பொருள்கள் மட்டுமல்ல; நீதியும் இனி ஆன்லைனில்தான்!

author img

By

Published : Jan 13, 2022, 4:52 PM IST

ஆன்லைன் விசாரணை, online hearing

நாளுக்கு நாள் மாறிவரும் உலகில் மாற்றம் ஒன்றே மாறாததாக உள்ளது. அந்த வகையில், நீதிமன்றங்களில் ஆன்லைன் விசாரணை தேவையா, வேண்டாமா என்பது குறித்த விவாதம் நடைபெற்றுவருகிறது. அது குறித்த சிறப்புத் தொகுப்பும், துறைசார்ந்தோரின் கருத்துகளையும் பார்க்கலாம்.

சென்னை: 2019ஆம் ஆண்டு சீனாவில் உள்ள வூஹான் நகரத்தில் ஏற்பட்ட கரோனா தொற்று வைரஸ் பாதிப்பு, தற்போதுவரை உலக மக்களை வாட்டிவதைத்துவருகிறது. இதன் காரணமாக, தகவல் தொழில்நுட்பத் துறை முதல் அடிமட்ட வியாபாரிகள் வரை நேரடி அணுகுதலைத் தவிர்த்து ஆன்லைன் மூலமாகவே தங்கள் வணிகத்தை மாற்றத் தொடங்கியுள்ளனர்.

இந்திய ஜனநாயகத்தின் தூண்களில் ஒன்றான நீதிமன்றங்களையும் கரோனாவின் தாக்கம் விட்டுவைக்கவில்லை. கரோனா முதல் அலையில் தொடங்கிய பாதிப்பு நீதிபதிகள், கடைநிலை ஊழியர்கள் வரை அதிகரிக்கத் தொடங்கியது.

ஓராண்டில் ஒன்றரை கோடி மரங்கள் அழிப்பு

இதையடுத்து, நீதிபதிகள், வழக்கறிஞர்கள், வழக்காடிகள் நலன்கருதி நீதிமன்ற விசாரணைகள் 2020ஆம் ஆண்டுமுதல் ஆன்லைன் மூலமாகவே நடத்தப்பட்டுவருகின்றன. கரோனா தொற்று குறையத் தொடங்கியதும் நேரடி விசாரணைகள் நடத்த பல்வேறு தரப்பில் வலியுறுத்தப்பட்ட போதும் பாதிப்புகள் முழுமையாகக் குறையாததால், தற்போதுவரை ஆன்லைன் விசாரணையே தொடர்கிறது.

இதற்குத் தீர்வுதான் என்ன? இதே நிலை தொடர்ந்தால் எதிர்காலத்தில் விசாரணைகளும், வழக்கறிஞர்களும் பாதிக்கப்படாமல் இருக்க ஆன்லைன் விசாரணைதான் ஒரே தீர்வாக அமையுமா? என்பதைக் காலம்தான் முடிவுசெய்ய வேண்டும்.

பொதுவாக நீதிமன்ற வழக்குகளுக்கான ஆவணங்களைத் தாக்கல்செய்ய வெள்ளை, பச்சை நிறத் தாள்கள் தேவைப்படுவதால், ஒவ்வொரு ஆண்டும் இந்தியாவில் தாள்கள் தயாரிப்பதற்காக 15 மில்லியன் டன் (ஒரு கோடியே 50 லட்சம்) மரங்கள் அழிக்கப்படுகின்றன. ஒரு தாளைத் தயாரிக்க 10 லிட்டர் நீரும் தேவைப்படுகிறது.

ஆன்லைன் விசாரணை நடைமுறையில் சாத்தியமா?

சுற்றுச்சூழல் பாதிப்பைத் தடுக்க உயர் நீதிமன்றம், சார்பு நீதிமன்றங்களில் தாள் இல்லாத மனு தாக்கல் முறையைக் கொண்டுவர வேண்டும் என உச்ச நீதிமன்றமும் வலியுறுத்தியுள்ளது. மேற்கு வங்கம், கர்நாடகா, கேரளா, சிக்கிம், திரிபுரா மாநிலங்களில் உள்ள உயர் நீதிமன்றங்களில் இ-பைலிங் முறை நடைமுறையில் உள்ளது.

