ரத்தக் காயங்களுடன் இறந்துகிடந்த பெண்: உறவினர்கள் சாலை மறியல்

author img

By

Published : Aug 27, 2021, 12:10 PM IST

durga devi death

கரம்பக்குடி அருகே பெண்ணின் இறப்பில் சந்தேகம் இருப்பதாகக் கூறி உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

தஞ்சாவூர்: கரம்பக்குடி அருகேயுள்ள வானக்கண்காடு கிராமத்தைச் சேர்ந்த துர்கா தேவிக்கும் (26), தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை அருகேயுள்ள மாளியக்காடு கிராமத்தைச் சேர்ந்த ராஜேஷ் (30) என்பவருக்கும் ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது.

இந்நிலையில் இரண்டு ஆண் குழந்தைகளுடன் மாளியக்காடு கிராமத்தில் கணவன் வீட்டில் துர்கா தேவி வசித்துவந்தார். நேற்று முன்தினம் இரவு 10 மணியளவில் துர்கா தேவி, வீட்டின் பின்புறம் ரத்தக் காயங்களுடன் இறந்துகிடந்தார்.

தகவலறிந்த அதிராம்பட்டினம் காவல் துறையினர் சம்பவ இடத்திற்குச் சென்று துர்கா தேவியின் உடலைக் கைப்பற்றி, உடற்கூராய்வுக்காக பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

இந்நிலையில் ராஜேஷ், அவரது குடும்பத்தார் சேர்ந்து துர்கா தேவியை அடித்துக் கொன்றதாகவும், அவர்களைக் கைதுசெய்யவும் வலியுறுத்தி, இறந்த பெண்ணின் உறவினர்கள் நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனை முன்பு சாலை மறியலில் ஈடுபட்டனர்.

மேலும், குற்றவாளிகளைக் கைதுசெய்யும் வரை தாங்கள் உடலைப் பெறப்போவதில்லை என்று தொடர்ந்து ஆவேச குரல் எழுப்பினர். இதையடுத்து பட்டுக்கோட்டை காவல் ஆய்வாளர் சம்பவ இடத்திற்கு வந்து நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததன் பேரில் சாலை மறியல் விலக்கிக் கொள்ளப்பட்டது.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.