'நீட் தேர்வுக்கு எதிராக மாணவர்கள் போராட வேண்டும்'

author img

By

Published : Sep 17, 2021, 1:26 PM IST

Updated : Sep 17, 2021, 4:54 PM IST

முத்தரசன் பேட்டி

மாணவர்கள் நீட் தேர்வுக்கு எதிராக தற்கொலை செய்துகொள்ளாமல், போராடுவது நல்லது; வரவேற்கத்தக்கது என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன் தெரிவித்துள்ளார்.

திருச்சி: மணப்பாறையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்தத் தலைவர் தட்சிணாமூர்த்தி உருவப்பட திறப்பு விழாவும், எஃப். கீழையூரில் அலுவலகத் திறப்பு விழாவும் நேற்று (செப்.16) நடைபெற்றது. இதில், கலந்துகொள்வதற்காக மணப்பாறை வந்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் இரா. முத்தரசன் நிகழ்ச்சியில் பங்கேற்கும் முன்னதாக செய்தியாளரைச் சந்தித்தார்.

அப்போது, "மோடி தலைமையிலான கூட்டம் நடைபெற்றால் ஏதோ ஒரு பொதுத் துறையை விற்க நடைபெறுகின்ற கூட்டமாகத்தான் இருக்கின்றது.

கறுப்புக் கொடி போராட்டம்

சமூக நீதிக்கான அரசாக திமுக அரசு திகழ்வது, பேரவைக் கூட்டம் மூலம் நிரூபிக்கப்பட்டுள்ளது. பொதுத் துறை நிறுவனங்களைத் தனியார்மயமாக்கக் கூடாது, திருத்தப்பட்ட வேளாண் சட்டம் உள்ளிட்ட 19 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி, வரும் 20ஆம் தேதி தமிழ்நாடு முழுவதும் வீட்டின் முன் கறுப்புக் கொடி போராட்டம் நடைபெறவுள்ளது.

மேலும், வரும் 27ஆம் தேதி நடைபெறவுள்ள கடையடைப்பு, வேலைநிறுத்தப் போராட்டத்திற்கு அனைவரும் ஒத்துழைப்பு தர வேண்டும். ஆளுநர்கள் நியமனம் என்பது, பாஜக கூட்டணி அல்லாத கட்சிகள் ஆட்சி செய்யும் மாநிலங்களில் குடைச்சலை கொடுக்கும் நோக்கிலேயே நடைபெறுகின்றது.

ஆளுநர் நியமனம்

தமிழ்நாட்டின் ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ள ரவி நல்லவர் என எந்த ஒரு ஊடகத்திலும் வந்ததில்லை என்பதால் தோழமைக் கட்சிகளும் நாங்களும் ஆளுநர் நியமனத்தை எதிர்க்கிறோம்.

பாஜக தோல்வியை நோக்கிச் சென்றுகொண்டிருப்பதால் தேர்தலில் மக்களால் புறக்கணிக்கப்பட்டவர்களை ஆளுநர்களாகவும், அமைச்சர்களாகவும் நியமிக்கிறார்கள்” என முத்தரசன் தெரிவித்தார்.

இதையும் படிங்க: முறைகேடுகளில் ஈடுபட்ட முன்னாள் அமைச்சர், அலுவலர் மீது நடவடிக்கை - சிபிஎம் கோரிக்கை

Last Updated :Sep 17, 2021, 4:54 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.