சாதிய அமைப்புகளை அரசியல் கட்சிகள் பயன்படுத்துகின்றனர் - திருமாவளவன் குற்றச்சாட்டு

author img

By

Published : Sep 18, 2022, 6:38 PM IST

Etv Bharat

அரசியல் கட்சிகள் தோற்றுவிடுவோமோ என்ற அச்சத்தில் சாதிய அமைப்புகளை பயன்படுத்தி, சாதி அடிப்படையில் வேட்பாளர்களை தேர்தல்களில் அறிவிக்கின்றனர் என விசிக தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

சென்னை: அரசியல் கட்சிகள் தோற்றுவிடுவோமோ என்ற அச்சத்தில் சாதிய அமைப்புகளை பயன்படுத்தி, சாதி அடிப்படையில் வேட்பாளர்களை அறிவிக்கின்றனர் எனவும் சனாதனத்தை மோடி எதிர்ப்பார் எனில் அவருக்கு ரத்தின கம்பளம் விரித்து வரவேற்க தயார் எனவும் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

சுதந்திர போராட்ட வீரர் இரட்டைமலை சீனிவாசனின் 77 வது நினைவு நாளான இன்று (செப்.18) கிண்டி காந்தி மண்டபம் வளாகத்தில் உள்ள இட்டைமலை சீனிவாசன் சிலைக்கு விசிக தலைவர் திருமாவளவன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

பாஞ்சான்குளம் விவகாரம் முழு விசாரணை: பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "நாடாளுமன்ற தேர்தலை கருத்தில் கொண்டு, பாஜகவிற்கு எதிரான சக்திகளை ஒருங்கிணைக்கும் பணியில் ஈடுபடுவோம். மதுரை, கோவையில் சனாதன சக்திகளை வேரருக்கும் கருத்தரங்கம் நடைபெற உள்ளது. பாஞ்சாங்குளத்தில் நடந்திருப்பது கொடூரமான வன்முறை. அவர்களே சமூக தளங்களில் பதிவு செய்திருக்கிறார்கள். உடனடியாக பாஞ்சாங்குளம் விடயத்தில் நடவடிக்கை எடுத்த காவல்துறைக்கும் தமிழ்நாடு முதலமைச்சருக்கும் எனது நன்றி. ஆனாலும், பாஞ்சான்குளம் விவகாரம் குறித்து விசாரணை செய்ய குழு அமைக்க வேண்டும்.

சாதிய அமைப்பால் அரசியல்? 3000 ஆண்டுகால வரலாறு கொண்டது சாதி. பிறப்பின் அடிப்படையில் ஒவ்வொரு வருக்குமான செயல் வடிவமைக்கப்பட்டுள்ளது. சாதி அடிப்படையில் தான் இங்கு அக்ரகாரம் அமைந்துள்ளது. தெருக்கள் அமைந்துள்ளது. குறிப்பிட்ட சாதி அடர்த்தி அதிகமாக உள்ள பகுதிகளில் அதே சாதியைச் சார்ந்த வேட்பாளரை நிறுத்தி தான் அரசியலில் வெற்றி பெற முடிகிறது.

அந்த சாதியைத் தவிர்த்து வேறு சாதியினரை அந்த பகுதியில் வேட்பாளராக நிறுத்தினால் மக்கள் விழிப்புணர்வு இன்றி வாக்களிக்க மாட்டார்கள். சாதிய அமைப்புகளை, அரசியல் கட்சிகள் பயன்படுத்தி கொள்கின்றனர். கட்சி தோற்றுவிடுவோமோ என்ற அச்சத்தில் சாதி வாரியாக வேட்பாளர்களை அறிவிக்கின்றனர்.

மோடிக்கு ரத்தின கம்பளம்: சாதிக்கும் சாதி சான்றிதழ் பெறுவதிலும் தொடர்பு படுத்தக்கூடாது. பெரியாராக மாறி, சனாதான எதிர்ப்பாளியாக மோடி வந்தால், அவரை ரத்தின கம்பளம் விரித்து வரவேற்போம். சமூகப் புறக்கணிப்பு என்பது பெரிய கொடுமை. பள்ளி பிள்ளைகள்மீது சாதி வெறியாட்டம் நடத்தியவர்கள்மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். வன்கொடுமை தடுப்பு சட்டத்தை தீவிரமாக நடைமுறைப்படுத்த வேண்டும்" எனக் கூறினார்.

விசிக தலைவர் திருமாவளவன் பேட்டி

இதையும் படிங்க: பட்டியலின சமூகத்தைச் சேர்ந்த குழந்தைகளுக்கு மிட்டாய் கொடுக்காத கடைக்கு சீல்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.