முடிதிருத்தும் நிலையங்களிலும் சாதியப் பாகுபாடா? இது மிகப்பெரிய பிரச்னை - நீதிபதிகள் வேதனை

author img

By

Published : Feb 9, 2022, 6:37 PM IST

நீதிபதிகள் வேதனை

புதுக்கோட்டை மாவட்டம், புதுப்பட்டி கிராமத்திலுள்ள பட்டியல் சமூகத்தைச் சேர்ந்தவர்களுக்கு முடி திருத்துவதில்லை எனும் புகார் குறித்து, அலுவலர்கள் ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்கக் கோரிய வழக்கில், புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் பதில் மனு தாக்கல் செய்ய உயர் நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.

புதுக்கோட்டை: கோட்டைக்காடு பகுதியைச் சேர்ந்த செல்வம், உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் பொதுநல மனுவினைத் தாக்கல் செய்திருந்தார்.

அந்த மனுவில், "புதுக்கோட்டை மாவட்டம், புதுப்பட்டி கிராமத்தில் 600 குடும்பங்கள் வசிக்கின்றன. இதில் பெரும்பான்மையாக கோனார், கள்ளர் மற்றும் செட்டியார் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் வசிக்கின்றனர்.

முடிதிருத்தும் நிலையத்தில் பாகுபாடு

இதில் 150 குடும்பங்கள் பட்டியல் சமூகத்தைச் சேர்ந்தவர்கள். இவர்கள் மிக ஏழ்மையான நிலையில் வசித்து வருகின்றனர். பெரும்பாலானோர் கூலித் தொழிலாளிகளாக உள்ளனர்.

இந்நிலையில், புதுப்பட்டி கிராமத்தில் கடந்த 15 முதல் 20 ஆண்டுகளாக 3 முடி திருத்தும் நிலையங்களும், 1 சலவை நிலையமும் மட்டுமே உள்ளது. ஆனால், இங்கு செயல்படும் முடி திருத்தும் நிலையத்தில் பட்டியல் சமூகத்தைச் சேர்ந்தவர்களுக்கு முடி திருத்தம் செய்வது இல்லை.

எனவே, புதுக்கோட்டை மாவட்டம், புதுப்பட்டி கிராமத்திலுள்ள முடி திருத்தும் நிலையத்தில் பட்டியல் சமூகத்தைச் சேர்ந்தவர்களுக்கு முடி திருத்துவதில்லை எனும் புகார் குறித்து அலுவலர்கள் ஆய்வு செய்து உடனடியாக நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும்" எனக் கூறியிருந்தார்.

ஆட்சியருக்கு உத்தரவு

இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் பரேஷ்உபாத்யாய், கிருஷ்ணன் ராமசாமி அமர்வு, "அது உண்மையாக இருப்பின் மிகப்பெரிய பிரச்னை. குறிப்பிட்ட சமூகத்திற்கு என பிரத்யேகமான முடி திருத்தும் நிலையம் உள்ளதா? ஏன் இது போன்ற பாகுபாடு உள்ளது?" எனக் கேள்வி எழுப்பினர்.

தொடர்ந்து, வழக்கு குறித்து புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கு விசாரணையை 4 வாரத்துக்கு ஒத்திவைத்தனர்.

இதையும் படிங்க: மீட்கப்பட்ட இளைஞர்: முத்தமிட்டு நன்றி தெரிவிக்கும் நெகிழ்ச்சி தருணம்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.