் செல்வன் நாவல் கூறுவது என்ன?

author img

By

Published : Oct 1, 2022, 7:46 PM IST

Updated : Oct 1, 2022, 7:57 PM IST

Etv Bharat

பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் வல்லத்தரையர் வந்தியத்தேவன் குறித்து தவறான சித்தரிப்பு இருப்பதாக சென்னை காவல் ஆணையரிடம் புகார் கூறப்பட்டுள்ளது. யார் இந்த வந்தியத்தேவன், அவர் குறித்து சரித்திர புனைவு நாவலான பொன்னியின் செல்வன் நாவல் கூறுவது என்ன என்பது குறித்து பார்க்கலாம்.

அமரர் கல்கி எழுதிய நாவலின் பெயர் ராஜராஜசோழனை குறிப்பிடும் வகையில் பொன்னியின் செல்வன் என குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் கதையின் போக்குப்படி பார்த்தால் வந்தியத்தேவன்தான் இந்த நாவலின் கதாநாயகன் என்று கூட வர்ணிக்கலாம். ஆதித்த கரிகாலனிடமிருந்து தஞ்சை நோக்கி புறப்படும் வந்தியத்தேவனின் பயணமே, பொன்னியின் செல்வன் கதையின் தொடக்கம்.

வந்தியத்தேவன் உண்மை கதாபாத்திரமா?: ஒவ்வொரு கதாபாத்திரங்களின் அறிமுகத்தைக் கூட வந்தியத்தேவனின் பார்வையில் தான் அணுகியிருப்பார் கல்கி. சோழர் வம்சத்தின் பட்டத்து இளவரசன் ஆதித்த கரிகாலனின் நண்பன், சோழ இளவரசி குந்தவையின் காதலன், ராஜராஜ சோழன் என்றழைக்கப்படும் அருள்மொழி வர்மனின் உயிர்த்தோழன் என பாத்திரம் வடிவமைக்கப்பட்டிருக்கும்.

வந்தியத் தேவன் கதாபாத்திரம் குறித்து இத்திரைப்படத்தில் நடித்துள்ள நடிகர் கார்த்தி பேசும் போது, ஆட்சி அதிகாரமற்ற ஒரு இளவரசனைப் போன்ற கதாப்பாத்திரம் என பொருள் படும்படியாக விளக்கியிருந்தார். ஆனால் வரலாற்று ரீதியாக வந்தியத்தேவன் என்ற கதாபாத்திரத்திற்கான வலுவான ஆதாரங்கள் இல்லை என்பது தான் சுவாரஸ்யம்.

டி.வி.சதாசிவ பண்டாரத்தார் எழுதிய பிற்கால சோழர் சரித்திரம் புத்தகத்தில், கீழை சாளுக்கிய மரபைச்சேர்ந்தவராக இருக்கக் கூடும் என வந்தியத்தேவனை பற்றி எழுதுகிறார். ஆனால் இதிலிருந்து கல்கி முரண்பட்டுள்ளார். வல்லத்து வாணர் குல இளவரசனாக இருக்கலாம் என்ற பார்வையிலேயே அவரது பாத்திரத்தை கட்டமைத்திருக்கிறார்.

பெரியகோயில் கல்வெட்டு கூறுவது என்ன?: தஞ்சை பெருவுடையார் கோயில் கல்வெட்டுக்களில், "ஸ்ரீராசராசதேவர் திருத்தமக்கையார் வல்லவரையர் வந்தியத்தேவர் மகாதேவியார் ஆழ்வார் பராந்தகன் குந்தைவையார் " என்றவாறு குந்தவையாரின் பெயரோடு இணைத்து குறிப்பிடப்பட்டுள்ளது. ஆதாரப்பூர்வமாக சில தகவல்கள்தான் இருந்தாலும். சரித்திர புனைவு நாவலான பொன்னியின் செல்வன் முழுவதுமே இந்த கதாபாத்திரம் மீதே பயணிக்கிறது.

நாவலின் வீரநாராயண ஏரிக்கரையில் வந்தியத்தேவனின் பயணம் துவங்கும் போது, ஏரிக்கரையில் ஆடிப்பெருக்கை கொண்டாடும் பெண்களை பார்த்த வந்தியத்தேவன், இளமைக்கே உரிய வெட்கம் கலந்த ஆர்வத்துடன் சிந்திப்பது போன்ற காட்சி கட்டமைக்கப்பட்டிருக்கும். இது போன்ற காட்சிகள் திரைப்படத்தில் தவறாக சித்தரிக்கப்பட்டுள்ளதாக புகார் எழுந்துள்ளது.

வரலாறு என்பது ஆதாரப்பூர்வமான தகவல்களின் அடிப்படையில் எழுதப்படுவது. வரலாற்றுப்புனைவு என்பது வரலாற்று ஆதாரங்களின் அடிப்படையில் கதையின் போக்குக்காக சில சுவாரஸ்ய அம்சங்களையும் சேர்த்து கட்டமைக்கப்படுவது. பொன்னியின் செல்வன் வரலாற்று புனைவுதான் என்பதால் சுவாரஸ்ய அம்சங்களில் குறைகாண தேவையில்லை என்பதும் ரசிகர்களின் வாதமாக உள்ளது.

இதையும் படிங்க: வசூல் வேட்டையில் பொன்னியின் செல்வன்; முதல் நாள் வசூல் ரூ.80 கோடி

Last Updated :Oct 1, 2022, 7:57 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.