நான் இயக்குநராக இருந்தபோது பல கோடிகள் கையில் இருந்தது - ஆர்.கே.செல்வமணி

author img

By

Published : Sep 21, 2022, 5:43 PM IST

நான் இயக்குநராக இருந்தபோது பல கோடிகள் கையில் இருந்தது - ஆர்.கே.செல்வமணி

நான் இயக்குநராக இருக்கும்போது பல கோடிகள் என் கையில் இருந்தது. ஆனால் தயாரிப்பாளர் ஆனபிறகு என் வீட்டைக் கூடப் பாதுகாக்க முடியாத சூழல் வந்து விடுமோ என்ற பயம் இருந்தது என பெப்சி தலைவர் ஆர்.கே.செல்வமணி தெரிவித்துள்ளார்.

நடிகர் யோகிபாபு நடிப்பில் உருவாகியுள்ள 'லோக்கல் சரக்கு' திரைப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா சென்னை வடபழனி கமலா திரையரங்கில் நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினர்களாக பெப்சி தலைவர் ஆர்.கே.செல்வமணி, தயாரிப்பாளர் கே.ராஜன், நடிகர் ராதாரவி, சினேகன் உள்ளிட்டோர் பலர் கலந்து கொண்டனர்.

விழாவில் கலந்துகொண்ட கவிஞர் சினேகன் பேசுகையில், “பொதுவாக ஒரு படத்தின் இசை வெளியீட்டு நிகழ்ச்சிக்கு நடிகர், நடிகைகள் தான் வர மாட்டார்கள். ஆனால், பாடல் ஆசிரியர் கூட வராமல் உள்ளனர். ஒரு படத்தில் ஒப்புக்கொண்டால் அந்த படம் திரைக்கு வரும் வரை அனைவருக்கும் பொறுப்பு உள்ளது. கவிஞர்களுக்கும் அந்தப் பொறுப்பு உள்ளது.

இயக்குநர்கள், எழுத்தாளர்களாக இருப்பது அபூர்வம். நல்ல எழுத்தாளர்கள் படம் வெற்றி பெற வேண்டும். நிறைய கலைஞர்களுக்கு இது ஒரு சாபக்கேடு, கலைஞர்கள் வெற்றிபெறும்போது அதைப்பார்க்க அவர்களது பெற்றோர்கள் இருப்பது இல்லை. விமர்சனம் ஒருவரை செதுக்க வேண்டுமே தவிர, சிதைக்கக்கூடாது.

யூ-ட்யூப் தலைப்பு ஒன்றாக உள்ளது. ஆனால் உள்ளே வேறு ஒரு செய்தி இருக்கும். இது போன்று செய்ய வேண்டாம். 3 நாட்களுக்குப் பிறகு தான் விமர்சனம் செய்ய வேண்டும் என தயாரிப்பாளர் சங்கம் சொல்லி உள்ளது. அதை கடைபிடித்தால் சிறப்பாக இருக்கும்' எனக் கேட்டுக்கொண்டார்.

நடிகர் ராதாரவி பேசுகையில், 'டி. ராஜேந்தர் எல்லா வேலையும் செய்வார். அவர் சகலகலா வல்லவர். லோக்கல் சரக்கு என தலைப்பு வைத்ததாலேயே இந்தப்படம் நன்றாக ஓடும். சரக்கு போட்டுவிட்டால் படம் புரியாது. லோக்கல் சரக்கு இல்லை என்றால் எந்த அரசையும் நடத்த முடியாது. குடியை நிறுத்த முடியும் என்று சொன்னால் இரவு நிறுத்தினேன் காலை ஆரம்பித்தேன் என்பார்கள்.

கடைகள் இல்லாத மாநிலம் உள்ளது என்பார்கள். நாங்கள் அப்படி பழகிவிட்டோம். ஒரு முறை குடித்துவிட்டு மீண்டும் குடிக்கிறார்கள். சினிமாவை மக்கள் தற்போது பார்ப்பதே இல்லை. ஆனால், டாஸ்மாக் அப்படியா? கூட்டம் அதிகமாக இருக்கும். சினிமாவில் டிக்கெட் வாங்குவதுபோல மது வாங்குகிறார்கள்.

