விபத்து வழக்கு: தலைமைக் காவலரை தாக்கும் சிசிடிவி காட்சி!

author img

By

Published : Sep 19, 2021, 6:34 AM IST

விபத்து வழக்கு

அரசு மருத்துவமனையில் விபத்து வழக்கு குறித்து விசாரிக்கச் சென்ற தலைமைக் காவலர் மீது தாக்குதல் நடத்துவது தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளது.

கோவை: மேட்டுப்பாளையம் காவல் நிலையத்தில் தலைமைக் காவலராக பணியாற்றுபவர் சுந்தரமூர்த்தி. இவர் வழக்கம்போல் நேற்று (செப்.17) இரவு பணியில் இருந்தார்.

அப்போது மேட்டுப்பாளையம் - அன்னூர் செல்லும் சாலையில் நால்ரோடு பகுதியில் நடந்து சென்ற தேவராஜ், ஸ்ரீதேவி ஆகியோர் மீது இருசக்கர வாகனம் ஒன்று மோதியது. இதில் காயமடைந்த இருவரும் மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.

காவலரை தாக்குவது தொடர்பான சிசிடிவி காணொலி

தாக்குதலை தடுத்த காவலருக்கு அடி, உதை

இது குறித்து விசாரணை மேற்கொள்ள தலைமைக் காவலர் சுந்தரமூர்த்தி அரசு மருத்துவமனைக்கு சென்றுள்ளார். விபத்தை ஏற்படுத்திய மோகன் ஜோன்ஸ் என்பவரும், மருத்துவமனையில் இருந்துள்ளார். அவரிடம் தலைமைக் காவலர் சுந்தரமூர்த்தி விபத்து குறித்து விசாரணை மேற்கொண்டிருந்தார்.

அப்போது விபத்தில் காயமடைந்த தேவராஜின் மகன், தமிழ் புலிகள் கட்சியின் முன்னாள் நகர செயலாளர் அனித் குமார் உள்ளிட்டோர் அடங்கிய கும்பல் மருத்துவமனைக்கு வந்துள்ளது. பின்னர் விபத்தை ஏற்படுத்திய மோகன் ஜோன்ஸை, அந்த கும்பல் கடுமையாக தாக்கியுள்ளனர்.

அதனைத் தடுக்க சென்ற தலைமைக் காவலரையும், அந்த கும்பல் ஆபாச வார்த்தைகளால் பேசி கடுமையாக தாக்கியுள்ளது. இதனையடுத்து தன்னை தாக்கியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க, மேட்டுப்பாளையம் காவல் நிலையத்தில் தலைமைக் காவலர் சுந்தரமூர்த்தி புகாரளித்தார்.

புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவலர்கள், தாக்குதலில் ஈடுபட்ட நபர்களை தேடி வருகின்றனர். தற்போது இது தொடர்பான சிசிடிவி காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகியுள்ளது.

இதையும் படிங்க: சாரைப் பாம்பு கடித்த பயங்கரவாதி மருத்துவமனையில் அனுமதி

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.