சேலத்தில் போக்குவரத்து காவலரைத் தாக்கிய முன்னாள் எம்.பியின் உறவினர் கைது!

author img

By

Published : Sep 15, 2022, 5:04 PM IST

Etv Bharat

சேலத்தில் போக்குவரத்து தலைமை காவலரைத் தாக்கிய முன்னாள் எம்.பி. வி.பன்னீர்செல்வத்தின் அண்ணன் மகனை போலீசார் கைது செய்தனர்.

சேலம் மாநகரப் போக்குவரத்து தலைமைக்காவலர் பாண்டியன் என்பவர் மீது தாக்குதல் நடத்திய முன்னாள் எம்.பி. வி.பன்னீர்செல்வம் அண்ணன் மகனை போலீசார் கைது செய்து விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.

போக்குவரத்து தலைமைக் காவலர் பாண்டியன், இன்று (செப்.15) காலை 10 மணியளவில் சேலம் பழைய பேருந்து நிலையம் அருகே உள்ள ஓரியண்டல் சக்தி தியேட்டர் பகுதியில் நின்று போக்குவரத்தை சீர் செய்து கொண்டிருந்தபோது பொன்னம்மாபேட்டையைச் சேர்ந்த கோகுல்ராஜ்(23) என்பவர் இரண்டு சக்கர வாகனத்தில் ஒரு வழிப்பாதையில் செல்போன் பேசியபடி வந்துள்ளார். இதைக் கண்டு கோகுல்ராஜை நிறுத்தி, 'ஏன் இப்படி செல்போன் பேசி வருகிறீர்கள்? பழைய பேருந்து நிலையம் பகுதி வாகனங்கள் அதிகம் வந்து செல்லும் இடம். விபத்து ஏதும் ஏற்பட்டுவிடாதா' எனக் கூறி கண்டித்துள்ளார்.

இதில் கோபமடைந்த கோகுல்ராஜ், போக்குவரத்து காவலர் பாண்டியனிடம் வாய்த்தகராறில் ஈடுபட்டார். பின்னர் கண்ணிமைக்கும் நேரத்தில் போக்குவரத்து காவலர் பாண்டியனை கையால் தாக்கினார். இதில் பாண்டியனுக்கு மூக்கு பகுதியில் காயம் ஏற்பட்டு ரத்தம் கொட்டியது.

இதைப்பார்த்த மற்ற காவலர்கள் ஓடி வந்து பாண்டியனை சேலம் அரசு மோகன்குமாரமங்கலம் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். ஏனைய காவல்துறையினர் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினர்.

இந்த தாக்குதல் சம்பவத்தையடுத்து போக்குவரத்து காவலர் பாண்டியனைத் தாக்கிய கோகுல்ராஜை, சேலம் நகர காவல்நிலைய போலீசார் கைது செய்து விசாரித்து வருகிறார்கள். கைது செய்யப்பட்டுள்ள கோகுல்ராஜ், சேலம் அதிமுக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் வி.பன்னீர்செல்வம் என்பவரின் அண்ணன் இளங்கோவன் மகன் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: கள்ளக்குறிச்சி பள்ளி சேதப்படுத்தியவர்களை சிசிடிவி மூலம் அடையாளம் கண்டு கைது...

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.