குமரி சட்டக்கல்லூரி மாணவர் படுகொலை: நெல்லையில் உடல் தோண்டி எடுக்கப்பட்டதால் பரபரப்பு

author img

By

Published : Mar 9, 2022, 8:35 PM IST

உடல் தோண்டி எடுக்கப்பட்ட காணொலி

கன்னியாகுமரி சட்டக்கல்லூரி மாணவர் முன்விரோதம் காரணமாகப் படுகொலை செய்யப்பட்டு நெல்லை அருகே புதைக்கப்பட்ட நிலையில் உடல் ராதாபுரம் தாசில்தார் முன்னிலையில் தோண்டி எடுக்கப்பட்டுள்ளது.

திருநெல்வேலி: கன்னியாகுமரி மாவட்டம், வெட்டூர்ணிமடம் சீயோன் நகரைச் சேர்ந்தவர், அதிமுக பிரமுகர் செல்லப்பன். இவர் அயன்கோடு ஊராட்சி மன்றத் தலைவராக உள்ளார். இவரது மகன் லிபின் ராஜா (23). டிப்ளமோ முடித்துவிட்டு, சட்டக் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு படித்து வந்தார்.

இவர் கடந்த 4ஆம் தேதி இரவு வீட்டை விட்டு வெளியே சென்றவர், மீண்டும் வீட்டுக்கு வரவில்லை. இதுகுறித்து அவரது தந்தை செல்லப்பன் நாகர்கோவில் நேசமணி நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

உடல் தோண்டி எடுக்கப்பட்ட காணொலி

செல்போனை கொண்டு விசாரணை

அதன்பேரில் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். முதற்கட்ட விசாரணையில் லிபின் ராஜாவின் செல்போனைக் கொண்டு அவர் யாருடன் தொடர்பில் இருந்தார் என்பது குறித்து விசாரணை மேற்கொண்டனர்.

அப்போது அவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த ஒரு சிலருக்கும் ஏற்பட்ட முன்விரோதம் காரணமாக கொலை செய்யப்பட்டிருக்கலாம் என சந்தேகப்பட்டு விசாரணையை முடுக்கி விட்டனர்.

ஓடையில் புதைக்கப்பட்டிருந்த உடல்

விசாரணையில் லிபின் ராஜா கொலை செய்யப்பட்டு, நெல்லை மாவட்டம், பழவூர் நான்கு வழிச்சாலை அருகே ஒரு ஓடையில் புதைக்கப்பட்டிருப்பது தெரியவந்தது. இதனைத்தொடர்ந்து புதைக்கப்பட்ட இடத்தில் ராதாபுரம் தாசில்தார் யேசுராஜன் முன்னிலையில், திருநெல்வேலி மருத்துவக்கல்லூரி மருத்துவமனை மருத்துவர் பிரசன்னா தலைமையில் உடல் தோண்டி எடுக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து உடற்கூராய்வு நடைபெற்றுவரும் நிலையில், இச்சம்பவத்தில் தொடர்புடைய குற்றவாளிகளை காவல் துறையினர் தேடி வருகின்றனர்.

இதையும் படிங்க: பாஜக பிரமுகர் கல்யாணராமன் நீதிமன்றத்தை சட்டத்தை மதிக்கமாட்டாரா? - உயர் நீதிமன்றம் கேள்வி

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.