சினிமா பாணியில் கடன் வசூலிக்க முயன்ற ஆறு பேர் கைது

author img

By

Published : Aug 22, 2022, 1:12 PM IST

Etv Bharat

சென்னையில் கடனை திருப்பிக் கொடுக்காதவரை சினிமா பாணியில் வீட்டில் அத்துமீறி நுழைந்து கடத்திய ஆறு பேரை போலீசார் கைது செய்தனர்.

சென்னை: தி.நகர் ராமசாமி தெருவை சேர்ந்தவர் சரவணன்(46). இவர் நேற்று முன்தினம் (ஆக.20) மதியம் சுமார் 03.00 மணியளவில் வீட்டில் தனியாக இருந்துள்ளார். அப்போது அவருக்கு தெரிந்த நபரான ஆரோக்கியராஜ் என்பவர் கார் மற்றும் இருசக்கர வாகனத்தில் சுமார் 5 நபர்களுடன் சென்று அத்துமீறி வீட்டினுள் நுழைந்து சரவணனிடம் தனக்கு தர வேண்டிய பணம் கேட்டு மிரட்டினார்.

பின்னர் கத்தியைக் காட்டி சரவணனை கடத்திக் கொண்டு வீட்டில் நிறுத்தி வைத்திருந்த 2 விலையுயர்ந்த கார்கள் (Benz & BMW), வாட்ச் மற்றும் பொருட்களை எடுத்துச் சென்றனர்.

இது குறித்து சரவணனின் சகோதரர் முத்துகுமரன் மாம்பலம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.அதன் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை செய்து சிசிடிவி கேமரா பதிவுகளை தீவிரமாக ஆய்வு செய்தனர். கடத்தல்காரர்களின் கார் மற்றும் கடத்திச் செல்லப்பட்ட கார்களின் விவரங்கள் குறித்து காவல் கட்டுப்பாட்டு அறைக்கு உடனடியாக தகவல் கொடுத்து தீவிரமாக தேடி வந்தனர்.

இந்த நிலையில் போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலின்பேரில் கடத்தல் நபர்களை சென்னை அருகே சுற்றி வளைத்து கைது செய்தனர். அவர்களிடமிருந்து கடத்தப்பட்ட சரவணனை பத்திரமாக மீட்டனர்.

பின்னர் காவல் நிலையம் அழைத்து சென்று விசாரணை செய்ததில் மயிலாடுதுறையைச் சேர்ந்த ஆரோக்கியராஜ்(42), கரூர் மாவட்டத்தைச் சேர்ந்த அரவிந்த் குரு(23), திருப்பூரைச் சேர்ந்த அப்ரோஸ்(23), மதுரையைச் சேர்ந்த அஜய்(24), விஜயபாண்டி(25), கோயம்புத்தூரைச் சேர்ந்த நாகேந்திரன்(31) ஆகியோர் என தெரியவந்தது.

பின்னர் அவர்களிடமிருந்து சரவணன் வீட்டிலிருந்து திருடிய Benz & BMW ஆகிய 2 கார்கள். 1 விலையுயர்ந்த Ferrari வாட்ச், 9 செல்போன்கள் மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்திய 3 கார்கள், 1 இருசக்கர வாகனம், 16 செல்போன்கள், 1 ஆப்பிள் லேப்டாப், கத்திகள், 2 பொம்மை துப்பாக்கிகள் மற்றும் இரும்பு பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

விசாரணையில் சரவணன் மற்றும் ஆரோக்கியராஜ் ஆகியோர் வீடு கட்டுமானம், ரியல் எஸ்டேட் மற்றும் சவுடு மணல் வியாபாரம் செய்து வந்ததுள்ளனர். வியாபாரம் தொடர்பாக சரவணன் ஆரோக்கியராஜுக்கு தர வேண்டிய பணத்தை தராமல் காலம் தாழ்த்தி வந்ததால், ஆரோக்கியராஜ் அடியாட்களுடன் சரவணன் வீட்டிற்கு சென்று பணத்தை கேட்டுள்ளார். அப்போது அவரின் நடவடிக்கைகள் திருப்தி அளிக்காததால் கத்தியைக் காட்டி சரவணனை கடத்திச் சென்றது தெரியவந்தது.

பின்னர் கைது செய்யப்பட்ட 6 பேரும் விசாரணைக்குப் பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

இதையும் படிங்க: ஹைதராபாத்தில் அமித் ஷா, ஜூனியர் என்டிஆர் சந்திப்பு

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.