மூத்த கம்யூனிஸ்ட் தலைவர் ஆர்.நல்லகண்ணுவிற்கு "தகைசால்தமிழர்" விருது
Updated on: Aug 6, 2022, 4:27 PM IST

மூத்த கம்யூனிஸ்ட் தலைவர் ஆர்.நல்லகண்ணுவிற்கு "தகைசால்தமிழர்" விருது
Updated on: Aug 6, 2022, 4:27 PM IST
தமிழ்நாடு அரசின் "தகைசால் தமிழர் விருது"-க்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவரும் விடுதலைப்போராட்ட வீரருமான ஆர்.நல்லகண்ணு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
சென்னை: தமிழ்நாட்டிற்கும், தமிழினத்தின் வளர்ச்சிக்கும் மாபெரும் பங்காற்றியவர்களைப் பெருமைப்படுத்தும் வகையில் “தகைசால் தமிழர்” என்ற பெயரில் புதிய விருது கடந்த 2021ஆம் ஆண்டு முதல் தமிழ்நாடு அரசால் வழங்கப்பட்டு வருகிறது.
இந்த ஆண்டிற்கான விருதாளரை தேர்வு செய்வதற்காக அமைக்கப்பட்ட குழுவின் கலந்தாலோசனைக் கூட்டம் சென்னை தலைமைச் செயலகத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (ஆக.6) தலைமையில் நடைபெற்றது.
அக்கூட்டத்தில் இளம் வயதிலேயே பொது வாழ்க்கையில் ஈடுபட்டு, விடுதலைப் போராட்ட வீரராக தன் இளம் வயதை சிறைச்சாலையிலும், தலைமறைவு வாழ்க்கையிலும், கழித்தவரும், ஏழை எளிய மக்களுக்காக குரல்கொடுத்து, சமூக நல்லிணக்கத்தினையும், சுற்றுச்சூழலையும் காத்திட தொடர்ந்து பாடுபட்டுவருவதுடன், சிறந்த தன்னலமற்ற அரசியல்வாதியாகவும் பணியாற்றி, தமிழ்நாட்டிற்கும் தமிழினத்தின் வளர்ச்சிக்கும் பெரும் பங்களிப்பை அளித்த தமிழருமான இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் ஆர். நல்லகண்ணு அவர்களுக்கு 2022-ஆம் ஆண்டிற்கான “தகைசால் தமிழர் விருது" வழங்க தேர்வுக் குழுவினரால் ஒருமனதாக முடிவு செய்யப்பட்டது.
“தகைசால் தமிழர்” விருதிற்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆர். நல்லகண்ணு அவர்களுக்கு, 10 லட்சம் ரூபாய்க்கான காசோலையும், பாராட்டுச் சான்றிதழும், வருகிற 2022 ஆக.15 ஆம் நாள் நடைபெறும் சுதந்திர தின விழாவில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்க உள்ளார்.
முன்னதாக, கடந்த 2021ஆம் ஆண்டு இந்த விருதை இளம் வயதுமுதல் சுதந்திரப் போராட்டம், கம்யூனிஸ்ட் இயக்க செயல்பாடுகளில் தனது வாழ்க்கை அர்ப்பணித்த என்.சங்கரய்யாவிற்கு தமிழ்நாடு அரசு வழங்கி கௌரவித்தது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: காலச்சுவடு பதிப்பகத்தின் நிர்வாக இயக்குநர் கண்ணனுக்கு செவாலியே விருது!
