கோவில்பட்டி கூலித்தொழிலாளியின் மகன் ஆசிய ஹாக்கி போட்டிக்குத் தேர்வு!

author img

By

Published : May 12, 2022, 10:58 PM IST

ஹாக்கி போட்டி

இந்தோனேஷியாவில் நடைபெற உள்ள ஆடவர் ஆசியா ஹாக்கி கோப்பைக்கான போட்டியில் இந்தியா சார்பில் விளையாட உள்ள 24 பேர் கொண்ட ஹாக்கி அணியில் தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டியைச் சேர்ந்த ஹாக்கி விளையாட்டு வீரர் மாரீஸ்வரன் மற்றும் அரியலூரை சேர்ந்த கார்த்திக் ஆகிய 2 தமிழ்நாட்டு வீரர்கள் இடம் பிடித்துள்ளனர்.

ஆடவர் ஆசியா ஹாக்கி கோப்பைக்கான விளையாட்டுப் போட்டிகள் இந்தோனேஷியாவின் ஜகர்த்தா நகரில் வருகிற மே 23அன்று தொடங்கி ஜூன் 1ஆம் தேதி வரை நடைபெற இருக்கிறது. அதில் இந்தியா சார்பில் விளையாட ஆசியக்கோப்பை ஆடவர் ஹாக்கி அணிக்கு 24 விளையாட்டு வீரர்கள் தேர்வு செய்யப்பட்டு அதற்குரிய பட்டியலை ஹாக்கி இந்தியா அமைப்பு வெளியிட்டுள்ளது.

இதில் அணி கேப்டனாக ஒலிம்பிக்கில் வெண்கலப் பதக்கம் வென்ற ரூபேந்திர பால் சிங், துணை கேப்டனாக பீரேந்திர லக்ரா மற்றும் அனுபவம் வாய்ந்த மூத்த வீரர்கள், புதுமுக வீரர்கள் இடம் பெற்றுள்ளனர்.

குறிப்பாக, தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டியைச் சேர்ந்த ஹாக்கி விளையாட்டு வீரர் மாரீஸ்வரன் மற்றும் அரியலூரைச் சேர்ந்த கார்த்திக் ஆகிய 2 தமிழ்நாட்டு வீரர்கள் இடம் பிடித்துள்ளனர். விளையாட்டு வீரர்கள் மாரீஸ்வரன் மற்றும் கார்த்திக் ஆகிய இருவரும் கோவில்பட்டியில் உள்ள சர்வதேச தரத்திலான செயற்கை புல்வெளி ஹாக்கி விளையாட்டு மைதானத்தில் விளையாடிப் பயிற்சிப் பெற்றவர்கள் என்பதும்; 20 ஆண்டுகளுக்குப் பிறகு இந்திய ஹாக்கி ஆடவர் அணியில் விளையாடுவதற்கு இரண்டு தமிழ்நாடு வீரர்கள் தேர்வாகி உள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

கோவில்பட்டியில் தீப்பெட்டி தொழிற்சாலையில் பணியாற்றும் கூலித் தொழிலாளியான சக்திவேல் - சங்கரேஸ்வரி தம்பதியரின் மகன் மாரீஸ்வரன் ஆசிய ஹாக்கி கோப்பைக்கான விளையாட்டுப்போட்டியில் விளையாட இந்திய அணியில் தேர்வாகி இருப்பது கோவில்பட்டி ஹாக்கி வீரர்கள் மற்றும் அப்பகுதி மக்கள் இடையே மிகப்பெரிய சந்தோசத்தையும் மனநிறைவையும் அளித்துள்ளது.

ஆசிய அளவிலான ஹாக்கிப் போட்டிக்கு தமிழ்நாடு ஹாக்கி வீரர்கள் 2 பேர் தேர்வு

இதையும் படிங்க: மீண்டும் பிரதமரானார் ரணில் விக்ரமசிங்க.. சஜித் பிரேமதாச கோரிக்கை நிராகரிப்பு!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.