வாட்ஸ் ஆப்பில் புகைப்படம் அனுப்பிவிட்டு கர்ப்பிணி தற்கொலை!

author img

By

Published : Nov 29, 2021, 6:38 PM IST

கர்ப்பிணி தற்கொலை

தான் சாகப்போவதாக தன் கணவருக்கு வாட்ஸ் ஆப்பில் புகைப்படம் அனுப்பி விட்டு, கர்ப்பிணி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் நிகழ்ந்துள்ளது.

கோவை: பீளமேடு பகுதி, சக்தி நகரைச் சேர்ந்தவர் சஞ்சய் அரவிந்த். இவரது மனைவி சிந்துஜா (29). இவர்களுக்கு கடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இவர்களுக்கு இரண்டு வயதில் மகன் ஒருவர் உள்ளார்.

ஐ.டி. என்ஜினீயரிங் படித்துள்ள சிந்துஜா, கடந்த எட்டு மாதங்களாக கோவையில் உள்ள ஐ.டி. நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். இவர், ஐந்து மாத கர்ப்பிணி ஆவார். நேற்று (நவ.28) கணவன், மனைவி, மகன் மூவரும் வீட்டில் இருந்தனர்.

அப்போது சிந்துஜா படுக்கையறையில் மின்விசிறியில் சேலையை மாட்டி தூக்குபோட்டுத் தொங்கப்போவதாக தனது செல்போனில் படம் எடுத்து, அதனை தனது கணவரின் வாட்ஸ் அப் எண்ணிற்கு அனுப்பியுள்ளார்.

சிறிது நேரம் கழித்து இந்தப் படத்தை பார்த்த சஞ்சய் அரவிந்த், படுக்கையறையின் கதவை உடைத்து பார்த்தபோது சிந்துஜா தான் கூறியதுபோல் தூக்கில் தொங்கியுள்ளார். இந்நிலையில், தூக்கில் தொங்கிய சிந்துஜாவை கீழே இறக்கி சிந்துஜாவின் அம்மாவிற்கு இது குறித்து செல்போனில் தகவல் தெரிவித்து அக்கம் பக்கத்தினர் உதவியுடன் தனியார் மருத்துவமனைக்கு அவரை சஞ்சய் கொண்டு சென்றுள்ளார்.

’தற்கொலை தீர்வல்ல’
’தற்கொலை தீர்வல்ல’

ஆனால், சிந்துஜா ஏற்கனவே இறந்து விட்டதாக அவரைப் பரிசோதனை செய்த மருத்துவர்கள் தெரிவித்தனர். இதுகுறித்து சிந்துஜாவின் தாய் இந்திராணி சிங்காநல்லூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

இந்தப் புகாரின் அடிப்படையில் சிந்துஜா குடும்ப பிரச்சினையால் தற்கொலை செய்து கொண்டாரா அல்லது வேறு ஏதேனும் காரணமா என்பது குறித்து காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். திருமணமாகி நான்கு ஆண்டுகளே ஆனதால் இவ்வழக்கில் ஆர்.டி.ஓ விசாரணையும் தற்போது நடைபெற்று வருகிறது.

இதையும் படிங்க: மனைவியைக் கொன்றுவிட்டு நாடகமாடிய போட்டோகிராபர் கைது!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.