புதிய கல்விக் கொள்கை உயர்கல்விக்கு பல வாய்ப்புகளைத் தந்துள்ளது - மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்

author img

By

Published : Sep 10, 2022, 10:33 PM IST

Updated : Sep 10, 2022, 10:46 PM IST

Etv Bharat

தொழில்நுட்பங்களை நோக்கி உலகம் நகர்ந்து கொண்டிருக்கிறது என்பதை பெற்றோர்கள் புரிந்து கொள்ளவேண்டும் எனவும் புதிய கல்விக் கொள்கை, உயர்கல்விக்கு ஏராளமான வாய்ப்புகளைக் கொடுத்துள்ளது என மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீத்தாராமன் தெரிவித்துள்ளார்.

சென்னை அடுத்த மேலக்கோட்டையூரில் உள்ள ஐஐஐடிடிஎம் நிறுவனத்தில் இன்று (செப்.10) நடந்த 10ஆம் ஆண்டு பட்டமளிப்பு விழாவில் சிறப்பு விருந்திநராகக் கலந்துகொண்ட மத்திய நிதி மற்றும் பெருநிறுவனங்கள் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன், புதிய கல்விக் கொள்கை உயர்கல்விக்கு ஏராளமான வாய்ப்புகளைக் கொண்டுள்ளது எனவும்; தொழில்நுட்பங்களை நோக்கி உலகம் நகர்ந்து கொண்டிருக்கிறது என்பதை பெற்றோர்கள் புரிந்து கொள்ளவேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.

போட்டி மனப்பான்மை மாணவர்களுக்கு வேண்டும்: அப்போது நிகழ்ச்சியில் பேசிய அவர், 'தொழில்நுட்பங்களை நோக்கி உலகம் நகர்ந்து கொண்டிருக்கிறது. எனவே, மாணவர்களை அவர்களது பெற்றோர்கள் புரிந்துகொள்ளவேண்டும். மாணவர்கள் சமூகம் பொருளாதார முன்னேற்றம் அடைய வேண்டிய அவசியம் உள்ளது. உலக அளவில் அறிவியல் தொழில்நுட்பங்களை போட்டி மனப்பான்மையுடன் அணுக வேண்டும். அறிவியல் மற்றும் அதன் திறன் மேம்பாடு மிகவும் அவசியம்.

பெரும் சக்தியாக இந்தியா மாறும்: விவசாயிகளும் ராணுவ வீரர்களும் முன்னேற வேண்டும் என நமது நாட்டின் சுதந்திர தினவிழாவில் பிரதமர் மோடி குறிப்பிட்டார். அவர் கூறியதைப் போல, ஜெய் விஞ்ஞான், ஜெய் கிசான், ஜெய் அனுசந்தன் (ஆராய்ச்சி) ஆகியவற்றை நமது குறிக்கோளாகக் கொள்ளவேண்டும். விஞ்ஞானிகளும் அவர்களின் ஆராய்ச்சிகளும் நாட்டின் அடுத்த 25 வருட வளர்ச்சிக்கு அவசியமானது. வருகின்ற 2047-ல் இந்தியா பொருளாதார அளவில் பெரும் சக்தி மிக்க நாடாக மாறும்.

உலகில் 58 சி.இ.ஓ. இந்தியர்கள்: அதற்கு இக்குறிக்கோள்களை நாம் பின்பற்ற வேண்டும். தொழில் நிறுவனங்களுக்குத் தேவையான மாணவர்களை நாம் உருவாக்க வேண்டும். வருகின்ற 2028-ல் வேலை பார்ப்பவர்களின் எண்ணிக்கை சீனாவை விட இந்தியாவில் உயரும். 2026-ல் நமது நாட்டில் வேலைப் பார்ப்பவர்களின் எண்ணிக்கை 65% ஆக அதிகரிக்கும். எனவே, 2047-ல் பொருளாதாரத்தில் முன்னேறிய சக்தியாக நமது நாடு திகழும். உலக அளவில் 58 சி.இ.ஓ-வினர் இந்தியர்களாக உள்ளனர். இவர்கள் அனைவரும் இந்தியாவில் இந்தியக் கல்வி முறையில் பயின்றவர்கள். சிலிக்கான் பள்ளத்தாக்கில் உள்ள 25% நிறுவனங்கள் இந்தியர்களால் நடத்தப்படுகின்றன.

