துப்பாக்கிகளைப் பயன்படுத்த தயங்காதீர்! - காவலர்களுக்கு டிஜிபி 'அழுத்தமான' அறிவுறுத்தல்

author img

By

Published : Nov 23, 2021, 1:51 PM IST

Updated : Nov 23, 2021, 2:09 PM IST

DGP Sylendra Babu

குற்றவாளிகள் காவல் துறையினர் மீது கொலை வெறித் தாக்குதல் நடத்தும்போது ஆயுத பிரயோகம் செய்யலாம் என்பது சட்டம். சட்டத்தை மதித்து துப்பாக்கிகளைப் பயன்படுத்த தயங்கக் கூடாது என காவலர்களுக்கு காவல் துறைத் தலைவர் சைலேந்திரபாபு அறிவுறுத்தியுள்ளார்.

திருச்சி: திருவெறும்பூர் அருகே உள்ள சோழமாநகர் பகுதியைச் சேர்ந்தவர் பூமிநாதன். இவர் நவல்பட்டு காவல் நிலையத்தில் காவல் சிறப்பு உதவி ஆய்வாளராகப் பணிபுரிந்துவந்தார். இந்நிலையில் கடந்த 20ஆம் தேதி ரோந்துப் பணியில் இருந்தபொழுது அதிகாலையில் ஆடு திருடிச் சென்றவர்களை விரட்டிச் சென்று கீரனூர் அருகே உள்ள பள்ளத்துப்பட்டி அருகே பிடித்துள்ளார்.

அப்போது ஆடு திருடியவர்கள் பூமிநாதனை கொலை செய்தனர். இச்சம்பவம் குறித்து கீரனூர் காவல் துறையினர் வழக்குப்பதிந்து மணிகண்டன் உள்பட மூன்று பேரை கைதுசெய்து விசாரணை நடத்திவருகின்றனர்.

டிஜிபி சைலேந்திரபாபு நேரில் ஆறுதல்

DGP Sylendra Babu

இந்நிலையில் தமிழ்நாடு காவல் துறைத் தலைவர் சைலேந்திரபாபு (DGP Sylendra Babu) திருவெறும்பூர் அருகே உள்ள சோழமாநகரில் உள்ள பூமிநாதன் வீட்டிற்கு நேரில் சென்று பூமிநாதன் உருவப்படத்திற்கு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தி, அவரது குடும்பத்தினரைச் சந்தித்து ஆறுதல் தெரிவித்தார்.

பின்னர் செய்தியாளர் சந்திப்பின்போது சைலேந்திரபாபு கூறியதாவது, "பூமிநாதன் சிறப்பு உதவி ஆய்வாளராக இருந்து வீரமரணம் அடைந்துள்ளார். அவர் தமிழ்நாடு முதலமைச்சர் பதக்கம் பெற்றுள்ளார். தீவிரவாத கமாண்டோ பயிற்சி பெற்று, கடமை உணர்வோடு வீரத்துடனும் விவேகத்துடன் செயல்பட்டுள்ளார்.

15 கிலோமீட்டர் தூரம் ஆடு திருடர்களை விரட்டிச் சென்றதோடு அவர்களைப் பிடித்து அவர்களிடமிருந்து ஆயுதங்களைப் பறிமுதல்செய்து பாதுகாப்புடன் நடந்துகொண்டார். மேலும் மூவரின் உறவினர்களுக்கும் அவர்களைத் தொடர்புகொண்டு பேசியதோடு முக்கியக் குற்றவாளியான மணிகண்டன் தாயிடமும் பேசி காவல் நிலையம் வருமாறு கூறி உள்ளார்.

உயிருக்குப் பாதுகாப்பு இல்லாத துறை

மேலும் சட்டப்படிதான் அவர் நடந்துள்ளார். சிறுவர்கள் பேசிக்கொண்டிருந்தபோது முக்கியக் குற்றவாளி தாக்குதல் நடத்துவார் என்று அவர் எதிர்பார்க்கவில்லை. எதிர்பாராதவிதமாக தாக்குதல் நடத்தப்பட்டு பூமிநாதன் வீர மரணம் அடைந்தார். கடமை மிக்க, வீரமிக்க, விவேகமிக்க தமிழ்நாடு காவல் துறை அலுவலராக என்றும் சிறுவர்களிடம் கவனத்துடன் அன்போடு நடந்துகொண்டுள்ளார்.

பூமிநாதனை இழந்துவாடும் அவரது குடும்பத்தாருக்கு தமிழ்நாடு முதலமைச்சர் நிவாரண நிதியிலிருந்து ஒரு கோடி ரூபாய் அறிவித்துள்ளார். மேலும், அவரது மகனுக்கு வாரிசு வேலை அடிப்படையில் வேலை வழங்குவதாக அறிவித்து உள்ளதற்கு தமிழ்நாடு முதலமைச்சருக்கு தமிழ்நாடு காவல் துறை சார்பில் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொண்டார்.

