புகார் மீது நடவடிக்கை எடுக்காததால் காவல் நிலையம் முன்பு பெண் தீக்குளிப்பு!

author img

By

Published : Aug 1, 2021, 5:57 AM IST

தனக்கு தானே தீ வைத்துக் கொண்ட பெண்

காவல் நிலையத்தில் கொடுத்த புகார் மீது முறையாக விசாரணை நடத்தவில்லை எனக்கூறி, பாதிக்கப்பட்ட இளம் பெண் காவல் நிலையம் முன்பு தனக்கு தானே தீவைத்துக் கொண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

பெரம்பலூர்: வேப்பூர் அருகேயுள்ள வயலூர் கிராமத்தைச் சேர்ந்தவகள் ராஜா-ராணி தம்பதி. இவர்களது மகள் அகிலா. செவிலியர் பட்டயப்படிப்பு படித்துள்ளார்.

அகிலாவுக்கும் அரியலூர் மாவட்டம் உடையார்பாளையத்தைச் சேர்ந்த பாரதி என்பவருக்கும் 9 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு பரத்குமார், யாழினி என்ற 2 குழந்தைகள் உள்ளனர். கருத்து வேறுபாட்டால் கடந்த சில ஆண்டுகளாக, அகிலா தனது குழந்தைகளுடன் அவரது பெற்றோர் வீட்டில் வசித்து வந்தார்.

இந்நிலையில், அகிலாவுக்கும் அவரது வீட்டின் அருகில் வசித்து வந்த அமரதீபன் என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து அகிலாவும், அமரதீபனும் வீட்டை விட்டு வெளியேறி திருப்பூரில் தங்கி வேலை செய்து வந்துள்ளனர். இதுகுறித்து அகிலாவின் தாய் ராணி கொடுத்த புகாரின் பேரில், குன்னம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து, திருப்பூரிலிருந்து அகிலா - அமரதீபன் இருவரையும் அழைத்து வந்து பெற்றோரிடம் ஒப்படைத்தனர்.

காவல்நிலையத்தில் புகார்

திருப்பூரில் இருந்தபொழுது வேலை வாங்கி தருவதாகக் கூறி, அகிலாவிடம் இருந்து ரூ.50 ஆயிரம் ரொக்கமும், 7 சவரன் தங்க நகைகளையும் அமரதீபன் வாங்கி இருக்கிறார் என்றும் அதனை திருப்பி தரவில்லை என்று கூறப்படுகிறது. அமரதீபனுடன் ஏற்பட்ட மன கசப்பின் காரணமாக, தான் கொடுத்த பணத்தையும், நகைகளையும் அகிலா திருப்பிக் கேட்டுள்ளார். இதனால் இருதரப்பு வீட்டாருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. அமரதீபன் குடுப்பத்தினர் அகிலாவின் குடும்பத்தை மிரட்டியுள்ளனர்.

தற்கொலை  தீர்வல்ல
தற்கொலை தீர்வல்ல

தீ வைத்துக்கொண்ட இளம்பெண்

இது குறித்து குன்னம் காவல் நிலையத்தில் பலமுறை புகார் கொடுத்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது. நேற்று(ஜூலை 30) அகிலா மீண்டும் புகார் கொடுத்த நிலையில் இன்று( (ஜூலை 31) இருதரப்பினரையும் காவல்துறையினர் விசாரணைக்கு வரவழைத்துள்ளனர்.

விசாரணையில் காவல்துறையினர் அமரதீபனுக்கு சாதகமாக செயல்பட்டதாகவும், அகிலாவை தகாத வார்த்தைகளைச் சொல்லி திட்டியதாக கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த அகிலா, காவல் நிலையத்திற்கு வெளியே தான் மறைத்து வைத்திருந்த மண்ணெண்ணெயை உடலில் ஊற்றி தனத்துத் தானே தீ வைத்துக் கொண்டார்.

இதில், உடனடியாக அங்கிருந்தவர்கள் அகிலாவைக் காப்பாற்றி மருத்துவமனையில் சேர்த்தனர். அவர் 30 விழுக்காடு தீக்காயங்களுடன் பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அகிலாவை தடுத்து காப்பாற்ற முயன்ற குன்னம் காவல் நிலைய பெண் தலைமை காவலர் ரீட்டல், அகிலாவின் சகோதரர்கள் அசோக் மற்றும் அன்புராஜா ஆகிய மூவருக்கும் லேசான தீக்காயம் ஏற்பட்டது. இந்த சம்பவம் குறித்து மங்கலமேடு துணை காவல் கண்காணிப்பாளர் மோகன்தாஸ் விசாரணை நடத்தி வருகிறார்.

இதையும் படிங்க: உயிரைப் பறிக்கும் தண்ணீர் லாரிகள் - சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்கள்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.