அனுமதியின்றி தாய்மார்களுக்கு 'காப்பர் டி' பொருத்தும் மருத்துவர்கள் - நடவடிக்கை எடுக்குமா அரசு?

author img

By

Published : Nov 23, 2021, 5:54 PM IST

அனுமதியின்றி தாய்மார்களுக்கு 'காப்பர் டி' பொருத்தும் மருத்துவர்கள்

மதுரை அரசு ராசாசி மருத்துவமனையில் பிரசவத்திற்காக வருகை தரும் தாய்மார்களின் அனுமதியைப் பெறாமலேயே குழந்தைப் பிறந்தவுடன் அவர்களுக்கு 'காப்பர் டி' பொருத்தப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இது குறித்த சிறப்புப் பார்வை..!

மதுரை அரசு ராசாசி மருத்துவமனை தென் மாவட்ட மக்களின் மருத்துவத் தேவையைப் பூர்த்தி செய்யும் மிகப்பெரிய அரசு மருத்துவ சேவை நிறுவனமாகும்.

நாள்தோறும் பல்லாயிரக்கணக்கானோர் தங்களின் பல்வேறு சிகிச்சைகளுக்கு இங்கு மருத்துவம் பார்த்துவிட்டுச் செல்கின்றனர். அதேபோன்று இங்குள்ள மகப்பேறு இயல் துறையில் சராசரியாக நாள் ஒன்றுக்கு 100-க்கும் மேற்பட்ட பிரசவங்கள் நடக்கின்றன.

பிரசவத்தின்போது பெண்களுக்கு குழந்தை பிறந்தபிறகு, அவர்களிடம் அனுமதி பெறாமல், வலுக்கட்டாயமாக 'காப்பர் டி' என்ற கருத்தடை சாதனம் பொருத்தப்படுவதாகவும்; இதனால் பல்வேறு உடல் உபாதைகள் ஏற்படுவதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

திடீரென ஏற்பட்ட வயிற்று வலி

இது குறித்து மதுரை நகர்ப்புறத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் கூறுகையில், “கடந்த நவம்பர் 12ஆம் தேதி மதுரை அரசு ராசாசி மருத்துவமனையில் எனக்கு 2ஆவது குழந்தைப் பிறந்தது.

தனியார் மருத்துவமனைகளுக்குச் செல்லும் அளவிற்கு போதுமான வசதிகள் இருந்தும்கூட, அரசு மருத்துவமனையில் பிரசவம் பார்த்துக் கொள்வோம் என்ற வைராக்கியத்தின் அடிப்படையிலும், அதன் மீதான நம்பிக்கையின் அடிப்படையிலும், எனது கணவரின் முழு ஒத்துழைப்போடு மதுரை அரசு மருத்துவமனையில் பிரசவத்திற்காக சேர்ந்தேன்.

பிரசவ வலி ஏற்பட்ட பிறகுதான் அங்கு சென்றோம். மருத்துவமனைக்குச் சென்ற சில மணி நேரத்திலேயே எனக்கு சுகப்பிரசவத்தில் பெண் குழந்தை பிறந்தது.

முதல் குழந்தை பிறந்தபோது இருந்ததைவிட மிகவும் நிறைவாக உணர்ந்தேன். குழந்தைப் பிறந்து இரண்டு நாள்கள் வரை எனக்கு எந்தவித பிரச்னைகளும் இல்லை. 3ஆவது நாளிலிருந்து எனக்குத் திடீரென வயிற்று வலி ஏற்பட்டது. குழந்தை பிறந்தால் இருக்கக்கூடிய இயல்பான வலியாக அது எனக்குத் தோன்றவில்லை. ஒருவேலை வயது அதிகமாகிவிட்டதால் ஏற்படக்கூடிய வலியாக இருக்குமோ என்ற அச்சம் இருந்தது.

வலுக்கட்டாயமாக 'காப்பர் டி' பொருத்தும் மருத்துவர்கள்

எனது படுக்கைக்கு அருகிலிருந்த ஒரு பெண்ணுக்கும் எனக்கு பிரசவம் நிகழ்ந்த அதே நேரத்தில் அவருக்கும் நிகழ்ந்திருந்தது. அப்போது அவர் குடும்பக் கட்டுப்பாடு செய்துகொள்வதற்கான வேலையில் மும்முரமாக இருந்தார்.

அப்போது அவருக்கு 'காப்பர் டி' பொருத்தப்பட்டதை எனது கண்ணால் நான் பார்த்தேன். குடும்பக்கட்டுப்பாடு செய்யும்போது எதற்காக 'காப்பர் டி' பொருத்திக் கொள்கிறீர்கள்? என நான் கேட்டபோது, 'எனக்கு அதையெல்லாம் பொருத்தவில்லையே' என்று அந்தப் பெண் கூறினார்.

அப்போதுதான் எனக்கும் அதுபோன்று 'காப்பர் டி' பொருத்தியிருப்பார்களோ என்ற சந்தேகம் ஏற்பட்டது. எனக்கு ஏற்பட்ட இயல்புக்கு மாறான வலி குறித்து பணியிலிருந்த மருத்துவர் ஒருவரிடம் கேட்டேன்.

அப்போதுதான் அவர் எனது நோயாளர் அறிக்கையைப் பார்த்துவிட்டு, 'காப்பர் டி' பொருத்தப்பட்டிருப்பதாகக் கூறினார். அப்போது அவரிடம் இதை ஏன் எனக்குத் தெரியப்படுத்தவில்லை, 'காப்பர் டி' பொருத்தக் கூறி நாங்கள் யாரும் சொல்லாதநிலையில், எங்களுக்கு எவ்வாறு அதுபோன்று பொருத்தலாம் எனக் கேள்வி எழுப்பினேன்.