மேலும், காவல் துறை மீது காவல் துறை ஆரம்பிக்கப்பட்ட 1856ஆம் ஆண்டு முதலே தாக்குதல் நடத்தப்பட்டுவருகிறது. இந்தத் துறை சவால்மிக்கது. உயிருக்குப் பாதுகாப்பு இல்லாத துறை. அதை எப்படி எதிர்கொள்கிறோம் என்பதுதான் முக்கியம். அப்படித்தான் பூமிநாதன் எதிர்கொண்டு உயிர் தியாகம் செய்து தனது கடமையை நிறைவேற்றி உள்ளார்.

துப்பாக்கிகளைப் பயன்படுத்த தயங்கக் கூடாது

இது போன்று நடக்காமல் இருப்பதற்கு காவல் துறைக்கு ஆயுதப் பயிற்சி, கைத்துப்பாக்கிப் பயிற்சிகள் என அலுவலர்கள் மட்டத்தில் இரண்டு மாதங்களாகக் கொடுக்கப்பட்டுவருகின்றன. அவர்களுக்கு ஆறு தோட்டாக்கள் வழங்கப்பட வேண்டும்.

குற்றவாளிகள் காவல் துறையினர் மீது கொலைவெறித் தாக்குதல் நடத்தும்போது ஆயுத பிரயோகம் செய்யலாம் என்பது சட்டம். சட்டத்தை மதித்து துப்பாக்கிகளைப் பயன்படுத்த தயங்கக் கூடாது. இவர் சிறப்பு உதவி ஆய்வாளர், சிறுவர்களிடம் அன்போடு பேசியுள்ளார். இந்த நிகழ்வு ஒரு அபூர்வமானது என்று கூறலாம்.

சிறுவர்களைச் சீர்திருத்துவதற்கு என 86 மையங்கள் உள்ளன. மேலும் 52 கிளப்புகளை ஆரம்பிப்பதற்கு தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். மாவட்ட அளவிலும் பள்ளிகள் உள்ளன. இதில் காவல் துறை விளையாட்டு விழா நடத்துவது, குற்றத்திலிருந்து வெளிக்கொண்டுவருவது உள்ளிட்டவை நடத்தப்படுகின்றன.

ஆடு திருட்டை ஒட்டுமொத்தமாக ஒழிக்க நடவடிக்கை

சம்பவம் நடந்தபோது மணிகண்டன் மது அருந்தியுள்ளான். மேலும் சம்பவம் நடந்தபோது லக்னோவில் இருந்தேன். இருந்தாலும் உடனுக்குடன் திருச்சி ஆணையர், ஐஜி, டிஐஜி ஆகியோர் உரிய அனைத்துத் தகவல்களையும் வழங்கினார்கள். 100 விழுக்காடு மூன்று பேர்தான் குற்றவாளிகள். இவர்கள் ஆதாரத்தின் அடிப்படையில் கைதுசெய்யப்பட்டுள்ளார்கள். மேலும் காணொலி ஆதாரம் உள்ளது. சந்தேகப்பட வேண்டிய அவசியம் கிடையாது.

இந்தப் பகுதியில் ஆடு திருட்டு பெரிய அளவில் நடந்துவருகிறது. தற்போது நடப்பது மிக குறைவு. ஒரு மணி நேரத்திற்கு ஒரு ஆடு திருட்டு நடக்கிறது. ஆடு திருட்டு சிறியது என நினைக்காமல் அதை இழந்தவர்கள் கஷ்டப்படுவார்கள் என்று கடமை உணர்வுடன் பூமிநாதன் செயல்பட்டுள்ளார். ஆடுகள் திருட்டை ஒட்டுமொத்தமாக ஒழிப்பதற்கு உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டுவருகிறது.

ஆடு திருடர்களிடமிருந்து ஆடுகளை வாங்குபவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும்" எனத் தெரிவித்தார். இந்நிகழ்வில் மத்திய மண்டல ஐஜி பாலகிருஷ்ணன், திருச்சி மாநகர காவல் ஆணையர் கார்த்திகேயன், டிஐஜி சரவண சுந்தர், திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுஜித் குமார் ஆகியோர் பூமிநாதன் உருவப்படத்திற்கு மலர் வளையம் வைத்து மரியாதை செய்தனர்.

இதையும் படிங்க: Cylinder Blast: வெடித்துச் சிதறிய சிலிண்டர் - ஒருவர் மரணம், 14 பேர் படுகாயம்

Last Updated :Nov 23, 2021, 2:09 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.