தமிழ்நாட்டிற்கு போதை பொருள்களை விற்பனை செய்த முக்கிய நபர் கைது...

author img

By

Published : Sep 29, 2022, 1:00 PM IST

Etv Bharat

தமிழ்நாட்டிற்கு போதை பொருள் விற்பனை செய்து கொண்டிருந்த முக்கிய நபரை போலீசார் கைது செய்தனர்.

தூத்துக்குடி: தென்மாவட்டங்களில் கஞ்சா, புகையிலை போன்ற போதைப்பொருள் கடத்தல் மற்றும் விற்பனையை அடியோடு ஒழிப்பதற்கு, தென்மண்டல ஐ.ஜி அஸ்ரா கார்க் ஆலோசனையில் தீவிர நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இது தொடர்பாக, பலரை காவல்துறை கைது செய்து வருகின்றனர்.

குட்கா விற்பனைக்கு மூளையாக செயல்பட்டு வந்த மொத்த விற்பனையாளர்கள் யார் எனறு கண்டுபிடிக்கும் நடவடிக்கையில் காவல்துறை இறங்கியுள்ளது. இதனையடுத்து, தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் எல்.பாலாஜி சரவணன் மேற்பார்வையில், தூத்துக்குடி ஊரக காவல் உதவி கண்காணிப்பாளர் ஜி. சந்தீஸ் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், தூத்துக்குடி முறப்பநாடு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் குட்கா கடத்தலில் கைது செய்யப்பட்ட வாஷிம் பாஷா, செல்வா, காளிமுத்து, அருள்ராஜ், ஜேசுபாலன் ஆகியோரிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். அவர்கள் பயன்படுத்திய செல்போன்களை வைத்து, அவர்கள் யார், யாருடன் தொடர்பு கொண்டுள்ளனர் என பல்வேறு கோணங்களில் விசாரணை செய்தனர்.

விசாரணையில், கர்நாடக மாநிலம் பெங்களூர் பின்னிபேட்டை சேர்ந்த வேல்சாமி என்பவரின் மகன் சாமுவேல் (50) சிக்கியுள்ளார். இவர், கம்பெனிகளே இல்லாமல் போலியாக கம்பெனிகள் இருப்பதாக சாம் எண்டர்பிரைசஸ், லேண்ட் ஸ்டார் மற்றும் செல்வி எண்டர்பிரைசஸ் ஆகிய கம்பெனிகளின் பெயரில் வங்கிகளில் கணக்குகளை தொடங்கியுள்ளார்.

அவற்றின் மூலம் காய், கனி விற்பனை மூலம் கிடைத்த பணம் என குறிப்பிட்டு, குட்கா விற்பனை மூலம் பெற்ற பணத்தை தனது வங்கி கணக்குகளில் வரவு வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. தென் மாவட்டங்களில் பல இடங்களுக்கு தனது வேலையாட்கள் மூலம் பெருமளவில் குட்கா கடத்தல் மற்றும் விற்பனையில் ஈடுபட்டதும் கண்டுபிடிக்கப்பட்டது.

தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் எல்.பாலாஜி

இதனையடுத்து, அவரை கைது செய்ய தனிப்படையினர் பெங்களூரு சென்றனர். அங்கு அவரது செல்போன் எண் மற்றும் அவரது கார் எண் ஆகியவற்றை அடிப்படையாக வைத்து பல்வேறு இடங்களில் தேடி வந்தனர்.

இந்நிலையில், கர்நாடகா போலீசாரின் உதவியோடு அவரை கைது செய்து தூத்துக்குடி அழைத்து வந்து விசாரணை செய்தனர். விசாரணையில், தென் மாவட்டங்களில் பல்வேறு இடங்களில் தனது வேலையாட்கள் மூலமாகவும், போதை பொருட்கள் விற்பனை செய்ததை கண்டுபிடித்தனர்.

முறப்பநாடு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் ரூபாய் 3,70,000/- மதிப்புள்ள 950 கிலோ குட்கா மற்றும் கார், லாரி ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.

தூத்துக்குடி மதுவிலக்கு பிரிவு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் ஒரு கண்டெய்னர் லாரியில் சட்ட விரோதமாக மதுபாட்டில் மற்றும் ரூபாய் 16 லட்சம் பணம் பறிமுதல் செய்யப்பட்ட வழக்கு, தென் மாவட்டங்களில் 15, 20 நாட்களுக்கு ஒருமுறை பெருமளவு குட்கா விற்பனை செய்த பல வழக்குகளிலும் இவர் மூளையாக செயல்பட்டு கோடி கணக்கில் பணம் சம்பாதித்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மேலும், பெங்களூருவில் 10 வங்கிகளில் உள்ள இவரது கணக்குகளில் 16 லட்ச ரூபாய் முடக்கப்பட்டுள்ளது.

மேலும், இவர் போலியாக உருவாக்கப்பட்ட கம்பெனிகள் மூலம் காய், கனி வியாபாரம் செய்தது போல ஒரு கோடி ரூபாய்க்கு மேலாக ஜி.எஸ்.டி (GST Tax) வரி செலுத்தியிருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அவர் மீது உரிய நடவடிக்கை எடுப்பதற்கு மத்திய அரசு மற்றும் வருமான வரித்துறை ஆகியவற்றிற்கு அறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: மாணவர்கள் பேருந்து படிக்கட்டில் பயணம் செய்வதை தடுக்க வாட்ஸ் அப் குரூப்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.