அதிமுகவுக்கு தலைமை தாங்குபவன் ஒரு தொண்டன் தான்...ஆர்பி உதயகுமார்

author img

By

Published : Sep 21, 2022, 12:01 PM IST

அதிமுகவுக்கு தலைமை தாங்குபவன் ஒரு தொண்டன் தான்

அதிமுகவிற்கு எப்போதும் ஒரு தொண்டன்தான் தலைமை தாங்குவான் என முன்னாள் அமைச்சர் ஆர்பி.உதயகுமார் தெரிவித்துள்ளார். இது திமுகவில் நடைபெறுமா என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

சேலம் தெற்கு சட்டமன்ற தொகுதியில், கொண்டலாம்பட்டி பகுதி கழகம் சார்பில் பேரறிஞர் அண்ணா பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது. பொதுக்கூட்டம் அப்பகுதிகழக செயலாளர் சண்முகம் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பங்கேற்று உரையாற்றினார்.

அப்போது அவர் பேசுகையில், "சேலத்தை உலக அளவில் பேசவைத்தவர் எடப்பாடி பழனிசாமி. முதலமைச்சர் செய்யவேண்டிய திட்டங்களை எதிர்க்கட்சி தலைவராக இருந்து எடப்பாடி பழனிசாமி செய்து வருகிறார். இன்றைய தினம்கூட டெல்லி சென்றவர் நடந்தாய்வாழி காவேரி, காவிரி-கோதாவரி திட்டத்தை நிறைவேற்ற கோரிக்கை விடுத்துள்ளார்.

அதிமுக ஆட்சியில் நீட் தேர்வு ரத்து செய்வதற்காக போராடினாலும், 7.5 சத உள் ஒதுக்கீடு மூலம் ஏழை அரசுப் பள்ளி மாணவர்கள் மருத்துவம் படிக்கும் வாய்ப்பை ஏற்படுத்தி தந்தவர் எடப்பாடி பழனிசாமி. சமூக நீதிக்காக திமுக ஒரு துரும்பைகூட கிள்ளிப் போடவில்லை. அனைத்து துறைகளிலும் 69 சதவீத இட ஒதுக்கீடு தந்தவர் ஜெயலலிதா. 2011 முன்பு திமுக ஆட்சியில் முதியோர் உதவித்தொகைக்கு 1200 கோடிதான் வழங்கினார்கள்.

அதிமுக ஆட்சியில் 9 பிரிவுகளுக்கு ஜெயலலிதா 4200 கோடி ரூபாய் வழங்கப்பட்டது. எடப்பாடி பழனிசாமி முதலமைச்சராக இருந்தபோது ஒரே உத்தரவில் 5 லட்சம் பேருக்கு முதியோர் உதவிதொகை வழங்க உத்தரவிட்டார். அதிமுக ஆட்சியில் 52 லட்சம் மாணவர்களுக்கு மடிக்கணினி தந்தார். திமுக வந்தால் 1,500 ரூபாய் ஓய்வூதியம் தருவதாக கூறிவிட்டு ஆயிரம் ரூபாயை பறித்துவிட்டு அனைத்தையும் நிறுத்தி விட்டனர்.

அதிமுகவை ஒரு தொண்டன்தான் தலைமை தாங்குவான் என்ற ஜனநாயகத்தை, திமுகவால் கூறமுடியுமா என்று கேள்வி எழுப்பிய அவர், திமுகவில் ஜனநாயகம் இல்லை. வாரிசு அரசியல் நிலைநிறுத்தப்பட்டதால் சுப்புலட்சுமி ஜெகதீசன் வெளியேறுவதாக அறிவித்துள்ளார். இனி அடுத்தடுத்து ஒவ்வொருவராக வெளியேற உள்ளனர். அதிமுகவை வலிமைப்படுத்தும் செயலில் யார் முட்டுக்கட்டை போட்டாலும், அது ஆண்டவனாக இருந்தாலும் அவரை அடையாளப்படுத்தி தூக்கி எறிவது தான் அதிமுகவின் வரலாறு.

தன்னை ஒரு கட்சிக்கு தலைவன் என்று கூறிக்கொண்டு உயர்நீதிமன்றம், உச்ச நீதிமன்றம் என்று சென்று வருபவர், கடந்த சட்டமன்ற தேர்தலில் தனது தேனி தொகுதியில் மட்டுமே பிரச்சாரம் செய்தார். அதனால் தென் தமிழ்நாட்டில் ஓரிரு தொகுதிகளில் மட்டும் தான் வெற்றி பெற முடிந்தது. அதே நேரத்தில் கொங்கு மண்டலத்தில் 100% வெற்றி பெற்றுள்ளனர். எம்ஜிஆர், ஜெயலலிதா வெற்றி பெற்ற ஆண்டிப்பட்டி தொகுதியிலேயே தோற்றபோது ஓபிஎஸ் தனது கட்சிப் பதவியை ராஜினாமா செய்திருக்க வேண்டும்.

அதிமுக ஆட்சியில் சிறந்த காவல்துறையாக இருந்த தமிழ்நாடு காவல்துறை, தற்போது சட்டம் ஒழுங்கு சந்தி சிரிக்கிறது. திமுகவை விமர்சித்தால் வீடுகளில் சோதனை நடத்துகின்றனர். எத்தனை வழக்கு போட்டாலும் சட்டப்படி சந்திப்போம். அதிமுக மனித புனிதரால் தொடங்கப்பட்ட, தெய்வசக்தி பெற்ற இயக்கம். எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகியோரின் ஆன்மா, எடப்பாடியாரை வழிநடத்துகிறது.

திமுகவிடம் இருந்து அதிமுகவை காப்பாற்ற வேண்டும் என்றால் எடப்பாடியாரால்தான் முடியும். மத்திய அரசிடம் இருந்து எத்தனை அழுத்தம் இருந்தாலும் மின்கட்டணம் உயர்த்தி ஏழைமக்களுக்கு சுமை ஏற்படுத்த கூடாது என எடப்பாடியார் கவனமுடன் இருந்தார். இனி சட்டமன்ற தேர்தல், நாடாளுமன்ற தேர்தல் எப்போது வந்தாலும் இரட்டை இலைதான் வெற்றிபெறும்” என தெரிவித்தார்.

கூட்டத்தில் மாநகர் மாவட்ட கழக செயலாளர் வெங்கடாஜலம், மாநகர அவைத்தலைவர் பன்னீர்செல்வம், தெற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் பாலசுப்ரமணியன், முன்னாள் எம்எல்ஏக்கள் எம்.கே.செல்வராஜ், சக்திவேல், ரவிச்சந்திரன் மற்றும் பகுதி கழக நிர்வாகிகள் பங்கேற்றனர்.

இதையும் படிங்க: 'எல்லோர்க்கும் எல்லாம்' என்ற சமூக நீதித்தத்துவம் தான் திராவிட மாடல் - முதலமைச்சர் ஸ்டாலின்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.