திமுகவின் உண்மை முகம் தெரிந்து விட்டது... இனி எந்த மாடல் பேசினாலும் மக்கள் நம்பபோவதில்லை... ஜி.கே. வாசன்...

author img

By

Published : Sep 20, 2022, 7:23 AM IST

Etv Bharat

மின் கட்டண உயர்வை திரும்ப பெற வலியுறுத்தி தமிழ் மாநில காங்கிரஸ் சார்பில் சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.


சேலம்: மின் கட்டண உயர்வை திரும்ப பெற வலியுறுத்தி தமிழ் மாநில காங்கிரஸ் சார்பில் சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் அந்த கட்சியின் தலைவர் ஜி.கே. வாசன் கலந்துகொண்டார். இந்த ஆர்ப்பாட்டத்தில் கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர். அப்போது ஜி.கே.வாசன் பேசுகையில், "வாக்குறுதி அடிப்படையிலேயே திமுகவுக்கு மக்கள் வாக்களித்தார்கள். ஆனால், அந்த வாக்குறுதிகளை நீங்கள் நிறைவேற்றாமல், மக்களுக்கான சுமையை தான் அதிகரிக்கிறீர்கள். திமுக எதிர்க்கட்சியாக இருந்தபோது ஒருநிலைப்பாடு, ஆளுக்கட்சியாக இருக்கும்போது ஒரு நிலைப்பாடு. இது என்ன திமுகவின் பச்சோந்தி திராவிட மாடலா?.

தமிழ்நாட்டு மக்களை எளிதில் ஏமாற்றி விடமுடியாது. மின்சாரத்துறை நஷ்டமடைவதற்கு ஏழை எளிய மக்களா காரணம். மக்கள் மீது கை நீட்டுவதை அரசு நிறுத்திக் கொள்ள வேண்டும். நஷ்டம் கூடாது என்றால் மின்சார தடவாள பொருட்கள் வாங்கும்போது அதில் ஊழல் செய்யக்கூடாது. வெளி மாநிலங்களில் மின்சாரம் கொள்முதல் செய்யும்போது லஞ்சம் வாங்க கூடாது. இந்த பணிகளை முறையாக செய்தால் மின்சாரத்துறை நஷ்டத்தில் செயல்படாது.

தமிழ்நாட்டில் ஊழலுக்கு திமுக திராவிட மாடல், நேர்மைக்கு காமராஜர் மாடல். புது புது யுக்தியில் திராவிட மாடல் என்று மக்களை ஏமாற்ற பார்க்கிறார்கள். தமிழ்நாட்டின் அமைச்சர்களும் அதிகாரிகளும் விளக்கம் கொடுக்கும்போது யாருக்குமே புரியாது. தற்போது நூதனமுறையில் மக்கள் மீது சுமையை வைத்து ஏமாற்ற நினைக்கிறார்கள்.

கரோனா தாக்கத்தைவிட, மின் கட்டண தாக்கம் மக்களை பெருமளவு பாதித்துள்ளது. மின்கட்டண உயர்வால் மின்கட்டணம் மட்டும் உயர்வதில்லை. வாடகை கட்டணம், பராமரிப்பு கட்டணம், வியாபார நிறுவனங்கள் பொருட்களின் விலையை உயர்த்துகிறார்கள். அத்தியாவசிய பொருட்கள் விலை உயர்வு என்று பல்வேறு விலை உயர்வுக்கு காரணமாக மின் கட்டண உயர்வு உள்ளது. காமராஜர் ஆட்சியில் அனைவரும் பாடம் படித்தனர். திமுகஆட்சியில் தொடர்ந்து குடிக்க கற்றுக் கொள்கின்றனர். போதைப் பொருட்கள் பயன்பாடு, ஆன்லைன் சூதாட்டம் உள்ளிட்டவைகளை தொடர்ந்து வேடிக்கை பார்த்து வருகின்ற அரசுதான் திராவிட மாடல் அரசு.

திமுக எந்த மாடல் பேசினாலும், தமிழ்நாட்டு மக்கள் உங்களை நம்பபோவதில்லை. உங்கள் சாயம் வெளுத்துவிட்டது. உங்களுடைய உண்மையான முகத்தை மக்கள் தெரிந்து கொண்டனர். இதற்கு வருகின்ற தேர்தலில் எதிர்மறை வாக்குகளால் பிரதிபலிப்பார்கள் என்பதில் மாற்றம் கிடையாது எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க: காங்கிரஸ் ஆட்சிக்காலத்தில் ஒரு ஆயுதம் கூட வாங்கவில்லை: பாஜகவில் இணைந்தபின் அமரீந்தர் சிங் பேச்சு

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.