'சினிமாவில் 20 ஆண்டுகள். நான் இந்த அளவிற்கு வருவேன் என்று நினைத்துகூடப் பார்த்ததில்லை' - நன்றி கூறிய தனுஷ்

author img

By

Published : May 10, 2022, 8:58 PM IST

தனுஷ்

சினிமாவில் தனது 20 ஆண்டுகள் பயணத்தை நிறைவு செய்துள்ள நடிகர் தனுஷ் தனது ரசிகர்கள், ஊடகங்கள், சமூக வலைதளத்தைச் சேர்ந்தவர்கள் என அனைவருக்கும் நன்றி தெரிவித்துள்ளார்.

தமிழில் 'துள்ளுவதோ இளமை' என்ற படத்தில் அறிமுகமாகிய நடிகர் தனுஷ், பாலிவுட் மற்றும் ஹாலிவுட் என்று கலக்கிவருகிறார். இவர் கண்டு வந்த சவால்களும் சிக்கல்களும் அவற்றைக் கடந்து வர மேற்கொண்ட ஓயாத முயற்சியுமே இவரை இந்தளவிற்கு சாதனைகள் படைக்க வைத்துள்ளது எனலாம்.

இந்த நிலையில், நடிகர் தனுஷ் இன்று அவரது ட்விட்டர் பக்கத்தில் தனது ரசிகர்களுக்கு ஒரு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், "நான் சினிமா துறைக்கு வந்து 20 ஆண்டுகள் கடந்துவிட்டன என்று என்னால் நம்ப முடியவில்லை. நேரம் சீக்கிரமே கடந்துவிட்டது. நான் 'துள்ளுவதோ இளமை' படம் தொடங்கும் போது இந்த இடத்திற்கு வருவேன் என்று கனவில் கூட நினைத்துப் பார்த்ததில்லை. கடவுள் கருணை உள்ளவர்.

என் ரசிகர்களின் தொடர் ஆதரவு மற்றும் அன்பிற்கு நன்றி சொன்னால் போதாது. அவர்கள் தான் என் மிகப்பெரிய பலமே. பத்திரிகை, ஊடகம் மற்றும் சமூக வலைதள பிரபலங்கள் அனைவருக்கும் என் பணிவான நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

நடிகர் தனுஷின் டிவிட்டர் பதிவு
நடிகர் தனுஷின் உருக்கமான பதிவு

இந்த தருணத்தில் நான் பணியாற்றிய பணியாற்றிக் கொண்டிருக்கிற தயாரிப்பாளர்கள், இயக்குநர்கள், துணை நடிகர்கள் மற்றும் அனைத்து தொழில்நுட்பக் கலைஞர்கள் ஆகிய அனைவருக்கும் நன்றி. என்னுடைய குரு என் அண்ணன் செல்வராகவனுக்கு நன்றி. ஏன் என்று உங்களுக்கு தெரியும்.

எனக்குள் ஒரு நடிகன் இருக்கிறான் எனக் கண்டுபிடித்த எனது அப்பா கஸ்தூரி ராஜா அவர்களுக்கு நன்றி. இறுதியாக எனது அம்மா, தினமும் அவர் செய்யும் பிரார்த்தனை தான் என்னைப் பாதுகாத்து இந்த இடத்தில் என்னைக்கொண்டு வந்து நிறுத்தி இருக்கிறது. அம்மா இல்லாமல் நான் ஒன்றுமே இல்லை. வாழ்க்கையை அர்த்தமுள்ளதாக மாற்றுவோம். எண்ணம் போல் வாழ்க்கை. அன்பைப் பகிருங்கள். ஓம் நமச்சிவாய" என்று தெரிவித்துள்ளார்.

குறிப்பாக, இதில் அவர் 'நான் துள்ளுவதோ இளமை படத்தில் நடிக்கும்போது, இந்த அளவிற்கு வருவேன் என்று நினைத்து கூடப் பார்த்ததில்லை' என்று நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டுள்ளார். சிறந்த நடிப்பிற்காக 2 முறை தேசிய விருதுகளை வாங்கி தற்போது சினிமாத்துறையில் 20 ஆண்டுகளைக் கடந்து வந்துள்ளார்,நடிகர் தனுஷ். இவரது பணிகளைப் பாராட்டி ரசிகர்கள் மற்றும் திரைத்துறையினர் பலரும் நடிகர் தனுஷிற்கு வாழ்த்துகள் தெரிவித்து வருகின்றனர்.

தமிழ் மட்டுமின்றி இந்தி, ஆங்கிலம் என மாற்று மொழிப் படங்களிலும் நடித்து வரும் தனுஷ், அடுத்ததாக ஹாலிவுட்டின் முன்னணி இயக்குநர்களான ’அவெஞ்சர்ஸ் எண்ட் கேம்’ திரைப்படத்தை இயக்கிய ஆண்டனி மற்றும் ஜோ ரூஸோ ஆகியோரின் படத்தில் நடித்திருக்கிறார். இப்படத்தை நெட்ஃபிளிக்ஸ் நிறுவனம் ரூ.1500 கோடியில் தயாரித்து வருகிறது. இப்படம் வரும் ஜூலை 22ஆம் தேதி நெட்ஃபிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளதாகவும் அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: தனுஷ் நடிக்கும் ஹாலிவுட் திரைப்படம் : லுக் மற்றும் ரிலீஸ் தேதி அறிவிப்பு!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.