புதிய கல்விக் கொள்கை: 100 யூனிகான் நிறுவனங்கள் இந்தியர்களால் நடத்தப்படுகின்றன. இது கடந்த 5 வருடங்களில் அதிகரித்துள்ளது. 2014-15-ல் 42,000 என இருந்த காப்பீட்டு ஆராய்ச்சிகளின் எண்ணிக்கை, இந்த வருடம் 66,000 ஆக அதிகரித்துள்ளன. புதிய கல்விக் கொள்கை உயர்கல்விக்கு நிறைய வாய்ப்புகளைக் கொடுத்துள்ளது. 760 மெய்நிகர் அறிவியல் ஆய்வகங்கள், திறன் மேம்பாட்டு ஆய்வகங்கள் அமைக்கப்பட்டுள்ளன எனக் குறிப்பிட்டார்.

முன்னதாக, ஐஐஐடிடிஎம் காஞ்சிபுரம் கல்வி நிறுவனத்தின் 10ஆவது பட்டமளிப்பு விழாவில் மாணவ மாணவிகளுக்கு அமைச்சர் நிர்மலா சீத்தாராமன் பட்டங்களை வழங்கி பாராட்டினார். தொடர்ந்து, இக்கல்வி நிறுவனத்தின் புதிய அரங்குக்கு அவர் அடிக்கல் நாட்டியதோடு, பின்னர் ஏஐஐஓடி ரோபோடிக்ஸ் மையத்தையும் அவர் திறந்து வைத்தார்.

பட்டமளிப்பு விழாவில் மாணவர்களுடன் மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன்
பட்டமளிப்பு விழாவில் மாணவர்களுடன் மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன்

பட்டமளிப்பு: மொத்தம் 380 மாணவ மாணவிகளுக்கு பட்டம் அளிக்கப்பட்டது. ஆறு பேருக்கு முனைவர் பட்டம் வழங்கப்பட்டது. 53 பேருக்கு எம்.டெக்., 211 பேருக்கு பி.டெக். பட்டங்கள் வழங்கப்பட்டன. 110 பேர் இரட்டை பட்டம் பெற்றனர். நிகழ்ச்சியில் பேசிய நிறுவன நிர்வாக குழுத் தலைவர் சடகோபன், '2007-ல் எளிய முறையில் தொடங்கப்பட்ட இக்கல்வி நிறுவனம், 15 ஆண்டுகளில், 1600 மாணவ மாணவிகள், 80 ஆசிரியர்கள் மற்றும் 50 நிர்வாக தொழில்நுட்ப ஊழியர்கள் என மிகப் பெரிய வளர்ச்சி கண்டுள்ளது' என்று பெருமிதத்துடன் குறிப்பிட்டார்.

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பேச்சு

இந்நிகழ்ச்சியில் ஐஐஐடிடிஎம் நிறுவன குழுத் தலைவர் பேராசிரியர் எஸ்.சடகோபன், ஐஐஐடிடிஎம் இயக்குநர் டி.வி.எல்.எம். சோமயாஜுலு மற்றும் பேராசிரியர்கள் உட்பட ஏராளமான மாணவ மாணவிகள், பெற்றோர் என பலரும் கலந்துகொண்டனர்.

இதையும் படிங்க: எய்ம்ஸ் மருத்துவமனைக்காக ஒரு செங்கல்லை கூட திமுக எடுத்து வைக்கவில்லை - ஆர்.பி.உதயகுமார்

Last Updated :Sep 10, 2022, 10:46 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.