‘தனியார் பொறியியல் கல்லூரிகளில் கட்டணத்தை உயர்த்த வேண்டாம்’ - அமைச்சர் பொன்முடி

author img

By

Published : Sep 10, 2022, 4:17 PM IST

Etv Bharat

தமிழ்நாட்டில் பொறியியல் படிப்புக்கான கட்டணத்தை நடப்பாண்டில் ரூ.15ஆயிரத்திலிருந்து பொறியியல் கல்லூரிகள் உயர்த்த வேண்டாம் என அறிவுறுத்தியுள்ளதாக அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார்.

சென்னை: தமிழ்நாட்டில் இன்று (செப்.10) ஆன்லைனில் நடந்து வரும் இளநிலை பொறியியல் படிப்புகளுக்கான கலந்தாய்வு விபரங்களை கிண்டியிலுள்ள தொழில்நுட்ப கல்வி இயக்க அலுவலகத்தில் இயங்கிவரும் பொறியியல் மாணவர் சேர்க்கை உதவி மையத்தில் அமைச்சர் உயர்கல்வித்துறை பொன்முடி ஆய்வு மேற்கொண்டார். தொடர்ந்து அவர் செய்தியாளர்களைச் சந்தித்து பேசினார்.

பொறியியலில் சேர ரூ.15,000 கட்டணம்: அப்போது அவர், “முதலாமாண்டு சேருவதற்கான மொத்தம் ஒரு லட்சத்து 56ஆயிரத்து 278 விண்ணப்பங்கள் சரிபார்க்கப்பட்டு கலந்தாய்வு தொடங்கியுள்ளன. முதல் ரேங்க் முதல் 14ஆயிரத்து 524 ஆவது ரேங்க் வரை உள்ளவர்களுக்கு வரும் 12ஆம் தேதி வரை கலந்தாய்வு நடைபெறும். பின், 15ஆம் தேதி மாணவர்களுக்கு சேர்க்கை ஆணை கொடுக்கப்படும். மாணவர்கள் அன்று முதல் ஒரு வாரத்திற்குள் ரூ.15ஆயிரம் கட்டணம் செலுத்த வேண்டும். அவ்வாறு பணம் கட்டாத மாணவர்களின் இடம் காலியிடமாகக் கருதப்பட்டு, அடுத்த ரேங்க்கில் உள்ள மாணவர்களுக்கு வழங்கப்படும்” என்றார்.

மேலும், “7.5% இட ஒதுக்கீட்டில் 6ஆம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரை படித்த மாணவ மாணவியருக்கு கலை மற்றும் பொறியியல் கல்லூரிகளில் இடம் வழங்க வேண்டும் என்ற முதலமைச்சர் மு.க. ஸ்டாலினின் உத்தரவு பெரிய பலனைத் தந்துள்ளது. இதன், ஒருபகுதியாக இந்தாண்டு 23ஆயிரத்து321 விண்ணப்பங்கள் வந்துள்ளன. 12ஆயிரத்து 982 மாணவர்களும் 10ஆயிரத்து 339 மாணவிகளும் விண்ணப்பித்துள்ளனர்.

பொறியியல் படிக்கும் மாணவிகளுக்கு ரூ.1000: இந்த 7.5% இட ஒதுக்கீட்டின் அடிப்படையில் 11ஆயிரத்து 150 பேருக்கு சீட் வழங்க முடியும். அண்ணா பல்கலைக்கழகத்தில் மட்டும் 76 சீட்டுகள் ஒதுக்கப்பட்டுள்ளன. 5 ஆயிரம் பெண்களுக்கு சீட் கிடைக்குமாயின் புதுமைப் பெண் திட்டத்தின்கீழ் மாதம் ரூ.1000 வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார். தொடர்ந்து பேசிய அவர், “பாலிடெக்னிக் படித்த மாணவர்கள் இரண்டாம் ஆண்டு சேருவதற்கான வாய்ப்பை அண்ணா பல்கலைக்கழகம் வழங்குகிறது. அதன்படி , இரண்டாம் ஆண்டில் 852 காலியிடங்கள் உள்ளநிலையில் அதில் தற்போது வரை 811 சேர்ந்துள்ளனர்.

ரத்தான நுழைவுத் தேர்வு-அதிகரித்த சேர்க்கை: அண்ணா பல்கலைக்கழகத்தில் சேர நுழைவுத் தேர்வு இருந்தபோது 25 ஆயிரம் கிராமப்புற மாணவர்கள் சேர்ந்தனர். கருணாநிதி முதலமைச்சராக இருந்தபோது, நுழைவுத் தேர்வை ரத்து செய்தப் பின்னர் 75 ஆயிரம் கிராமப்புற மாணவர்கள் சேர்ந்தனர். கிராமப்புற மாணவர்கள், அரசுப் பள்ளி மாணவர்கள் அதிகளவில் உயர்கல்வியில் சேர வேண்டும் என்பதற்காகவே முதலமைச்சர் நீட் தேர்வு வேண்டாம் என்கிறார்.

தமிழகத்தில் 53% பேர் உயர்கல்வி: இந்தியாவை பொறுத்தவரை, தமிழ்நாட்டில் தான் 53% பேர் உயர்கல்வி பயில்கின்றனர். தொழிற்சாலைகளுடன் கலந்தாலோசித்து பொறியியல் கல்லூரிகளின் பாடத்திட்டங்களை மாற்ற வேண்டும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். அதன்படியே, அண்ணா பல்கலைக்கழகத்தின் பாடத்திட்டம் மாற்றப்பட்டுள்ளதாகவும், அரசு கல்லூரிகள் மற்றும் அரசு உதவி பெறும் கல்லூரிகள் பழைய கட்டண முறைப்படி மட்டுமே கட்டணத்தைப் பெற வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது' எனத் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: ரேஷன் கடை பெண் ஊழியர்களுக்கு மகப்பேறு விடுப்பு வழங்க கூட்டுறவு துறை உத்தரவு

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.