மலைக்கோயில்களில் அடுத்த ஐந்தாண்டுகளுக்குள் ரோப் கார் - சேகர்பாபு தகவல்

author img

By

Published : Nov 25, 2021, 2:26 PM IST

Updated : Nov 25, 2021, 4:06 PM IST

c

தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மலைக்கோயில்களிலும் அடுத்த ஐந்து ஆண்டுகளுக்குள் ரோப் கார் அமைக்கும் பணியை அரசு மேற்கொள்ளும் என அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.

இந்து சமய அறநிலையத் துறையின்கீழ் உள்ள 451 கோயில்களுக்குத் திருப்பணிகள், குடமுழுக்கு நடத்தவது குறித்தும், 87 கோயில்களுக்கு அறங்காவலர் நியமிப்பது குறித்தும் ஆய்வுக் கூட்டம் சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள இந்து சமய அறநிலையத் துறை அலுவலகத்தில் துறையின் அமைச்சர் சேகர்பாபு தலைமையில் நடைபெற்றது.

திருக்கோயிலில் திருப்பணி

இந்தக் கூட்டத்தில் பல்வேறு கோயில்களில் உள்ள இணை ஆணையர்கள், மண்டலத் துணை ஆணையர்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். இந்தக் கூட்டத்திற்குப் பின் செய்தியாளரைச் சந்தித்த சேகர்பாபு கூறியதாவது, "மாத மாதம் இணை ஆணையர்கள், மண்டலத் துணை ஆணையர்களுடன் கோயில் திருப்பணிகள் குறித்து ஆய்வுக் கூட்டம் நடைபெறும்.

451 கோயில்களுக்குத் திருப்பணிகள், குடமுழுக்கு நடத்தவது, 87 கோயில்களுக்கு அறங்காவலர் நியமிப்பது பழனி உள்பட ஐந்து திருக்கோயில்களை, மேம்படுத்த வேண்டிய பணிகள் குறித்து ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

பழநி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயில் ரூ.250 கோடி மதிப்பீட்டிலும், திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணி சுவாமி திருக்கோயில் ரூ.300 கோடி மதிப்பீட்டிலும், பெரியபாளையம் அருள்மிகு பவானியம்மன் திருக்கோயிலில் ரூ.125 கோடி மதிப்பீட்டிலும் திருப்பணிகள் செய்யப்படவுள்ளன.

இப்பணிகள் முடிவுற்றதும் குடமுழுக்கு நடத்தப்படும். 88 கோயில்களுக்கு அறங்காவலர் நியமனம், 32 மாவட்டங்களுக்கு மாவட்ட குழுக்கள் நியமனம் குறித்து விளம்பரம் வெளியிடப்பட்டு விண்ணப்பங்கள் பெறப்பட்டுவருகின்றன.

விண்ணப்பங்கள் பரீசிலிக்கப்பட்டு தகுதியுடைய அறங்காவலர்கள் நியமனம் செய்யப்படுவார்கள். குறிப்பாக மதுரவாயல் கைலாசநாதர் கோயிலில் புதிதாக குளம் அமைக்க இரண்டு கோடி ரூபாய் மதிப்பீட்டில் திட்ட மதிப்பீடு தயார் செய்யப்பட்டு பணிகள் தொடங்கப்பட உள்ளன.

ரோப் கார் அமைக்கும் பணி

சமீபத்தில் பெய்த மழையால் பல கோயில்களில் தேங்கியிருந்த நீரை அகற்றுவது குறித்து ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது. தமிழ்நாட்டில் உள்ள மலைக்கோயில்களில் அடுத்த ஐந்து ஆண்டுகளில் ரோப் கார் அமைக்கும் பணியை அரசு மேற்கொள்ள உள்ளது. பழனி, சோளிங்கர் கோயிலில் ரோப்கார் பணி நடைபெற்றுவருகிறது.

திருநீர்மலை, திருத்தணி, திருக்கழுக்குன்றம் உள்ளிட்ட கோயில்களிலும் ரோப் கார் வசதியை ஏற்படுத்த அரசு அதற்கான பணிகளை மேற்கொள்ள உள்ளது. மேலும் மருதமலை கோயிலில் இன்னும் மூன்று மாதங்களுக்குள் மின் வின்ச் வசதி ஏற்படுத்த ஒப்பந்தம் விடப்படும்.

மதுரவாயல் கைலாசநாதர் கோயிலில் புதிதாகக் குளம் அமைக்கத் திட்டமிட்டுள்ளது. தமிழ்நாட்டில் உள்ள கோயில்களில் உள்ள அனைத்து குளங்களும் தூர்வாரும் பணி நடத்தப்படும்.

அதில் 40 குளங்களை உடனடியாகச் சரிசெய்ய வேண்டும் எனத் திட்டமிடப்பட்டுள்ளது. இந்த ஆண்டுக்குள் அந்த 40 குளங்களும் சீர்செய்யப்படும். சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவை முதலமைச்சரின் கட்டுப்பாட்டில் பலப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.

திருக்கோயில்களில் பாதுகாப்பு அறை

உள் துறை வாயிலாக வெளிநாட்டில் உள்ள சிலைகளை மீட்க நடவடிக்கை எடுக்கப்பட்டுவருகிறது. சிலைகள் கடத்தப்படுவதைத் தடுக்க 2018-19இல் ஸ்ட்ராங் ரூம் அமைக்கத் திட்டமிடப்பட்டது. ஆனால் கடந்த ஆட்சியில் அமைக்கவில்லை.

திமுக ஆட்சியில் தற்போது வடபழனி முருகன் கோயிலில் ஒரு ஸ்ட்ராங் ரூம் அமைக்கப்பட்டுள்ளது. விரைவில் தமிழ்நாடு முழுவதும் உள்ள அனைத்துக் கோயில்களிலும் ஸ்ட்ராங் ரூம் அமைக்கப்பட உள்ளது. சிலைகள் கடத்தப்படுவதை தடுக்க 3,087 திருக்கோயில்களில் பாதுகாப்பு அறை அமைக்க ரூ.308.70 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

ஜனவரி மாதம் இறுதிக்குள் வடபழனி முருகன் கோயிலில் பொதுமக்கள் தரிசனம் செய்ய குடமுழுக்கு நடத்தப்படும். மழையின் காரணமாக இப்பணிகள் சற்று நிறுத்திவைக்கப்பட்டுள்ளது. இந்தப் பணிகள் விரைந்து முடித்து குடமுழுக்கு தேதி விரைவில் அறிவிக்கப்படும்" எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க: Viral Video: கத்தியுடன் கலாட்டா செய்த இளைஞர்கள் - விரட்டிப் பிடித்த காவலர்..!

Last Updated :Nov 25, 2021, 4:06 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.