ஆர்எஸ்எஸ் பேரணிக்கு அனுமதி -தமிழக அரசு மேல்முறையீடு செய்ய கே.எஸ்.அழகிரி வலியுறுத்தல்

author img

By

Published : Oct 1, 2022, 2:13 PM IST

Etv Bharat

ஆர்எஸ்எஸ் பேரணிக்கு நீதிமன்றத்தின் ஒப்புதல் பெற்றாலும், அரசு மேல்முறையீடு செய்யவேண்டும் எனவும் இதுபோன்ற அமைப்புகளை தமிழகத்தில் நடமாட செய்வது நல்லதல்ல என்று தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்.

சென்னை: நடிகர் சிவாஜி கணேசனின் 95வது பிறந்த நாளை முன்னிட்டு சென்னையிலுள்ள சத்தியமூர்த்தி பவனில் அவரது திருவுருவப் படத்திற்கு தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி மலர்தூவி மரியாதை செலுத்தினார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், "உலகம் போற்றக்கூடிய ஒரு நடிகர். உலகத்தில் எந்த ஒரு நடிகரும் அவருக்கு இணை இல்லை, அவரை போன்று திரையில் தோன்றியது கிடையாது. அவரை போன்ற ஒரு நடிகர், காங்கிரஸ் கட்சிக்கு சொந்தமாக இருந்தது காமராஜரின் மிக நெருக்கமாக இருந்தது எங்களுக்கு மிகப்பெரிய பாக்கியம்.

தேசியத்தை அவர் திரையில் கொண்டு வந்தவர். இந்த தேசத்தின் வளர்ச்சி எப்படி, சுதந்திரம் எப்படி கொண்டு வரப்பட்டது என்பதை எளிதில் மக்களுக்கு திரையில் எடுத்துக் கூறினார். அவர் புகழ் ஓங்க.. சிவாஜியின் சிலையை மக்கள் பார்வைக்கு தற்போது வைக்கப்பட்டுள்ளது. கடந்த காலத்தில் சிறை வைக்கப்பட்டுள்ளது போன்று இருந்தது. அதை, தற்போது பொதுவெளிக்கு கொண்டு வந்துள்ளது இந்த அரசு. இதை காங்கிரஸ் கட்சி வரவேற்கிறது.

வன்முறையே ஆர்எஸ்எஸ் பின்புலம்: நீதிமன்றத்தின் பார்வையில் ஆர்எஸ்எஸ் பேரணி குறித்து நிலைப்பாடு என்னவென்று தெரியவில்லை. எந்த வகையில் அனுமதி அளிக்கிறார்கள் என்று புரியவில்லை. ஆர்எஸ்எஸ் வன்முறை பின்புலம் கொண்ட ஒரு அமைப்பு. அந்த வன்முறை காரணமாகத்தான் காந்தி கொல்லப்பட்டார்; பாபர் மசூதி இடிக்கப்பட்டது. குஜராத்தில் ஆயிரக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டனர். இவ்வளவு பின்பலம் கொண்ட ஒரு அமைப்பு ஊர்வலம் நடத்த நாம் அனுமதிக்கக் கூடாது.

காங்கிரஸ் சார்பில் நடிகர் சிவாஜியின் திருவுருவப் படத்திற்கு மரியாதை
காங்கிரஸ் சார்பில் நடிகர் சிவாஜியின் திருவுருவப் படத்திற்கு மரியாதை

எந்த ஒரு வன்முறையும் நடைபெறாது என்று நீதிமன்றத்தில் தெரிவித்து இருக்கிறார்கள். ஆனால், பாபர் மசூதியை இடிக்க மாட்டோம் என்று அன்று உறுதி அளித்தார்கள். ஆனால், கலாச்சாரத்துக்கு எதிராக ஒரு இறை வழிபாட்டு தளத்தினை நாசம் செய்தார்கள். நீதிமன்றத்தின் ஒப்புதல் பெறப்பட்டாலும், சட்ட ஒழுங்கு என்பது மாநிலத்தின் கடமை. எனவே, மீண்டும் தமிழக அரசு மேல் முறையீடு செய்ய வேண்டும். இதுபோன்ற அமைப்பை நடமாட வைப்பது நல்லதல்ல.

நீதிமன்றம் மற்றும் தமிழக அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும். நீதிமன்றத்தில் தமிழக அரசு தன் கருத்தை சொல்ல வேண்டும். ராகுல் காந்தி பயணத்தில் மக்கள் எழுச்சியைப் பார்த்திருப்பீர்கள், சுதந்திரம் பெறுவதற்கு முன்பு தண்டி பேரணி எப்படி நடைபெற்றது. அது போன்று தற்போது நடைபெற்று வருகிறது. இது காங்கிரஸ் கட்சிக்கும் மகிழ்ச்சி; மக்களுக்கும் மகிழ்ச்சி, ஜனநாயக கட்சிக்கும் மகிழ்ச்சி" என தெரிவித்தார்.

இதையும் படிங்க: கே.எஸ்.அழகிரியின் பேரன் மீது தாக்குதல்.. அறநிலையத்துறை அதிகாரி மீது வழக்குப்பதிவு

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.