எடப்பாடி பழனிசாமி வழக்கில் அறப்போர் இயக்கத்திற்கு நோட்டீஸ்!

எடப்பாடி பழனிசாமி வழக்கில் அறப்போர் இயக்கத்திற்கு நோட்டீஸ்!
நெடுஞ்சாலைத்துறை டெண்டர்களில் முறைகேடு என அவதூறு பரப்புவதாக முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடர்ந்த வழக்கில் அறப்போர் இயக்கத்திற்கு நோட்டீஸ் அனுப்ப சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை:2016-21ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற அதிமுக ஆட்சியில் முதலமைச்சராக இருந்த எடப்பாடி பழனிசாமி, நெடுஞ்சாலைத்துறையையும் தன் கட்டுப்பாட்டில் வைத்திருந்தார். அப்போது 2019 முதல் 2021ஆம் ஆண்டுகள் வரையில் தஞ்சாவூர், சிவகங்கை, கோவை மாவட்டங்களின் நெடுஞ்சாலை டெண்டர் பணிகளில் முறைகேடுகள் நடந்துள்ளதாக தலைமைச்செயலர், நெடுஞ்சாலைத்துறை மற்றும் லஞ்ச ஒழிப்புத்துறை ஆகியவற்றிடம் அறப்போர் இயக்கத்தின் சார்பில் ஜூலை 22ஆம் தேதி புகார் அளிக்கப்பட்டு இருந்தது.
நல்ல நிலையில் உள்ள சாலைகளை மீண்டும் போடுவதற்கு இந்த டெண்டர்களில் சேர்த்ததன் மூலமும், திட்டமதிப்பு அதிகப்படுத்தப்பட்டு இருந்ததாலும், அரசுக்கு 692 கோடி ரூபாய் இழப்பு ஏற்படுத்தியதாகப் புகாரில் குறிப்பிட்டிருந்தது. இதுதொடர்பாக வெளியான செய்தியை அறப்போர் இயக்கம் சமூக வலைதளங்களில் வெளியிட்டு இருந்தது.
இதனால் தனக்கு அவப்பெயர் ஏற்படுத்தியதுடன், மன உளைச்சலும் ஏற்படுத்தியுள்ளதாகக்கூறி அறப்போர் இயக்கம் மற்றும் அதன் ஒருங்கிணைப்பாளர் ஜெயராம் வெங்கடேஷ், இணை ஒருங்கிணைபாளர் ஜாகிர் உசேன் ஆகியோருக்கு எதிராக சென்னை உயர் நீதிமன்றத்தில் முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வழக்குத்தொடர்ந்தார்.
இந்த வழக்கிற்கு மான நஷ்ட ஈடாக ஒரு கோடியே 10 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்கி உத்தரவிடவும், தனக்கு எதிராக உண்மைக்குப்புறம்பான கருத்துகளை வெளியிடவும் அறப்போர் இயக்கத்திற்கும், அதன் நிர்வாகிகளுக்கும் தடை விதிக்க வேண்டுமென கோரிக்கை வைத்தார்.
இந்த மனுவானது நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, வழக்கு குறித்து அறப்போர் இயக்கம் மற்றும் அதன் நிர்வாகிகளுக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டு வழக்கு விசாரணையை ஆகஸ்ட் 11ஆம் தேதிக்கு தள்ளிவைத்தார்.
அப்போது இடைக்கால தடை விதிக்கக்கோரி எடப்பாடி பழனிசாமி தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. ஆனால் அறப்போர் இயக்கத்தின் தகவல்கள் அனைத்தும் வெளியாகிவிட்டதால், தடை விதிக்க அவசியமில்லை எனக் கூறிய நீதிபதி, நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பிய பிறகும் தொடர்ந்து கருத்துகளைப்பதிவிட்டால் அதை நீதிமன்ற கவனத்திற்கு கொண்டுவரும்படி, எடப்பாடி பழனிசாமி தரப்புக்கு அறிவுறுத்தியுள்ளார்.
இதையும் படிங்க:அடுத்தடுத்து சினிமா தயாரிப்பாளர்களுக்கு தொடர்புடைய இடங்களில் ரெய்டு - பரபரப்பில் திரைத்துறை!
