சிவகங்கையில் ஆக்கிரமிப்புக் கட்டடங்களை இடிக்க உத்தரவு

author img

By

Published : Jun 29, 2021, 7:09 AM IST

உத்தரவு

ஆக்கிரமிப்புக் கட்டடத்தை அகற்றிக்கொள்ளாவிட்டால், அறநிலையத்துறை தரப்பில் இடித்து அகற்றி, அதற்கான செலவை ஆக்கிரமிப்பாளர்களிடம் இருந்து வசூலித்துக்கொள்ள உயர் நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.

சிவகங்கை: சிவகங்கையைச் சேர்ந்தவர் சேங்கைமாறன். இவர் சிவகங்கை விநாயகர் கோயிலுக்குச் சொந்தமான இடத்தை ஆக்கிரமித்து எழுப்பப்பட்டுள்ள கட்டடங்களை அகற்றக்கோரி உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் வழக்குத் தொடுத்தார்.

அதில், 'சிவகங்கை நகர் கெளரி விநாயகர் கோயிலுக்குச் சொந்தமான 9.58 ஏக்கர் நிலம் காஞ்சிரங்கால் குரூப், மகா சிவனேந்தல் பகுதியில் உள்ளது.

இதனை அதிமுக முன்னாள் அமைச்சர் பாஸ்கரனின் தரப்பினர் ஆக்கிரமித்துள்ளனர்.

அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்தி, இந்த நிலத்தில் வணிக வளாகம் கட்டும் பணியில் ஈடுபட்டுள்ளனர். அதனால் கோயிலுக்குச் சொந்தமான நிலத்திலுள்ள ஆக்கிரமிப்பு கட்டடங்களை அகற்றி, ஆக்கிரமிப்பாளர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க அலுவலர்களுக்கு உத்தரவிட வேண்டும்' எனக் குறிப்பிடப்பட்டிருந்தது.

உரிய நிலம் மீட்பு

மனுவை நீதிபதிகள் டி.எஸ்.சிவஞானம், எஸ்.ஆனந்தி ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்தனர். அப்போது சம்பந்தப்பட்ட நிலம் மீட்கப்பட்டதாகவும், கட்டடங்களை ஜூன் 30ஆம் தேதிக்குள் அகற்ற வேண்டுமென சட்டப்படி நோட்டீஸ் கொடுக்கப்பட்டுள்ளது எனவும் அறநிலையத்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள் பேசுகையில், 'அறநிலையத்துறையின் நோட்டீஸின்படி, ஆக்கிரமிப்பாளர்கள் கட்டடத்தை அகற்றிக் கொள்ளவேண்டும். இல்லாவிட்டால் அறநிலையத்துறை தரப்பில் இடித்து அகற்ற வேண்டும்.

இதற்கான செலவை ஆக்கிரமிப்பாளர்களிடம் இருந்து வசூலித்துக் கொள்ளலாம். இந்த ஒட்டுமொத்த நடவடிக்கைகளையும் 12 வாரத்திற்குள் முடிக்க வேண்டும்' என உத்தரவிட்டனர்.

இதையும் படிங்க: ஓடையில் காப்பர் கழிவுகளை கொட்டியவர்கள் யார்? - நீதிபதிகள் கேள்வி

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.