இந்துக்கள் தொடர்பாக தான் பேசியது சரிதான்... ஆ.ராசாவுக்கு அண்ணாமலை கண்டனம்

author img

By

Published : Sep 22, 2022, 7:58 AM IST

Updated : Sep 22, 2022, 1:13 PM IST

Etv Bharat

வெந்த புண்ணில் வேலை பாய்ச்சுகின்ற வகையில், தான் பேசியது சரிதான் என்று வாதத்தை ஆ.ராசா முன் வைத்துள்ளது கண்டனத்திற்கு உரியது என மாநில பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

மதுரை: பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, விமான நிலையம் அருகே தனியார் ஹோட்டலில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, "நீலகிரி எம்பி ஆ.ராசா பேசுவது நாட்டு மக்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது. சொந்த தொகுதியிலேயே 90% மக்கள் கடை அடைப்பு போராட்டம் நடத்தி எதிர்ப்பை தெரிவித்துள்ளனர்.

அனைத்து மதத்தினரும் ஆ.ராசாவின் கருத்தை கண்டித்துள்ளனர். திமுகவினர் ஒவ்வொரு சர்ச்சைக்குரிய வகையில் கருத்துக்களை பேசிக் கொண்டுதான் இருக்கிறார்கள். இதை கண்டிப்பதற்கு யாரும் இல்லை.

வெந்த புண்ணில் வேலை பாய்ச்சுகின்ற வகையில் மீண்டும் தான் பேசியது சரிதான் என்று வாதத்தை ஆ.ராசா முன் வைத்திருக்கிறார்.

ஆ.ராசாவுக்கு அண்ணாமலை கண்டனம்

63 நாயன்மார்கள் என்றால் அதில் 42 நாயன்மார்கள் பிராமணர்கள் சமுதாயத்தை சார்ந்தவர்கள் அல்ல என்பது திமுகவினருக்கு தெரியுமா?. 12 ஆழ்வார்கள் இருந்தால் அதில் 10 ஆழ்வார்கள் பிராமண சமுதாயத்தைச் சார்ந்தவர்கள் அல்ல என்பது திமுகவினருக்கு தெரியுமா?.

கடவுளுக்கு இணையாக நாயன்மார்களையும் ஆழ்வார்களையும் வைத்து பிரதிஷ்டை செய்து வருகிறோம். சாதியை அடிப்படையாக வைத்து இந்து மதம் இருந்தது கிடையாது. புதிய புதிய கருத்துகளை பேசி சர்ச்சைக்குரிய வகையில் புதிய தமிழகம் என்று பேசி வருகின்றனர்.

அரசியல் நாகரீகத்தை குறைத்துக் காட்டி பேசும், ஆ.ராசாவை எதிர்த்துப் பேசியவர் யாராக இருந்தாலும் அவர்கள் மீது கைது நடவடிக்கையை திமுக அரசு எடுத்து வருகிறது. புதிதாக காவல் துறையினரை வேலை செய்ய விடாமல் தடுத்ததாக கூறி, பொய்யான வழக்குகளை பாஜகவினர் மீது போட்டு கைது செய்து திமுக அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.

ஆ.ராசா பேசியது எந்த ஒரு பாதிப்பையும் தமிழகத்தில் ஏற்படுத்தி விடுவது இல்லையாம். ஆனால்., அவர் பேசியதை கண்டிக்கும் பாஜகவினரால் பாதிப்பு ஏற்படுகிறது என கூறியது வேடிக்கையாக உள்ளது.

ஆ.ராசா பேசியது தொடர்பாக பாரதிய ஜனதா கட்சி சார்பில் கையெழுத்து இயக்கத்தை நடத்தி அதை ஆளுநருக்கு., குடியரசுத் தலைவருக்கும் அனுப்பி வைப்போம். பிராமண சமுதாயத்தை திரும்பத் திரும்ப பேசி அரசியல் பகடை காயாக திமுக அரசு பயன்படுத்தி வருகிறது.

ஹிந்து மதத்தை கடவுளை நம்பாதவனுக்கும் இந்து வாழ்வியல் முறையில் இடம் இருக்கிறது. கடவுளை நம்ப மாட்டேன், பொட்டு வைக்க மாட்டேன் என திரும்பத் திரும்ப பேசி, இதன் மூலமாக அரசியல் லாபம் கிடைக்க வேண்டும் என்று திமுக தொடர்ந்து ஈடுபடுகிறது.

ஆ.ராசாவின் பேச்சு திமுக தலைவர் குடும்பத்திருக்கும் பொருந்தும் அல்லவா, அல்லது திமுகவை சாராத இந்துக்களுக்கு மட்டும் இந்த கருத்து பொருந்துமா.?

விநாயகர் சதுர்த்திக்கு முன்னாள் முதல்வர் அண்ணாதுரை தான் அரசு விடுமுறை அளித்துள்ளார். அவரை தலைவர் என்று போற்றும் தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் இதுவரை விநாயகர் சதுர்த்தி வாழ்த்து கூட தெரிவிக்கவில்லை.

