தனியார் மண்டபத்தில் சூதாட்டம்...32 பேர் கைது

author img

By

Published : Sep 16, 2022, 10:51 AM IST

ஈரோடு மாவட்டம்

பண்ணாரி அருகே தனியார் மண்டபத்தை வாடகைக்கு எடுத்து சூதாட்டத்தில் ஈடுபட்ட 32 பேர் கும்பலை கைது செய்த காவல்துறையினர், சொகுசு கார் உள்ளிட்ட 10 வாகனங்களை பறிமுதல் செய்தனர்.

ஈரோடு: சத்தியமங்கலம் அடுத்த பண்ணாரி சுற்றுவட்டார பகுதியில் பணம் வைத்து சூதாட்டம் நடப்பதாக சத்தியமங்கலம் காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்படி இன்ஸ்பெக்டர் முருகன் தலைமையிலான காவல்துறையினர் நேற்று(செப்.15) பண்ணாரி சுற்றுவட்டார பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

அப்போது ராஜன் நகர் அருகே உள்ள ஜோதி பிரகாஷ் என்பவருக்கு சொந்தமான ஜோதி மஹால் திருமண மண்டபத்தில் பணம் வைத்து சூதாடி கொண்டிருந்த 31 பேர் கொண்ட கும்பலை காவல்துறையினர் சுற்றி வளைத்தனர்.

இதனையடுத்து அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், கோவை மாவட்டம் அன்னூர், சூலூர் மற்றும் திருப்பூர் மாவட்டம் அவினாசி பகுதியைச் சேர்ந்தவர்கள் என தெரிய வந்தது. பின்னர் பணம் வைத்து சூதாடிய 31 பேர் கும்பல் மற்றும் ஜோதி மஹால் திருமண மண்டப உரிமையாளர் ஜோதி பிரகாஷ் உள்ளிட்ட 32 பேரை காவல்துறையினர் கைது செய்தனர்.

சூதாட்டத்தில் ஈடுபட்ட கும்பல் கைது
சூதாட்டத்தில் ஈடுபட்ட கும்பல் கைது

மேலும் அவர்களிடமிருந்த ஹோண்டா சிட்டி, சான்ட்ரோ உள்ளிட்ட 5 கார் மற்றும் புல்லட், யமஹா ஹோண்டா சைன் உள்ளிட்ட 5 இருசக்கர வாகனங்கள் என மொத்தம் 10 வாகனங்கள் மற்றும் இரண்டு லட்சத்து 18 ஆயிரம் ரூபாயை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர்.

இதையும் படிங்க: தங்கப்புதையல் என கூறி ரூ. 10 லட்சம் மோசடி...ஏமாந்த மளிகை கடைக்காரர்...

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.