மனோரமா அவர்கள் எனக்கும் ஜோடி, என் அப்பாவிற்கும் ஜோடி, என் அண்ணனுக்கும் ஜோடியாக இருந்து உள்ளார். அப்படிப்பட்ட பெருமை அவருக்கு சேரும். ஒரே ஆள் படம் வாங்குகிறார் என்று சொல்கிறார்கள். அதனால் தான், கமல் படம் 100 நாட்கள் ஓடுகிறது. நான் 100 நாட்கள் பார்த்தே ரொம்ப நாள் ஆகிறது.

தவறான தலைப்பை வைத்தால் தான் மக்கள் பார்க்கிறார்கள். நல்ல தலைப்பை வைத்தால் பார்க்கமாட்டார்கள். சினிமா பார்த்தால் தான் நாங்கள் வாழ முடியும். அப்படி தான் இது மாதிரி நிகழ்வுகளில் பேச முடியும். விமர்சனம் 3 நாட்கள் கழித்து எல்லாம் எழுத வேண்டாம். எப்போது வேண்டுமானாலும் எழுதலாம். முதல் காட்சி பார்க்கும் போது விமர்சனம் சொல்லி விடுகின்றனர்' எனப்பேசினார்.

தயாரிப்பாளர் கே. ராஜன் பேசுகையில், 'படம் எடுப்பது டார்ச்சர். நான் 9 படங்கள் எடுத்துள்ளேன். எவ்வளவு அவமானங்களை நான் சந்தித்தேன் என செல்வமணிக்குத் தெரியும்' என்றார். படம் எடுப்பது டார்ச்சர் என சொன்னதால் நடிகர் சென்றாயன் குறிக்கிட்டு பேச முயற்சி செய்தார். 'நாங்கள் வேறு வேலை வாங்கித் தருகிறோம்; உட்கார்' என்று ராஜன் சொல்லிவிட்டார்.

பெப்சி தலைவர் ஆர்.கே.செல்வமணி பேசுகையில், 'லோக்கல் சரக்கு என்று சொல்லும்போது சரக்கு என்பது மதுபானம் மட்டும் இல்லை. இந்தியாவில் உற்பத்தி ஆகும் பொருட்கள் என்று எடுத்துக்கொள்ளலாம். ஒரு நாடு உள்நாட்டில் உற்பத்தி செய்யும் பொருட்களை பயன்படுத்தினால் அந்த நாடு வளம் அடையும்.

என்னுடைய படம் வெளியாகும்போது என்னுடைய தயாரிப்பாளர் நான் இருக்கும் தெருவிற்குக்கூட வரக்கூடாது என்றார். வெற்றி தான் சினிமாவில் நண்பன். புலன்விசாரணையில் வெற்றிபெற்றார். உடனே அடுத்த படத்திற்கு பேச ஆரம்பித்தார். தயாரிப்பாளர் வேதனை குறித்து தான் ராஜன் பேசி உள்ளார். என் கஷ்டத்திற்கு நான் தான் காரணம் என்பதை புரிந்துகொண்டால் போதும்.

நான் இயக்குநராக இருக்கும்போது பல கோடிகள் என் கையில் இருந்தது. சாலிகிராமத்தில் நான் ஒரு வீடு வாங்கினேன். அந்த தெருவை வாங்கும் அளவிற்கு என்னிடம் பணம் இருந்தது. ஆனால், தயாரிப்பாளர் ஆன பிறகு என் வீட்டைப் பாதுகாக்க முடியாத சூழல் வந்து விடுமோ என்ற பயம் இருந்தது.

தயாரிப்பாளர்கள் ஒன்றாக இணைந்து ஒரு கட்டமைப்பை உருவாக்கினால் தான் சுமூகமாக இருக்க முடியும். திரைப்படத்துறையில் அனைவரும் பகிர்ந்து கொண்டால் தான் லாபம் வரும். நஷ்டம் தயாரிப்பாளருக்கு; லாபம் மற்றவர்களுக்கு என்று தற்போது மாறியுள்ளது” என்றார்.

இதையும் படிங்க: நடிகர் போண்டாமணிக்கு தீவிர சிகிச்சை - கண்ணீர் மல்க உதவி கேட்கும் நடிகர் பெஞ்சமின்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.