தமிழறிஞர் நெல்லை கண்ணன் காலமானார்

author img

By

Published : Aug 18, 2022, 2:27 PM IST

Updated : Aug 18, 2022, 3:34 PM IST

Etv Bharatதமிழறிஞர் நெல்லை கண்ணன் காலமானார்

இலக்கிய பேச்சாளரும், பிரபல பட்டிமன்ற நடுவருமான நெல்லை கண்ணன் உடல் நலக்குறைவால் காலமானார். அவருக்கு வயது 77.

திருநெல்வேலி: தமிழ் இலக்கிய பேச்சாளரான நெல்லை கண்ணன் இன்று (ஆகஸ்ட் 18) திருநெல்வேலி டவுன் அம்மன் சன்னதி தெருவில் உள்ள அவரது வீட்டில் வயது முதிர்வு காரணமாக காலமானார். அவருக்கு வயது 77. அவரது உடல் பொது மக்கள் அஞ்சலிக்காக அவரது வீட்டில் வைக்கப்பட்டுள்ளது.

கடந்த ஒரு வாரமாக அவர் சாப்பிட முடியாத அளவுக்கு உடல்நலம் பாதிக்கப்பட்ட நிலையில் இருந்ததாக உறவினர்கள் தெரிவித்தனர். நெல்லை கண்ணன் அவரது தமிழ் இலக்கிய பேச்சாற்றலால் ‘தமிழ்க்கடல்; என அழைக்கப்பட்டார். தமிழ் மொழி மீதும், இலக்கியம் மீதும் அதிக ஆர்வம் கொண்டவர். சிறந்த இலக்கியவாதியாக அறியப்பட்டவர் மற்றும் பட்டிமன்ற நடுவர், பேச்சாளர், இலக்கியவாதி என பன்முகத் திறமை கொண்டவர்.

தமிழறிஞர் நெல்லை கண்ணன் காலமானார்

காமராஜர் போன்ற தலைவர்களுடன் நெருக்கமாகப் பழக்கம் வைத்திருந்த நெல்லை கண்ணன் ஆரம்பத்தில் காங்கிரஸ் கட்சியின் தீவிர பேச்சாளராக இருந்தார். குறிப்பாக காமராஜர் மீது அதிக பற்று கொண்டவர். பெரும்பாலான மேடைகளில் காமராஜரைப் பற்றி பேசுவார். 1996ஆம் ஆண்டு மறைந்த திமுக தலைவர் கருணாநிதியை எதிர்த்து சட்டப்பேரவைத்தேர்தலில் போட்டியிட்டார். நெல்லை வழக்காடு மொழிக்கேற்ப தனது பேச்சில் ’அவன், இவன்’ என சாதாரணமாக தான் பேசுவார். எனவே, இவரது பேச்சு அனைவரும் ரசிக்கும்படி இருந்தது.

டிவி நிகழ்ச்சிகளிலும் சிறந்த பேச்சாளர்: அதிகமான டிவி நிகழ்ச்சிகளிலும் நெல்லை கண்ணன் நடுவராக பங்கேற்றுள்ளார். கேலி, கிண்டலுடன் நெல்லை தமிழில் பேசி, அனைவரின் மனதிலும் நீங்கா இடத்தைப் பிடித்துள்ளார். மேலும் நெல்லை கண்ணனுக்கு அனைத்து தரப்பிலும் ரசிகர்கள் உள்ளனர். இவரது இறப்புச்செய்தியை அடுத்து பலர் சமூக வலைதளங்களில் அவருக்கு இரங்கல் செய்தியைத் தெரிவித்து வருகின்றனர்.

மேலும் பொது மேடையில் சர்ச்சையாக பேசுவதையும் வாடிக்கையாக வைத்திருந்தார். குறிப்பாக கடந்த குடியுரிமை திருத்தச்சட்டம் குறித்து நெல்லையில் நடந்த கூட்டத்தில் பேசும்போது பிரதமர் மோடி, அமித்ஷா உள்ளிட்டோரை கடுமையாக விமர்சித்த காரணத்தால் 2020 ஜனவரி மாதம் கைது செய்யப்பட்டார்.

அதிமுகவிலும் தனது அரசியல் பயணத்தைத் தொடர்ந்திருந்தாலும் சமீபகாலமாக திமுகவுக்கு ஆதரவாகவே பொது மேடைகளில் பேசி வந்தார். சமீபத்தில், 'முதலமைச்சரை சந்திக்க அனுமதிக்கவில்லை; கிழவன் நொந்து போயுள்ளேன்; இறந்து போகலாம் என நினைக்கிறேன்' என்று தனது ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவு வெளியிட்டு பரபரப்பு ஏற்படுத்தியிருந்தார்.

இதையும் படிங்க:ஆவடி சிறுமியின் சிகிச்சைக்கு முதலமைச்சர் உறுதுணை இருப்பார்...அமைச்சர் நாசர் உறுதி

Last Updated :Aug 18, 2022, 3:34 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.