சென்னை: 2019ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தல் நேரத்தில் வேலூர் தொகுதியின் திமுக வேட்பாளராக இருந்த கதிர் ஆனந்தின் வீடு மற்றும் அலுவலகங்களில் வருமானவரித்துறை சோதனை நடத்தியது.
மேலும், அவருடன் தொடர்புடையவர்கள் எனத் தாமோதரன், விமலா ஆகியோர் வீடுகளிலும் வருமான வரித்துறை சோதனை நடத்தியது.
அப்போது விமலாவின் வீட்டில் 11 கோடியே 48 லட்ச ரூபாயைக் கைப்பற்றிய நிலையில், அந்தப் பணம் தன்னுடையது என அவரது சகோதரர் சீனிவாசன் உரிமை கோரினார்.
வருமான வரித்துறை நோட்டீஸ்
ஆனால், அந்தப் பணம் கதிர் ஆனந்தின் வருமானம் என ஏன் அறிவிக்கக்கூடாது என்று விளக்கம் அளிக்கும்படி வருமான வரித்துறை தரப்பில், கதிர் ஆனந்திற்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டது.
அதற்குக் கதிர் ஆனந்த் விளக்கம் அளித்த பின்னரும், அதை நிராகரித்துவிட்டு, அந்தப் பணம் கதிர் ஆனந்தின் வருமானம் என அறிவித்ததுடன், அதற்கான வரியைச் செலுத்த வருமான வரித்துறை உத்தரவிட்டது.
விளக்கமளித்த பிறகும் நடவடிக்கை
இதையடுத்து, இந்த உத்தரவை எதிர்த்து கதிர் ஆனந்த் தொடர்ந்த வழக்கு நீதிபதி சி.சரவணன் முன்பு இன்று (டிச.6) விசாரணைக்கு வந்தது.
அப்போது, பறிமுதல் செய்யப்பட்ட பணத்தின் உரிமையாளருக்கும், தனக்கும் தொடர்பில்லை என்பதை விளக்கமளித்த பிறகும், நடவடிக்கை எடுப்பதாகக் கதிர் ஆனந்த் தரப்பில் வாதிடப்பட்டது.
இடைக்காலத் தடை
அதன் பின்னர் நீதிபதி, வரி வசூலிக்கும் வருமான வரித்துறை நடவடிக்கைகளுக்கு இடைக்காலத் தடை விதித்தும், வழக்கு குறித்து வருமான வரித்துறை பதிலளிக்க உத்தரவிட்டும், விசாரணையை ஜனவரி 3ஆம் தேதிக்குத் தள்ளிவைத்து உத்தரவிட்டார்.
இதையும் படிங்க: மதுரை இளம்பெண்ணுக்கு மருத்துவர் பாலியல் தொல்லை - பணியிடை நீக்க செய்த நிர்வாகம்