இலங்கைக்கு தமிழ்நாடு அரசு வழங்கும் நிவாரணப்பொருட்களை வழங்க 4 ஐ.ஏ.எஸ் அலுவலர்கள் அடங்கிய குழு அமைப்பு!

author img

By

Published : May 12, 2022, 9:32 PM IST

தமிழ்நாடு அரசு

இலங்கையில் நிலவும் வரலாறு காணாத பொருளாதார நெருக்கடியை சமாளிக்க உதவும் விதமாக தமிழ்நாடு அரசு, இலங்கைக்கு வழங்கும் நிவாரணப் பொருட்களை அனுப்ப 4 ஐ.ஏ.எஸ் அலுவலர்கள் அடங்கிய குழு அமைத்து அரசு உத்தரவிட்டுள்ளது.

கடந்த 70 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு இலங்கையில் மிக மோசமான பொருளாதார நெருக்கடி நிலவி வருகிறது. இதனால் இலங்கையில் பல்வேறு பகுதிகளிலும் போராட்டங்கள் வெடித்துள்ளன. போராட்டங்களைத் தொடர்ந்து இலங்கையில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. அங்கு பிரதமராக இருந்த மஹிந்த ராஜபக்ச பதவியில் இருந்து விலகி உள்ளார்.

இந்த நிலையில், இலங்கைக்கு பொருளாதார ரீதியாகவும், மருந்து, அரிசி, பால் பவுடர் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்கள் வழங்கி தமிழ்நாடு அரசு உதவும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சட்டப்பேரவையில் சிறப்புத் தீர்மானம் கொண்டு வந்தார். அத்தீர்மானத்தில், குறிப்பாக ரூ.80 கோடி மதிப்புள்ள 40 ஆயிரம் டன் அரிசி, ரூ.28 கோடி மதிப்புள்ள 137 மருந்து பொருட்கள், ரூ.15 கோடி மதிப்பில் குழந்தைகளுக்கான 500 டன் பால் பவுடர் ஆகியவற்றை இலங்கையில் வாழக்கூடிய அனைத்து மக்களுக்கும் வழங்க இருப்பதாகத் தெரிவித்தார்.

.

இந்த நிலையில், இலங்கைக்கு பொருட்கள் அனுப்ப ஏதுவாக அயலகத்தமிழர் நலன் மற்றும் மறுவாழ்வுத்துறை ஆணையர் ஜெசிந்தா லாசரஸ், ஆவின் நிர்வாக இயக்குநர் சுப்பையன், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழக மேலாண்மை இயக்குநர் பிரபாகர், தமிழ்நாடு மருத்துவ சேவைகள் கார்ப்பரேஷன் மேலாண் இயக்குநர் தீபக் ஜேக்கப் ஆகிய 4 ஐ.ஏ.எஸ் அலுவலர்கள் அடங்கிய குழு அமைத்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.
இலங்கை அரசிற்கு நிவாரணம் வழங்க 4 ஐ.ஏ.எஸ் அலுவலர்கள் அடங்கிய குழு
இலங்கை அரசிற்கு நிவாரணம் வழங்க 4 ஐ.ஏ.எஸ் அலுவலர்கள் அடங்கிய குழு
இந்த குழு அரிசி, மருந்து, பால் பவுடர் உள்ளிட்டப் பொருட்களை சென்னை மற்றும் தூத்துக்குடி ஆகிய இரு இடங்களில் இருந்து கப்பல் வழியாகவும், சில மருந்துப் பொருட்களை விமானம் வழியாகவும் அனுப்ப நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது.
இந்தப் பணிகளுக்கு மத்திய அரசு ஏற்கெனவே அனுமதி அளித்திருந்தாலும், இறுதிகட்ட ஒப்புதல் இந்த வார இறுதிக்குள் வழங்கப்பட்டவுடன் இலங்கைக்கு பொருட்களை அனுப்பும் வகையில் பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இதையும் படிங்க: நாட்டை விட்டு வெளியேறக் கூடாது - மகிந்த ராஜபக்சவுக்கு அதிரடி உத்தரவிட்ட இலங்கை நீதிமன்றம்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.