ஓணம் பண்டிகைக்கு அதிகாலை வேலையில் வாழ்த்து தெரிவித்த திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இந்துக்கள் பண்டிகையான விநாயகர் சதுர்த்திக்கு வாழ்த்துக்கள் தெரிவிக்கவில்லை.

மத அரசியல் செய்வது திமுக தான், பாஜகவினர் அல்ல. பாஜக என்றுமே அதை செய்வது கிடையாது. ஜாதியை வைத்து அரசியல் செய்த காலம் மழை ஏறிவிட்டது. அனைத்து சமுதாயத்தினரையும் மேலே கொண்டு வர செய்வது தான் அரசியல். ஒடுக்கப்பட்ட நபர்களை மேலே கொண்டு வர வேண்டும் என்றால் அவர்கள் கையில் அதிகாரத்தை கொடுக்க வேண்டும் என்பதுதான் பாஜகவினர் கொள்கை.

திமுக ஆட்சிக்கு வந்த பிறகு திராவிட வாசனை உ.பி.யில் அடிக்கிறது என்றெல்லாம் செய்தி வந்தது. இந்தியாவின் நம்பர் ஒன் முதல்வர் என கூறியவர்கள் எதற்காக டெல்லி முதல்வரை அழைத்து வர வேண்டும்.

தமிழகத்தின் பள்ளி மாணவர்கள் போதையின் பிடியில் உள்ளனர். பஞ்சாயத்து தலைவரின் கணவர் பள்ளி தலைமை ஆசிரியரை நேரில் சென்று அடிக்கிறார். இது போன்ற செயல்கள் தமிழ்நாட்டில் இதுவரை யாரும் பார்த்ததில்லை. அமைச்சர் மகன் ஆடம்பரம் கல்யாணம் குறித்து பேச வேண்டியது அவசியம் இல்லை. தமிழ்நாட்டில் யாரெல்லாம் தன்னிடம் சொத்து இருக்கிறதோ என்று வெளிக்காட்டியவர்கள் இன்றைக்கு காணாமல் போய் இருக்கிறார்கள்.

பிரதமர் மோடி எங்கே நின்றாலும் அது மக்களுக்கு தான் பெருமை. மோடியின் பாராளுமன்ற தொகுதி எப்படி மாற்றம் அடைந்துள்ளது என்று பார்க்க வேண்டும். தமிழகத்தில் பிரதமர் மோடி எந்த தொகுதியில் போட்டியிட்டாலும் அந்த தொகுதிக்கு மிகப்பெரிய அங்கீகாரம்.

ராகுல் காந்தியின் யாத்திரை நாடாளுமன்றத் தேர்தலில் எந்தவித தாக்கத்தையும் ஏற்படுத்தாது. செல்கின்ற இடமெல்லாம் பிரிவினைவாத சக்திகளை சந்திக்கிறார். கச்சத்தீவில் தாரை வார்த்த பிறகு தான் மீனவர்களுடைய பிரச்சனை ஆரம்பித்தது.

பாரதிய ஜனதாவை பொருத்தவரை கச்சத்தீவு மீண்டும் இந்தியாவிற்கு தமிழகத்திற்கு வரவேண்டும். மற்ற எய்ம்ஸ் மருத்துவமனையை விட தனித்துவம் வாய்ந்த மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை, 25 ஆயிரம் பேர் பயன் அடையும் வகையில் அமைய உள்ளது. பல்லாயிரம் படுக்கை வசதிகள் கொண்டது.

ஜெய்க்கா நிறுவனத்தின் நிதியை தமிழ்நாடு அரசு புறக்கணித்துவிட்டு, மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை அமைவதற்கு 50 சதவீத நிதியை கொடுக்க முன்வந்தால் தமிழக அமைச்சர்களை மத்திய அரசிடம் தானே அழைத்துச் சென்று மீதமுள்ள நிதியை வாங்கித் தருகிறேன்.

சீமான் மீது எனக்கு மிகப்பெரிய மரியாதை உள்ளது. அவர் மாதம் மாதம் பல்வேறு கருத்துக்களை மாற்றி மாற்றி கூறியுள்ளது புரியாத புதிராக உள்ளது. குழந்தைகளுக்கு தேன் மிட்டாய் வாங்குவதில் கூட ஜாதிய பாகுபாடு பார்க்கப்படுகிறது. இந்த இடத்தில் திமுக அரசு தோல்வி அடைந்துள்ளது. தமிழ்நாட்டில் தான் ஜாதிய பாகுபாடு அதிகம் உள்ளது. இந்தியாவிலேயே ஜாதிய கொலை கர்நாடகாவை விட அதிகமாக நடைபெறுவது தமிழ்நாட்டில் தான்" என தெரிவித்தார்.

இதையும் படிங்க: செப்டம்பர் 22 இன்றைய ராசிபலன்

Last Updated :Sep 22, 2022, 1:13 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.