வெளிநாட்டு நிறுவனத்திடம் நிதி பெற்று மோசடி; மத்திய குற்றபிரிவு போலீசார் நடவடிக்கை

author img

By

Published : Sep 21, 2022, 7:36 AM IST

வெளிநாட்டு நிறுவனத்திடம் நிதி பெற்று சென்னை நிறுவனம் மோசடி; மத்திய குற்றபிரிவு போலீசார் நடவடிக்கை

வெளிநாட்டு நிறுவனங்களிடமிருந்து முதலீடுகளைப் பெற்று மோசடி செய்த விவகாரத்தில் சென்னையைச் சேர்ந்த தனியார் நிறுவன இயக்குனர்கள் இரண்டு பேரை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்துள்ளனர்.

சென்னை: போர்ச்சுகல் நாட்டை தலைமையிடமாக கொண்டு செயல்படும் நிறுவனம் 'பெட்டிக்கோ கமர்ஷியோ’ என்ற நிறுவனம். இந்த நிறுவனம் உலகம் முழுவதும் பல்வேறு தொழில்களில் முதலீடுகளை செய்து வருகிறது. அதன் அடிப்படையில் சென்னையைச் சேர்ந்த கலால் குழுமத்திற்கு சொந்தமான நிறுவனமானது முதலீடுகளுக்காக பெட்டிக்கோ கமர்ஷியோ என்ற நிறுவனத்தை அணுகியுள்ளது. பெட்டிக்கோ கமர்சியோ என்ற நிறுவனம் ராமாபுரம் டிஎல்எப் பகுதியில் கிளை செயல்பட்டு வருகிறது.

இந்நிலையில் கடந்த ஆண்டு கலால் குழும நிர்வாகிகள் மீது நம்பிக்கை வைத்து, கனிமவள வர்த்தக வியாபாரத்திற்காக சுமார் 114 கோடி ரூபாய் அளவில் முதலீடுகளை செய்துள்ளது. இந்த நிறுவனத்துடன் முதலீடு செய்வதற்கு சில நிபந்தனைகளையும் விதித்திருந்தது. அதன்படி 70 சதவீத பங்கு தங்களுக்கும் 30 சதவீத பங்கு கலால் குழுமத்திற்கும் என ஒப்பந்தங்கள் செய்து கொண்டுள்ளன. போர்ச்சுக்கல் நிறுவனம் சார்பாக மூன்று இயக்குனர்களும் கலால் குழுமம் சார்பாக இரண்டு இயக்குனர்களும் இணைந்து நடத்தலாம் என்றும் ஒப்பந்தம் போடப்பட்டது.

ஆனால் ஒப்பந்தங்களை மீறி கலால் குழும நிறுவனம் தொடர்ந்து செயல்பட்டு வந்துள்ளதாக போர்ச்சுக்கல் நிறுவனம் குற்றம் சாட்டியது. இருப்பினும் கனிமவள வர்த்தகத்திற்காக கனரக வாகனங்கள், உபகரணங்கள் வாங்கப்பட்டதாகவும், இந்த தொழில் தொடர்பாக சத்தீஸ்கர் மாநிலத்தில் தனியார் நிறுவனத்துடன் ஒப்பந்தங்கள் போடப்பட்டுள்ளதாகவும் ஆவணங்களை போர்ச்சுக்கல் நிறுவனத்திற்கு கலால் குழுமம் நிறுவன நிர்வாகிகள் காண்பித்துள்ளனர்.

வெளிநாட்டு நிறுவனத்திடம் நிதி பெற்று மோசடி செய்த சென்னை நிறுவன இயக்குனர்கள்
வெளிநாட்டு நிறுவனத்திடம் நிதி பெற்று மோசடி செய்த சென்னை நிறுவன இயக்குனர்கள்

இந்நிலையில் போர்ச்சுக்கல் நிறுவனமானது கலால் குழும நிறுவன இயக்குனர்கள் கொடுத்த ஆவணங்களை சரி பார்த்ததில் அதிர்ச்சி அடைந்துள்ளனர். தங்களிடம் சுமார் 114 கோடி ரூபாய் பணத்தை கனிமவள வர்த்தகத்திற்காக முதலீடு செய்ததாக போலி ஆவணம் மூலம் கணக்கு காட்டியது தெரியவந்தது. மேலும் கொடுக்கப்பட்ட பணத்தை வேறு கணக்கிற்கு மாற்றி பல முதலீடுகளை மேற்கொண்டதும் தெரிய வந்துள்ளது.

அது மட்டுமல்லாது தொழில் வளர்ச்சிக்காக கனரக வாகனங்கள் மற்றும் உபகரணங்கள் வாங்கியதாக போலி ஆவணங்கள் காட்டியும், இல்லாத ஒரு நிறுவனத்தில் தொழில் ஒப்பந்தம் மேற்கொண்டது போன்று மோசடி செய்ததும் பெட்டிக்கோ கமர்ஷியோ நிறுவனத்திற்கு தெரிய வந்தது.

இதனையடுத்து அந்த நிறுவனத்தின் இயக்குனர் கௌரவ் சக்ரா சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் கலால் குழும நிறுவனம் செய்த மோசடி தொடர்பாக புகார் அளித்துள்ளார். அதன் அடிப்படையில் சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் முதற்கட்ட விசாரணை மேற்கொண்டதில் கலால் குழும நிறுவனம் மோசடி செய்தது உறுதியானது.

இதனையடுத்து கலால் நிறுவனம் மற்றும் அதன் இயக்குனர்கள் நிர்வாகிகள் என ஆறு பேர் மீது மத்திய குற்றப்பிரிவு மோசடி வழக்கு பதிவு செய்தது. குறிப்பாக அதன் இயக்குனர்கள் மற்றும் நிர்வாகிகளான சரவணன் பழனியப்பன், விஜய் ஆனந்த், அரவிந்த் ராஜ், விஜயகுமார், லட்சுமி முத்துராமன், பிரீத்தா விஜய் ஆனந்த் ஆகியோர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.

இந்நிலையில் மோசடிக்கு முக்கிய காரணமான கலால் குழும நிறுவனத்தின் இயக்குனர்கள் சரவணன் பழனியப்பன் மற்றும் விஜய் ஆனந்த் ஆகியோரை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.

அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் மேலும் 200 கோடி ரூபாய் அளவில் சில வெளிநாட்டு நிறுவனங்களிடமிருந்து முதலீடுகளைப் பெற்று மோசடி செய்துள்ளது தெரியவந்துள்ளது. கைது செய்யப்பட்டவர்களை காவலில் எடுத்து விசாரிக்கவும் வழக்கில் சம்பந்தப்பட்ட மீதமுள்ள நபர்களை கைது செய்யவும் போலீசார் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் படிங்க: பிரபல ஆம்னி சொகுசுப்பேருந்தில் குட்கா கடத்தல்; சினிமா பாணியில் விரட்டிப்பிடித்த நெல்லை போலீசார்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.