இது தொடர்பான வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், தமிழ்நாட்டில் இ-பைலிங் முறை ஏற்கனவே கொண்டுவரப்பட்டுள்ளதாகவும், ஏற்கனவே மனு தாக்கல்செய்யும் முறையிலிருந்து இ-பைலிங் முறைக்கு மாறுவது படிப்படியாகத்தான் நடைபெறும் எனவும் தெரிவித்துள்ளனர்.

இந்த நடைமுறை தமிழ்நாட்டில் அறிமுகப்படுத்தப்பட்டால் ஆண்டுக்கு நான்கு மில்லியன் (40 லட்சம்) டன் மரங்கள் வெட்டப்படுவது தவிர்க்கப்படும். ஆனால், ஆன்லைன் விசாரணை என்பது நடைமுறையில் சாத்தியமற்றது என வழக்கறிஞர்கள் தரப்பில் கூறப்படுகிறது.

சென்னை உயர் நீதிமன்றம்
சென்னை உயர் நீதிமன்றம்

ஆன்லைன் விசாரணை நிரந்தரத் தீர்வாகுமா?

இது குறித்து தமிழ்நாடு புதுச்சேரி பார் கவுன்சில் தலைவர் அமல்ராஜ் கூறுகையில், "கரோனா தொற்று அதிகரித்துவரும் நிலையில் நேரடி விசாரணை என்பது நடைமுறையில் சாத்தியமில்லை. ஆனால் இதே நிலை தொடர்ந்தால், வழக்கறிஞர்களால் தொழில்செய்ய முடியாத நிலை ஏற்படும். கரோனாவைக் காரணம் காட்டி முழுவதுமாக நேரடி விசாரணையைத் தவிர்க்காமல், தொற்று இல்லை எனச் சான்றளிக்கப்பட்டவர்களை மட்டும் நீதிமன்றத்திற்கு வர அனுமதிக்கலாம்.

இதனால், இளம் வழக்கறிஞர்கள் எந்தப் பொருளாதாரத் தடையுமின்றி நீதிமன்றங்களில் வழக்காட முடியும். மேலும், ஆன்லைன் விசாரணை என்பது தற்காலிகத் தீர்வாக அமையுமே தவிர, நீதிமன்றங்களைப் பொறுத்தவரை நிரந்தரத் தீர்வாக அமையாது. அதனால், விரைவில் நேரடி விசாரணையைத் தொடர நீதிமன்றங்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும்" எனத் தெரிவித்துள்ளார்.

உயர் நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கத் தலைவர் மோகன கிருஷ்ணன் பேசுகையில், "ஆன்லைன் விசாரணையில் நாம் ஆரம்ப நிலையில் இருப்பதால், ஏராளமான சிக்கல்கள் ஏற்படுகின்றன. குறிப்பாக, ஒரு நாளில் முடிய வேண்டிய மனு தாக்கல் நடைமுறை மூன்று நாள்களுக்கும் மேலாகக் கால விரயம் ஏற்படுகிறது.

இளம் வழக்கறிஞர்களுக்கு அனுபவம் கிடைக்காது

தொடரும் சிக்னல் (சமிக்ஞை) பிரச்சினை காரணமாக நீதிபதிகள், எதிர் தரப்பு வாதங்களைச் சாரியாகக் கேட்க முடியாத நிலையில், வழக்கறிஞர்கள் தங்கள் வாதங்களை நீதிபதிகளிடம் எப்படித் தெளிவாகத் தெரிவிக்க முடியும்.

அரசுத் தரப்பில் சமர்ப்பிக்கப்படும் ஆவணங்கள் உடனடியாகக் கிடைப்பதில் தாமதம் உள்ளது. பல வழக்குகளில் தங்கள் முழுமையான வாதங்களை முன்வைக்க முடியாமல் தீர்ப்பு எதிர் தரப்புக்குச் சாதகமாவதால் வழக்கறிஞர்கள் பாதிக்கப்படுகின்றனர்.

