திருப்பூரில் தாய், மகன்கள் கொலை: வழக்கில் தேடப்பட்டவர் கிணற்றில் சடலமாக மீட்பு

author img

By

Published : Jun 1, 2022, 7:50 PM IST

வழக்கில் தேடப்பட்டவர் கிணற்றில் சடலமாக மீட்பு

திருப்பூரில் தாய், மகன்கள் கொலை செய்யப்பட்ட வழக்கில் தேடப்பட்டவர் கிணற்றில் சடலமாக மீட்கப்பட்டார்.

திருப்பூர்: சேடர்பாளையம் பகுதியில் வசித்து வந்தவர் முத்துமாரி (35) (சொந்த ஊர் திருவாரூர்). இவருக்கு தர்னீஷ் (9) நித்திஷ் (4) என்ற இரு மகன்கள் உள்ளனர். கணவருடன் ஏற்பட்ட தகராறு காரணமாக முத்துமாரி தனியாக வீடு எடுத்து மகன்களுடன் வசித்து வந்துள்ளார்.

அப்போது அப்பகுதியில் வசித்து வந்த குஜராத் மாநிலம் போர்பந்தர் பகுதியைச் சேர்ந்த கோபால் (எ) கார்த்திக் (50) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டு சேர்ந்து வசித்து வந்ததாக தெரிகிறது. கடந்த 23ஆம் தேதி முத்துமாரியின் வீடு நீண்ட நேரமாக திறக்கப்படாததால் சந்தேகம் அடைந்த அக்கம் பக்கத்தினர் வீட்டின் கதவை திறந்து பார்த்துள்ளனர். அப்பொழுது முத்துமாரி மற்றும் அவரது இரண்டு மகன்கள் ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்துள்ளனர்.

வழக்கில் தேடப்பட்டவர் கிணற்றில் சடலமாக மீட்பு

இதுகுறித்து திருமுருகன்பூண்டி காவல்துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்குச் சென்ற காவல்துறையினர் மூன்று உடல்களையும் கைப்பற்றி திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு உடற்கூராய்விற்காக அனுப்பி வைத்தனர். சம்பவம் நடந்த இடத்தில் கைரேகை நிபுணர்கள், மோப்ப நாய் கொண்டு ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

மேலும் மாநகர போலீஸ் கமிஷனர் ஏ.ஜி.பாபு உத்தரவின்பேரில் 8 தனிப்படைகள் அமைக்கப்பட்டு குற்றவாளியை தேடும் பணி மேற்கொள்ளப்பட்டது. சம்பவம் நடந்த நாள் முதல் கோபால் அப்பகுதியில் இல்லாததால் அவர் இந்த கொலையை செய்திருக்கலாம் என எண்ணப்பட்டு, அவரை தேடும் பணி மேற்கொள்ளப்பட்டது.

இந்நிலையில் இன்று காங்கேயம் படியூர் அருகில் உள்ள தண்ணீர் இல்லாத கிணற்றில் கோபால் சைக்கிளுடன் இறந்த நிலையில் கிடந்துள்ளார். இதுகுறித்து காங்கேயம் காவல்துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் கோபாலின் உடலை மீட்டு திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு உடற்கூராய்விற்காக அனுப்பி வைத்தனர்.

இச்சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். காவல்துறையினர் தேடுவதை கோபால் அறிந்து தற்கொலை செய்து கொண்டாரா அல்லது இரவு நேரத்தில் கிணறு இருப்பது தெரியாமல் சைக்கிளில் வந்து விழுந்து இறந்தாரா? என பல்வேறு கோணங்களில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் படிங்க: சொத்து அபகரிப்பு: துணை நடிகை மீது வயதான தம்பதி புகார்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.