அத்துமீறும் மருத்துவர்கள்

இதற்கு எந்தவிதப் பதிலும் தரவில்லை என்பதோடு இதனை கொஞ்சமும் பொருட்படுத்தவே இல்லை. 'காப்பர் டி' பொருத்துவது குறித்து குறைந்தபட்சம் அனுமதிகேட்டிருக்க வேண்டும்.

அதேபோன்று எந்தவிதமான ஆவணங்களிலும் கையெழுத்துப் பெறவில்லை. ஆனால், பொருத்திய பின்னராவது உங்களுக்கு 'காப்பர் டி' பொருத்தப்பட்டுள்ளது எனத் தகவலாவது சொல்லியிருக்க வேண்டும். அதையும் அங்குள்ள மருத்துவர்களோ, செவிலியரோ செய்யவில்லை.

தற்போது கரோனா தொற்றுக் காரணமாக அனைவரும் இறக்கும் சூழ்நிலை ஏற்படும்போதுகூட தடுப்பூசியை விருப்பம் உள்ளவர்களே செலுத்திக்கொள்ள விதி இருக்கின்றபோது, ஆனால் 'காப்பர் டி' பொருத்தும் விஷயத்தில் ஏன் இந்த அத்துமீறல் என்பதுதான் என்னுடைய கேள்வி.

சர்வாதிகார நாட்டில்கூட இப்படியெல்லாம் நடந்ததாக நான் கேள்விப்படவில்லை.

மருத்துவர்களை கடவுளாகப் பார்க்கும் மக்கள்

மூன்று டிகிரி படித்துள்ள என்னைப் போன்ற படித்த பெண்ணுக்கே இப்படியொரு நிலையென்றால், படிக்காத பெண்களை நினைத்தால் மிகுந்த வேதனையாக உள்ளது. என்னோடு பிரசவத்திற்காக அங்கு அனுமதிக்கப்பட்ட பெண்கள் ஒரு சிலரைத் தவிர யாருக்குமே 'காப்பர் டி' பொருத்தப்பட்ட விஷயம் தெரியாது.

இது தமிழ்நாடு அரசின் கவனத்திற்குச் சென்றதா? இதுபோன்ற விஷயம் எப்போதிருந்து நடைபெறுகிறது? என்பதெல்லாம் பெரும் கேள்விக்குறியாக உள்ளது.

வீட்டிற்கு வந்தபிறகு எனக்கு கடுமையான வலி ஏற்பட்ட காரணத்தால், உடனடியாக அரசு ராசாசி மருத்துவமனைக்குச் சென்று பரிசோதனை மேற்கொண்டேன்.

எனக்கு சிறியளவில் அறுவை சிகிச்சைப் போன்று மேற்கொண்டார்கள். அதற்குப் பிறகு எனக்கு அந்த வலி உடனடியாக குறைந்து, உடல்நிலை இயல்பான நிலைக்குத் திரும்பிவிட்டது. தங்களுக்கு மருத்துவம் பார்க்கின்ற மருத்துவர்களை கடவுள் நிலைக்கு மக்கள் உயர்த்திப் பார்க்கிறார்கள்.

ஆகையால், பொதுமக்களின் உயிரோடு விளையாடக்கூடிய இதுபோன்ற விஷயங்களுக்கு குறைந்தபட்சம் தகவலைத் தெரிவிப்பது அவசியம். தமிழ்நாடு அரசு உடனடியாக இதில் தலையிட்டு 'காப்பர் டி' விஷயத்தை முறைப்படுத்த வேண்டும்' எனக் கேட்டுக்கொண்டார்.

'காப்பர் டி' பொருத்தும் மருத்துவர்கள் குறித்து புகார் அளிக்கும் பெண்

தவறை மறுக்கும் செவிலி

இது குறித்து நமது ஈடிவி பாரத் செய்தியாளர் மதுரை அரசு ராசாசி மருத்துவமனை முதல்வரைத் தொடர்புகொள்ள முயற்சி மேற்கொண்டும் முடியவில்லை.

ஆனால், அவருக்கு அடுத்த நிலையிலுள்ள அலுவலர்களிடம் கேட்டபோது, 'கர்ப்பப்பை சுருங்குவதைத் தடுப்பதற்காக 'காப்பர் டி' பொருத்தப்படுகிறது.

ஆனால், அதற்குரிய முறையான படிவங்களில் உரியவரிடம் கையொப்பம் பெற்ற பிறகுதான் பொருத்துகிறோம். பாமரர்களாக இருந்தால், அவர்களிடம் செவிலியர் வாசித்துக் காண்பித்த பிறகே 'காப்பர் டி' பொருத்துகிறோம்'' எனக் கூறினார்.

அரசு மருத்துவமனையை நம்பி சிகிச்சைக்காக வருகின்ற மக்களுக்கு நம்பிக்கை ஊட்டுவதுடன், அவர்களுக்கு சிறந்த மருத்துவ சேவையை அளிப்பது அரசின் கடமையாகும்.

சிறந்ததாக இருந்தாலும்கூட மக்களின் விருப்பத்திற்கு மாறாக செய்யப்படும் எந்தச் செயலும் அத்துமீறல்தான் என்பதை தொடர்புள்ளவர்கள் உணர வேண்டும்.

இதையும் படிங்க: வேலை இல்லையா கவலைய விடுங்க.. 45 நாளில் முதலாளி ஆகுங்க.. இளைஞர்களின் வரப்பிரசாதம் ருட்செட்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.