சென்னை: ஆன்லைன் சூதாட்டத்தில் பணத்தை இழந்த விரக்தியில், தான் ஓட்டுநராய் வேலைபார்க்கும் வீட்டிலேயே நகைகளைப் பறித்த நபரைக் காவல்துறையினர் வலைவீசிப் பிடித்துள்ளனர். வேளச்சேரி, ஷேசாத்ரிபுரம் பிரதான சாலையில் தனியாக வசித்து வரும் வயதான மூதாட்டி இந்துமதி (68). இவரது வீட்டில் கடந்த ஓராண்டிற்கு முன்பு கார் ஓட்டுநராக இஸ்மாயில் என்பவர் வேலை பார்த்துள்ளார்.
இந்நிலையில், ஆன்லைன் சூதாட்டம் விளையாடி 2 லட்சம் வரை பணத்தை இழந்து மன உளைச்சலுக்குள்ளகிய இஸ்மாயில், நாளடைவில் வேலையும் இல்லாமல் இருந்த போது வடபழனியில் நண்பரோடு மது அருந்த சென்றுள்ளார். அப்போது, சலாம் (35) என்ற நபர் அறிமுகமாகியுள்ளார். அவரிடம் போதையில் தன்னுடைய பிரச்சனையை கூறிய இஸ்மாயிலுக்கு, சலாம் திருடி பணம் சம்பாதிக்க ஐடியா கொடுத்துள்ளார்.
அதனையடுத்து, இருவரும் சேர்ந்து தான் வேலை பார்த்த வீட்டில் தனியாக வசிக்கும் மூதாட்டி இந்துமதியிடம் நகையைப் பறிக்க திட்டமிட்டு கடந்த 30ஆம் தேதி வீடு புகுந்து மூதாட்டியை தாக்கி விட்டு அவர் அணிந்திருந்த வளையல், தங்கச்சங்கிலி, கம்பல் என 14 சவரன் தங்க நகைகளைப் பறித்துக் கொண்டு தப்பிச் சென்றனர். இது குறித்து இந்துமதி கொடுத்த புகாரின் பேரில் வேளச்சேரி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து சட்டம் ஒழுங்கு ஆய்வாளர் சந்திரமோகன் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு விசாரணை நடத்தப்பட்டது.
அப்போது சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து விசாரணை நடத்திய நிலையில், சிசிடிவி காட்சிகளைக் கண்ட மூதாட்டி, “ இவர் என்னிடம் வேலை பார்த்த கார் ஓட்டுநர் போல் இருக்கிறார்..!” எனக் கூறியதின் பேரில் காவல்துறையினர் காவாங்கரையைச் சேர்ந்த இஸ்மாயில் வீட்டிற்குச் சென்று பார்த்த போது அவர் அங்கு இல்லை.
தேனிக்குச் சென்று தலைமறைவான இஸ்மாயிலை, காவல்துறையினர் கோடம்பாக்கத்தில் உள்ள நபர் மூலம் சிம்கார்டு வாங்க வருமாறு சென்னை வரவழைத்து இஸ்மாயில் மற்றும் அவரது நண்பரான சலாம் இருவரையும் கைது செய்து 14 சவரன் தங்க நகைகளை பறிமுதல் செய்தனர். இதில் சலாம் மீது ஏற்கனவே திருட்டு வழக்கு நிலுவையில் இருப்பது குறிப்பிடத்தக்கது.