மதுரை எய்ம்ஸில் சேரும் மாணவர்கள் - ராமநாதபுரம் மருத்துவக் கல்லூரியில் அனுமதி

author img

By

Published : Jan 13, 2022, 3:35 PM IST

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன்

மதுரை எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரியில் மத்திய அரசு அனுமதித்துள்ள 50 மருத்துவ இடங்களில் அனுமதிக்கப்படும் மாணவர்கள் புதிதாகத் தொடங்கப்பட்டுள்ள ராமநாதபுரம் மருத்துவக் கல்லூரியில் அனுமதிக்கப்படுவர் என மருத்துவத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

சென்னை: கிங்ஸ் இன்ஸ்டிடியூட் மையத்தில் அமைந்துள்ள கரோனா சிறப்பு மருத்துவமனையில் முன்களப் பணியாளர்களுடன் மா. சுப்பிரமணியன் சமத்துவப் பொங்கல் விழாவினைக் கொண்டாடினார். அதனைத் தொடர்ந்து, மருத்துவப் பணியாளர்களுக்குப் புத்தாடைகளை வழங்கினார்.

சைதாப்பேட்டை பகுதியைச் சேர்ந்த இரண்டு தனியார் பள்ளி மாணவிகள், தங்களது நண்பர்கள், குடும்பத்தினர் மூலம் நிதி திரட்டி, ஏழு அரசுப் பள்ளி மாணவர்களுக்கு ஆன்லைன் மூலம் கல்வி பயில உதவியாக கைப்பேசிகளை மா. சுப்பிரிமணியன் முன்னிலையில் வழங்கினர். தொடர்ந்து கிங்ஸ் மருத்துவமனையில் பணியாற்றும் ஊழியர்களின் போக்குவரத்துக்காகப் புதிய வாகனத்தை மா. சுப்பிரமணியன் கொடியசைத்து தொடங்கிவைத்தார்.

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன்
பொங்கல் கிண்டும் மா. சுப்பிரமணியன்

பின்னர் செய்தியாளரிடம் பேசிய மா. சுப்பிரமணியன், “மத்திய சுகாதார அமைச்சரிடம், மதுரை எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரிக்கு சுற்றுச்சுவர் அமைக்கும் பணி தற்பொழுது நடைபெற்றுவருகிறது. மேலும் கட்டுமான பணிகளை உடனடியாகத் தொடங்கவும், கோயம்புத்தூரில் எய்ம்ஸ் கல்லூரி அமைக்கவும், தமிழ்நாட்டில் ஆறு மாவட்டங்களில் புதிய மருத்துவக் கல்லூரிகளை அமைக்கவும், நீட் தேர்வில் தமிழ்நாட்டிற்கு விலக்கு அளித்தல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் மனுவினை வழங்கியுள்ளார்.

மேலும், அரசுப் பள்ளி மாணவர்களுக்கான நீட் பயிற்சி நிறுத்தப்படாது. நீட் தேர்விலிருந்து விலக்குப் பெற தொடர்ந்து முயற்சிகள் மேற்கொள்ளப்படும். 24 மணி நேரமும் இயங்கும் தடுப்பூசி மையம் 61 இடங்களில் தமிழ்நாட்டில் மட்டும்தான் உள்ளது. பொங்கல் விடுமுறை காரணமாக தடுப்பூசி முகாம்கள் இந்த வாரம் நடத்தப்படாது.

தடுப்பூசி முகாம்கள் மூலம் இதுவரை மூன்று கோடியே 32 லட்சத்து 64 ஆயிரம் நபர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. முன்னெச்சரிக்கை தவணை தடுப்பூசி இதுவரை 60 ஆயிரத்து 51 பேருக்கு செலுத்தப்பட்டுள்ளது. 15 முதல் 18 வயதுள்ள 75 விழுக்காடு குழந்தைகளுக்குத் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

போகிப் பண்டிகையின்போது பழைய பொருள்களை எரிப்பது என்பது முன்னர் நடந்துவந்தது, தற்போது அவை குறைந்துள்ளது. இது மக்களின் கலாசாரம் என்பதால் அவற்றை மக்கள் மாற்றிக்கொள்ள தாமதமாகும். தமிழ்நாட்டில் நேற்று (ஜனவரி 12) புதிதாகத் திறக்கப்பட்ட 11 கல்லூரிகள் மட்டுமே மத்திய-மாநில அரசுகள் நிதி பங்களிப்பில் கட்டப்பட்டவை. இதற்கு முன் தமிழ்நாட்டில் செயல்பட்டுவரும் 26 மருத்துவக் கல்லூரிகளும் மாநில அரசின் பங்களிப்பில் கட்டப்பட்டவை” எனத் தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியில், மருத்துவக் கல்வி இயக்குநர் நாராயணபாபு, கிங்ஸ் மருத்துவமனை இயக்குநர் டாக்டர் நாராயணசாமி, ராஜிவ் காந்தி அரசு பொது மருத்துவமனை மற்றும் மருத்துவக் கல்லூரி முதல்வர் தேரணி ராஜன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

இதையும் படிங்க: பாஸ்.. மாஸ்க் போடுங்க.. இனி ரூ.200 இல்ல ரூ.500- தமிழ்நாடு அரசு அதிரடி

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.