கங்கைகொண்ட சோழபுரம் கோயிலில் புதிய கட்டுமானங்களுக்கு இடைக்காலத் தடை

author img

By

Published : Feb 11, 2022, 7:09 PM IST

சென்னை உயர் நீதிமன்றம்

கங்கைகொண்ட சோழபுரம் கோயிலில் பாதுகாக்கப்பட்ட பகுதிகளில் புதிய கட்டுமானங்கள் மேற்கொள்ள இந்தியத் தொல்லியல் துறைக்குத் தடைவிதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை: அரியலூர் மாவட்டத்தில் உள்ள கங்கைகொண்ட சோழபுரத்தில், முதலாம் ராஜேந்திர சோழன் ஆட்சிக் காலத்தில் கட்டப்பட்ட கங்கைகொண்ட சோழீஸ்வரர் கோயில், ஆயிரம் ஆண்டுகள் பழமைவாய்ந்தது.

யுனெஸ்கோவால் புராதன சின்னமாக அறிவிக்கப்பட்ட இக்கோயிலில், பாதுகாக்கப்பட்ட பகுதிகளில் கட்டுமானங்கள் மேற்கொள்ள தடைவிதிக்கக் கோரி தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் தாலுகாவில் டி. மாங்குடியைச் சேர்ந்த வழக்கறிஞர் பாலகுரு என்பவர் பொதுநல வழக்கைத் தாக்கல்செய்துள்ளார்.

அனுமதியில்லா கட்டுமான பணி

அந்த மனுவில், இந்தியத் தொல்லியல் துறை சார்பில் இந்தக் கோயிலில் மூன்று கோடி ரூபாய் செலவில் புத்தக மையம், உணவகம், கழிப்பறைகள் என அடிப்படை வசதிகள் ஏற்படுத்தப்பட உள்ளதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன.

மேலும், பாதுகாக்கப்பட்ட கோயிலில் புதிய கட்டுமானங்களை மேற்கொள்ள சட்டப்படி சம்பந்தப்பட்ட அலுவலர்களிடம் அனுமதி பெற வேண்டும் எனவும், அனுமதியில்லாமல் கட்டுமானங்கள் மேற்கொள்வது குற்றம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொல்லியல் துறைக்கு உத்தரவு

இந்த வழக்கு தலைமை நீதிபதி முனீஷ்வர்நாத் பண்டாரி, நீதிபதி பரத சக்கரவர்த்தி அடங்கிய அமர்வு முன் இன்று (பிப்ரவரி 11) மீண்டும் விசாரணைக்கு வந்தது.

சோழீஸ்வரர் கோயில், கங்கைகொண்ட சோழபுரம்
சோழீஸ்வரர் கோயில், கங்கைகொண்ட சோழபுரம்

அப்போது, தமிழ்நாடு அறநிலையத் துறை அரியலூர் மாவட்ட உதவி ஆணையர் தரப்பில் தாக்கல்செய்யப்பட்ட அறிக்கையில், கோயிலில் பாதுகாக்கப்பட்ட பகுதியிலிருந்து 38, 39 மீட்டர் தூரத்தில் கட்டுமானங்கள் கட்டப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது.

இதைச் சுட்டிக்காட்டிய நீதிபதிகள், தொல்லியல் துறை சட்ட விதிகளின்படி, 100 மீட்டர் தூரத்துக்கு அப்பால் கட்டுமானங்கள் இருக்க வேண்டும் என்றும், ஆனால் சொந்த விதிகளையே தொல்லியல் துறை காற்றில் பறக்கவிட்டு கட்டுமானங்கள் மேற்கொண்டுள்ளதாகக் கூறி, கோயிலில் கட்டுமானங்கள் மேற்கொள்ளத் தடைவிதித்து உத்தரவிட்டனர்.

வழக்குத் தொடர்பாக தொல்லியல் துறை பதிலளிக்க இரு வார அவகாசம் வழங்கிய நீதிபதி, கட்டடங்கள் கட்டியிருந்தால் இந்த விதிமீறலுக்கு யார் காரணம் எனவும் விளக்கமளிக்கவும் தொல்லியல் துறைக்கு உத்தரவிட்டு விசாரணையைத் தள்ளிவைத்தனர்.

இதையும் படிங்க: காவிரி நீர்: மேகதாது பிரச்சினை குறித்து விவாதிக்க தமிழ்நாடு அரசு கடும் எதிர்ப்பு!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.