வரி கட்டிய விஜய் - அரசு விளக்கம்

author img

By

Published : Sep 16, 2021, 5:41 PM IST

Updated : Sep 18, 2021, 5:14 PM IST

வரி கட்டினார் விஜய்

நடிகர் விஜய் தனது ரோல்ஸ் ராய்ஸ் காருக்கான நுழைவு வரியை செலுத்தி விட்டார் என சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.

உசென்னை: நடிகர் விஜய் கடந்த 2012ஆம் ஆண்டு இங்கிலாந்தில் இருந்து 'ரோல்ஸ் ராய்ஸ்' சொகுசு காரை இறக்குமதி செய்தார். இந்த காரை பதிவு செய்ய வட்டார போக்குவரத்து அலுவலகத்தை அணுகியபோது, வாகனத்திற்கு நுழைவு வரி செலுத்த அறிவுறுத்தப்பட்டது.

இதையடுத்து, காரை இறக்குமதி செய்தபோது, விஜய் இறக்குமதி வரி செலுத்தியுள்ளார். இதனால், நுழைவு வரியிலிருந்து தனக்கு விலக்கு அளிக்க விஜய் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கை சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியம் சமீபத்தில் தள்ளுபடி செய்தார்.

நீதிபதியின் விமர்சனமும் அபராதமும்

மேலும், நடிகர்கள் முறையாக உரிய நேரத்தில் வரி செலுத்த வேண்டும் எனவும், அவர்கள் உண்மையான ஹீரோக்களாக இருக்க வேண்டுமே தவிர ரீல் ஹீரோக்களாக இருக்கக்கூடாது என விமர்சித்து, நடிகர் விஜய்க்கு ஒரு லட்சம் ரூபாய் அபராதம் விதித்து உத்தரவிட்டிருந்தார்.

இதையடுத்து, தனி நீதிபதி அபராதம் விதித்த உத்தரவை எதிர்த்தும், அவரின் விமர்சனங்களை நீக்கக் கோரியும் நடிகர் விஜய் தரப்பில் மேல் முறையீடு செய்யப்பட்டது.

விஜய்யின் மேல்முறையீடு மனு

அந்த மனுவில், "வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட கார்களுக்கு நுழைவு வரி செலுத்த தேவையில்லை என முன்னர் உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்து இருந்தது. நுழைவு வரிக்கு விலக்களிக்க கோரி ஏற்கனவே பல வழக்குகள் உயர் நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்ததால்தான், நடிகர் விஜய் தரப்பில் நுழைவு வரிக்கு விலக்களிக்க கோரி கடந்த 2012ஆம் ஆண்டு இவ்வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கை நடிகர் விஜய் தொடர்ந்தபோது, அவரது வாகனத்துக்கு தற்காலிகமாக 20 சதவீத வரியை செலுத்தம்படி கூறி, நுழைவு வரி வசூலிக்க இடைக்கால தடை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டது.

அதன் அடிப்படையில், அவர் ஏற்கெனவே 20 சதவீதம் செலுத்திவிட்டார். இதே கோரிக்கையுடன், ஆயிரக்கணக்கானோர் வழக்கு தொடர்ந்துள்ளபோது அவர்கள் வழக்கை கையாண்டதற்கும், நடிகர் விஜய் வழக்கை கையாண்டதற்கும் நிறைய வேறுபாடுகள் உள்ளது. தற்போது, மீதமுள்ள நுழைவு வரி செலுத்த விஜய் தயாராக இருக்கிறார்" என குறிப்பிடப்பட்டிருந்தது.

பாக்கியை செலுத்தினார்

இந்த மனுவை விசாரித்த உயர் நீதிமன்றம், ஒரு லட்ச ரூபாய் அபராதம் செலுத்த வேண்டுமென்ற தனி நீதிபதியின் தீர்ப்புக்கு இடைக்கால தடை விதித்து, விஜய் ஏற்கனவே செலுத்திய நுழைவு வரி 20 சதவீதம் போக, மீதமுள்ள 80 சதவீத வரியை செலுத்த உத்தரவிட்டது.

இந்நிலையில், இந்த வழக்கு சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் சிவஞானம் ,சத்திகுமார் சுகுமார குரூப் அடங்கிய அமர்வில் இன்று (செப். 16) விசாரணைக்கு வந்தது. அப்போது, நடிகர் விஜய் தரப்பிலும், தமிழ்நாடு அரசு தரப்பிலும் ஆஜராகிய வழக்கறிஞர்கள்," விஜய் செலுத்த வேண்டிய நுழைவு வரி பாக்கியை செலுத்தப்பட்டுவிட்டார்" என நீதிமன்றத்தில் தெரிவித்தனர்.

அதனைப் பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், இவ்வழக்கின் அடுத்தகட்ட விசாரணையை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தனர். இதனிடையே விஜய் மக்கள் இயக்க கொடியினையும், நடிகர் விஜய்யின் படத்தையும் பயன்படுத்தி உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட இயக்க நிர்வாகிகளுக்கு அவர் அனுமதி வழங்கி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

இதையும் படிங்க: தலைவி அனுபவங்களை புத்தகமாக்கும் விஜய்!

Last Updated :Sep 18, 2021, 5:14 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.