நித்தியானந்தா ஒரு பொருட்டே அல்ல - மதுரையில் புதிய ஆதீனம் பேட்டி

author img

By

Published : Aug 29, 2021, 10:44 PM IST

செய்தியாளர்களைச் சந்தித்த ஆதீனம்

நித்தியானந்தா ஒரு பொருட்டே இல்லை; எங்களையும் மீறி அவர் இங்கு வந்தால் கைது செய்யப்படுவார் என மதுரையின் புதிய ஆதீனம் ஹரிஹர சுவாமிகள் தெரிவித்துள்ளார்.

மதுரை: ஆதீனம் 292ஆவது குருமகா சன்னிதானமாக இருந்த ஸ்ரீ-ல-ஸ்ரீ தேசிக பரமாச்சாரிய ஞானசம்பந்தர், உடல்நலக்குறைவால் காலமானதை அடுத்து, புதிய ஆதீனமாக தற்போதைய ஹரிஹர சுவாமிகள் பொறுப்பேற்றுள்ளார். அவர் இன்று (ஆக.29) செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார்.

அப்போது பேசிய அவர், 'மதுரை ஆதீனம் கி.பி. 6ஆம் நூற்றாண்டில் திருஞானசம்பந்தரால் தோற்றுவிக்கப்பட்டது. தமிழ்நாட்டிலுள்ள பிற ஆதீன மடங்கள் அனைத்தும் மிகப் பின்னால் உருவானவை. நான் முதன் முதலாக குன்றக்குடி ஆதீனத்தில் இருந்தேன்.

தருமை ஆதீன கர்த்தர் எனக்கு அருள் வழங்கினார். திருவாவடுதுறை ஆதீன கர்த்தர் என்னை ஆளாக்கினார். மதுரை ஆதீனம் 292ஆவது குரு மகா சன்னிதானம் எனக்குப் பதவி வழங்கினார்.

மதுரை ஆதீனத்தின் சார்பாக 'தமிழாகரம்' எனும் மாத இதழ் இனி வெளியாகும். மேலும் மதுரை ஆதீனம் சார்பாக ஒவ்வொரு ஆண்டும் சிறந்த ஓதுவாருக்கான ஞானசம்பந்தர் விருது, சைவ சமயத்தில் சிறப்புடன் விளங்கும் பெண் ஒருவருக்கு மங்கையர்க்கரசியார் விருது, பாண்டிதுரை தேவர், வ.உ. சிதம்பரனார், வள்ளலார் பெயர்களில் விருதுகள் வழங்கப்படும்.

நித்தியானந்தா குறித்து பேசிய ஆதீனம்

மதுரை ஆதீன மடத்தில் மூன்று வேளையும் அன்னதானம் வழங்கப்படும். இனி எந்நேரமும் பொதுமக்கள் நம் இடத்திற்கு வருகை தரும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. தற்போதும் நான் மக்களோடு மக்களாகத்தான் இருக்கிறேன்.

கிராமம் கிராமமாக சென்றுள்ளேன். அரசே ஆலயத்தைவிட்டு வெளியேறு என்ற போராட்டத்துக்கு கன்னியாகுமரில் இருந்து சென்னை கோட்டை வரை நடந்தே வந்தேன்.

செய்தியாளர்களைச் சந்தித்த ஆதீனம்

அனைத்து அரசியல் தலைவர்களுடனும் நான் தொடர்பில் தான் இருக்கிறேன். நித்தியானந்தா ஒரு பொருட்டே இல்லை. அவர் இங்கு வந்தால் கைதாகிவிடுவார்' என்றார்.

மேலும், சமய நல்லிணக்க மாநாடு போன்று ஒரு நிகழ்ச்சியில் வரும் காலத்தில் உரையாற்ற அழைப்பு விடுத்தால் நீங்கள் செல்வீர்களா? என்ற கேள்விக்கு, 'அழைப்பு விடுத்தால் போகலாம். ஆனால், அவர்கள் நம் சமயத்தை ஏற்றுக்கொள்வார்களா?' எனப் பதில் கேள்வி எழுப்பினார்.

இதையும் படிங்க: மதுரை ஆதீனம்: 293ஆவது பீடாதிபதியாக பொறுப்பேற்கும் ஹரிஹர தேசிக பரமாச்சாரிய சுவாமி

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.