90 விழுக்காடு வழக்கறிஞர்கள் ஆன்லைன் விசாரணையில் கைப்பேசியின் வாயிலாகவே கலந்துகொள்கின்றனர். 10 விழுக்காடு மூத்த மற்றும் சில வழக்கறிஞர்களிடம் மட்டுமே அனைத்து வசதிகளுடன் வாதிட முடிகிறது. இதனால், இளம் வழக்கறிஞர்களுக்கு கிடைக்க வேண்டிய நீதிமன்ற அனுபவம் கிடைப்பதில்லை" என வேதனை தெரிவிக்கிறார்.

ஆன்லைன் விசாரணையில் நன்மைகள்

சேலத்தைச் சேர்ந்த சமூக செயற்பாட்டாளர் ராதாகிருஷ்ணன், "கோயில் நிலங்கள் ஆக்கிரமிப்பு, சிலைத் திருட்டு வழக்குகளுக்காக சேலத்திலிருந்து சென்னை நீதிமன்றத்துக்குச் செல்ல 400 கிலோமீட்டர் (8 மணி நேரம்) பேருந்து பயணம் என்பது மிகவும் கடினம். பெரும்பாலான நேரங்களில் நீதிமன்ற நேரடி விசாரணையில் சரியான நேரத்தில் கலந்துகொள்ள முடியவில்லை. பட்டியலில் உள்ள வழக்குகள் விசாரணைக்கு வராமலும் போகலாம்.

வாரத்திற்கு 2 முதல் 3 வழக்குகளுக்காகப் பேருந்தில் பயணிப்பதால் மன ரீதியாகவும், பொருளாதார ரீதியாகவும் பாதிப்பை ஏற்படுத்துகிறது. ஆனால், ஆன்லைன் விசாரணையில் வழக்குக்கு 1,000 ரூபாய் மீதமாவதோடு, ஒரே நாளில் மதுரை, சென்னை நீதிமன்றங்களில் ஆஜராக முடிகிறது" என ஆன்லைன் விசாரணைக்கு வரவேற்புத் தெரிவிக்கிறார்.

இந்த விசாரணை முறை குறித்து சென்னையைச் சேர்ந்த விலங்கின ஆர்வலர் முரளி, "கால மாற்றத்திற்கு ஏற்ப ஆன்லைன் விசாரணைக்கு மாற வேண்டிய காலம் இது. தங்கள் வழக்குகளில் வழக்கறிஞர்கள் எப்படி வாதம் செய்கிறார்கள் என்பதை மனுதாரராக நேரடியாகப் பார்க்க முடிகிறது.

ஆன்லைன் - காலத்தின் கட்டாயம்

குறிப்பிட்ட அலைவரிசையில் (particular frequency) ஆன்லைன் விசாரணையில்தான் பங்கேற்க வேண்டும் என நிர்ணயிக்கலாம். அதற்கான கட்டமைப்பையும் ஏற்படுத்த முன்வர வேண்டும். இதனால், அடிக்கடி ஏற்படும் சிக்னல் தடைகளை நிரந்தரமாகச் சரிசெய்வதோடு, தேவையற்ற அலைச்சல், பண விரயத்தைத் தவிர்க்கலாம்" என வரவேற்புத் தெரிவிக்கிறார்.

கரோனா தொற்றுக்குத் தடுப்பூசிகள் இருந்தாலும், டெல்டா, ஒமைக்ரான் என நாளுக்கு நாள் புதிய பரிணாமத்தில் வைரஸ் மக்களை ஆட்டிப்படைத்துவருகிறது. அதனால், நீதிமன்றப் பணிகளையே தொழிலாகக் கொண்ட வழக்கறிஞர்களின் நலனை மட்டும் பார்க்காமல், அனைத்து மக்களின் நலனுக்காகவும் நாம் ஆன்லைன் முறைக்கு மாற வேண்டிய காலத்தின் கட்டாயத்தில் இருக்கிறோம்.

  • மாற்றம் ஒன்றே மாறாதது!

இதையும் படிங்க: குண்டு பாய்ந்து இறந்த பெண்ணுக்கு ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவு

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.